அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே தேர்வு கட்டணம்.. விரைவில் அறிவிப்பு.. பொன்முடி சொன்ன குட் நியூஸ்!
அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான தேர்வு கட்டணம் நிர்ணயிக்க குழு அமைக்க உள்ளதாக பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை: வரும் ஆண்டுகளில் அனைத்து பல்கலைக்கழகங்களிலும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான தேர்வு கட்டணம் வசூலிப்பதற்கான குழு அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். கடந்த ஒரு வாரமாக பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் தேர்வு கட்டணம் அதிகரித்துள்ளதாக போராடி வந்த சூழலில், அவர்களிடம் இருந்து பழைய தேர்வு கட்டணமே வசூல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பொன்முடி கூறியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்களுடன் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆலோசனை மேற்கொண்டார்.
இந்த ஆலோசனையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்குதல், வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பத்திற்கு ஏற்ப மாநில பாடத்திட்டங்களை வகுப்பது, முதலமைச்சரின் ஆராய்ச்சி நிதி திட்டத்தின் கீழ் மாணவர்களை தேர்வு செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

பொன்முடி பேட்டி
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் பொன்முடி கூறுகையில், அனைத்து பல்கலைக்கழகங்களும் ஒரே போல் செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து பல்கலைக்கழகங்களிலும் ஒரே மாதிரியான ஊதியம், தேர்வுக்கட்டணம், நிர்வாகம் குறித்து கலந்து ஆலோசிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக விரைவில் ஒரு குழு நியமிக்கப்பட உள்ளது. அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் இன்னும் ஓரிரு மாதங்களில் அந்த முடிவுகள் அறிவிக்கப்படும். குறிப்பாக தேர்வுக் கட்டணம் குறித்து அறிவிக்கப்படும்.

அனைவருக்கும் ஒரே கட்டணம்
அதேபோல் பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவர்கள் தேர்வுக்கட்டணம் அதிகரித்துள்ளதாக கடந்த ஒரு வாரமாக போராடி வருகின்றனர். பழைய கட்டணமே மாணவர்களிடமிருந்து வசூலிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் போராட்டங்களை கைவிட வேண்டும். இனி பழைய கட்டணமே வசூலிக்கப்படும். அடுத்த ஆண்டு தேர்வு நடக்கும் போது, தமிழ்நாடு முழுவதும் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிப்பதற்காகவே கமிட்டி நிறுவப்பட்டு ஏற்பாடுகள் செய்துள்ளோம் என்று தெரிவித்தார்.

போலி டாக்டர் பட்டம் சர்ச்சை
தொடர்ந்து, போலி டாக்டர் பட்டம் விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, இனி எந்த பல்கலைக்கழகத்திலும் தனியார் அளவில் கூட்டம் நடத்தப்பட்டாலும், பல்கலைக்கழகங்கள் சார்பில் நடத்தப்பட்டாலும் உயர்கல்வித்துறை செயலரின் அனுமதி பெற்ற பின்னரே டாக்டர் பட்டம் வழங்குவது போன்ற நிகழ்வுகளை நடத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல் வேறு யாரையும் அழைக்க வேண்டும் என்றாலும் உயர்கல்வித்துறை செயலரிடம் ஒப்புதல் பெற்ற பின்னரே நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

துணைவேந்தர்கள் சட்ட மசோதா
தொடர்ந்து துணைவேந்தர்கள் சட்ட மசோதா தொடர்பான கேள்விக்கு, ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவையே அனுப்பி வைத்திருக்கிறார். ஆளுநர் அவரது அதிகாரத்தை அவ்வளவு எளிதாக விட்டுக் கொடுப்பாரா.. வரும் காலங்களில் அதற்கான தீர்வு கிடைக்கும். அதற்கான முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். சரியான நடவடிக்கை வரும் என்று கருதுகிறோம். இதுதொடர்பாக ஏற்கனவே விளக்கம் கேட்டிருந்தார். அதற்கான பதில் அளிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications