வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவியிடம் அத்துமீறல்.. விசிக நிர்வாகி போக்சோ சட்டத்தில் கைது!
சென்னை: சென்னை தண்டையார்பேட்டையில் வீட்டில் தனியாக இருந்த கல்லூரி முதலாம் ஆண்டு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக விசிக நிர்வாகியை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துறைமுகம், கப்பல்கூட தொழிலாளர், விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் 63 வயது நன்மாறன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வருபவர் நன்மாறன் (வயது 63). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துறைமுகம், கப்பல்கூட தொழிலாளர், விடுதலை முன்னணி பொதுச்செயலாளர் பதவி வகித்து வந்துள்ளார். இந்த நிலையில் போக்சோ வழக்கில் நன்மாறன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதே பகுதியினை சேர்ந்த 17 வயது இளம்பெண் ஒருவர், அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
கல்லூரிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த மாணவி தனியாக இருந்துள்ளார். இதனை கவனித்த விசிக நிர்வாகி நன்மாறன், கல்லூரி மாணவியின் வீட்டுக்குள் புகுந்து மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன மாணவி கத்தி கூச்சலிட்டார். இதையடுத்து அவர் தப்பி ஓட முயன்றுள்ளார்.
இதனையடுத்து நடந்த சம்பவம் பற்றி கல்லூரி மாணவி பெற்றோரிடம் கூற, அவர்கள் இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் கல்லூரி மாணவியின் வீட்டுக்குள் புகுந்தது விசிக நிர்வாகி நன்மாறன் என்று போலீசார் உறுதி செய்தனர். இதையடுத்து அவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
நன்மாறன் மீது ஆபாசமாக பேசுதல், பாலியல் துன்புறத்தல், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் இதற்கு முன்பே மாணவி சாலையில் தனியாக நடந்து செல்லும் போது சில அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து போலீசார் நன்மாறனை திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். தொடர்ந்து அவரை புழல் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. 63 வயது நபர் கல்லூரி மாணவியிடம் அத்துமீறலில் ஈடுபட முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications