இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது சமூக விரோதிகள் தாக்குதல்.. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகம் மீது சமூக விரோதிகள் தாக்குதல் நடத்தி உள்ளதாகவும், தாக்குதலுக்கான பின்னணி குறித்து முறையான விசாரணை நடத்திட வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைமை அலுவலகம் சென்னை தியாகராய நகரில் உள்ள சிவாஜி கணேசன் சாலையில் இருக்கிறது. நேற்று இரவு (அக் 27) ஒன்பது மணியளவில் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பாட்டில் மற்றும் கற்கள் வீசி திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். நல்ல வேளையாக இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்பட வில்லை. சம்பவம் குறித்து மாம்பலம் போலீசில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக புகார் அளிக்கப்பட்டது. இந்த தாக்குதலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 4 பேரை போலீசார்கைது செய்தனர்.

இந்நிலையில் இந்த சம்பவத்தை கண்டித்து அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி இன்று வெளியிட்டிருந்த அறிக்கையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் , சென்னை தியாகராய நகரில் உள்ள அவர்களது தலைமை அலுவலகம் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தி உள்ள சம்பவத்திற்கு எனது கடும் கண்டனங்கள். இந்த விடியா திமுக ஆட்சியில் தனிநபர் தொடங்கி, ஆளுநர் மாளிகை , அரசியல் கட்சி இயக்கங்கள் , அதுவும் திமுகவின் பிரதான கூட்டணி கட்சியாக அங்கம் வகிக்கும் இந்திய கம்யுனிஸ்ட் கட்சி வரை எங்குமே யாருக்குமே பாதுகாப்பில்லாத அவல நிலை நீடிப்பதை தினம்தினம் ஒரு சம்பவம் நிரூபிக்கிறது.
நான் ஏற்கனவே பலமுறை குறிப்பிட்டது போல இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு தொடர்ந்து கேள்வி குறியாகவே இருக்கிறது. தங்களது கூட்டணி கட்சியின் அலுவலகத்தின் மீது தாக்குதலுக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து , கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறேன்" என்று கூறியிருந்தார்.
இதனிடையே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில், "இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை, தி.நகரில் உள்ள தமிழ்நாடு மாநிலக்குழு தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் மீது நேற்று இரவு (27.10.2023) சமூக விரோதக் கும்பல்கள் பாட்டிலையும், கற்களையும் வீசி தொடர் தாக்குதல் நடத்தியுள்ளனர். சமூகவிரோத கும்பலின் இந்த தாக்குதலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்திய சமூக விரோதிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து உரிய விசாரணை மேற்கொண்டு கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாத வண்ணம் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமெனவும், தாக்குதலுக்கான பின்னணி குறித்து முறையான விசாரணை நடத்திட வேண்டுமெனவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு தமிழ்நாடு அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது." இவ்வாறு கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications