தேதி குறிச்சாச்சு! நிதி ஒதுக்காத மத்திய அரசு.. திமுக அரசுக்கு ஆதரவாக களத்தில் இறங்கும் காம்ரேட்ஸ்!
சென்னை: பேரிடர் நிவாரண நிதி வழங்காத மத்திய அரசைக் கண்டித்து வரும் ஜனவரி 8ஆம் தேதி, தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத அதிகனமழை காரணமாக, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக, இந்த கனமழை மற்றும் பெருவெள்ளத்தின் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது. தென் மாவட்டங்களில் வெள்ள நிவாரணம் மற்றும் மறுசீரமைப்பு பணிகளுக்கு மத்திய அரசிடம் நிதி கோரியது தமிழக அரசு.

மேலும், பிரதமர் மோடியை டெல்லியில் நேரில் சந்தித்த தமிழக முதல்வர் ஸ்டாலின், பேரிடர் நிதி தொடர்பான கோரிக்கைகளை முன்வைத்தார். எனினும், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், தேசிய பேரிடராக அறிவிக்க முடியாது, அது நடைமுறையில் இல்லை என்றார். மேலும், 2 தவணைகளாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். ஆனால், மத்திய அரசு விடுவித்த நிதி, வழக்கமாக எல்லா மாநிலங்களுக்கும் வழங்கப்படுவது தான், சென்னை மற்றும் தென் மாவட்ட வெள்ள நிவாரணத்தை விரைந்து ஒதுக்க வேண்டும் என தமிழக அரசு கோரி வருகிறது.
இந்நிலையில், தமிழக அரசுக்கு ஆதரவாக களத்தில் இறங்குகிறது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மழை வெள்ள நிவாரணத்திற்கு நிதி வழங்காமல் மத்திய அரசு அலட்சியத்தோடு செயல்படுவதாகவும், தமிழ்நாட்டை வஞ்சிப்பதாகவும் குற்றம்சாட்டியுள்ள சிபிஐ, மத்திய பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. சிபிஐ மாநில செயலாளர் முத்தரசன் இதுதொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிசம்பர் 3, 4 தேதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த பெருமழையால் தலைநகர் சென்னையும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. மக்களின் இயல்பு வாழ்க்கை நிலைகுலைந்து போனது. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் சிக்கி தவித்த மக்களை பாதுகாக்கவும், மீட்டு மறுவாழ்வு தொடங்கவும் தமிழக அரசு போர்க்கால வேகத்தில் செயல்பட்டது. பேரிடர் நிவாரண உதவிகளுக்கு நிதியுதவி வழங்க வேண்டிய மத்திய அரசு மாற்றாந்தாய் போக்கில் அலட்சியம் காட்டி வருகிறது.
இந்த நிலையில் டிசம்பர் 18ஆம் தேதி தென் தமிழகத்தில் பெய்த பெருமழையில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாநகர தெருக்களிலும், வீடுகளிலும் வெள்ளம் புகுந்து தேங்கியதால் மக்கள் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
சுமார் 2 கோடி மக்கள் வாழும் பகுதி பாதிக்கப்பட்டிருப்பதை கருத்தில் கொண்டு மத்திய அரசு தேசிய பேரிடராக அறிவித்து, தமிழக முதல்வர் கோரியுள்ள ரூபாய் 21 ஆயிரத்து 692 கோடியை முழுமையாக உடனடியாக வழங்க வேண்டும். ஆனால் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழக அரசின் மீதும், அமைச்சர்கள் மீதும் அவதூறு பேசி, தமிழக மக்களை அவமதிக்கும் மலிவான அரசியலில் ஈடுபட்டு வருவதை வெந்த புண்ணில் வேல் கொண்டு தாக்குவதாக அமைந்துள்ளது.

மத்தியக் குழு விரிவாக பயணம் செய்து, வெள்ளப் பாதிப்புகளை ஆய்வு செய்துள்ளது. மத்திய அரசின் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் பார்வையிட்டு சென்றுள்ளார். தேவையான உதவிகளை செய்வதாக பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலினிடம் உறுதியளித்துள்ளார்.
இவ்வளவுக்கும் பிறகு இதுவரை தமிழகம் சந்தித்த இயற்கை சீற்றப் பேரழிவை எதிர்கொள்ள பேரிடர் நிவாரண நிதி வழங்காத மத்திய அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்தும், தமிழக அரசு கோரியுள்ள பேரிடர் கால உதவி நிதியை முழுமையாக வழங்கவும் வலியுறுத்தி ஜனவரி 8, 2024 திங்கள்கிழமை தமிழகம் முழுவதும் மத்திய அரசு அலுவலகங்கள் முன்பு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்பாட்டம் நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications