பிரியாணியால் வம்பில் மாட்டிய பிரேமலதா.. திடீரென பறந்த புகார்.. விஜயகாந்த் நினைவிடத்தில் என்ன நடந்தது
சென்னை: பிரியாணியால் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் புது வித பிரச்சினையில் சிக்கியுள்ளார். இது தொடர்பாகத் தேர்தல் பறக்கும் படையினர் அவர் மீது புகாரும் அளித்துள்ளனர்.
நாடு முழுக்க விரைவில் லோக்சபா தேர்தல் நடைபெறுகிறுத. நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

தேர்தலுக்கு கொஞ்சக் காலமே இருக்கும் நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ளன. இதற்கிடையே தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இப்போது புது வித பிரச்சினையில் சிக்கியுள்ளார்.
தேர்தல் கூட்டணி: அனைத்து அரசியல் கட்சிகளுமே தேர்தல் கூட்டணியை இறுதி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. தேமுதிகவை பொறுத்தவரை அவர்கள் அதிமுக உடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். மேலும், பாஜக உடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், எந்தக் கட்சிய உடனும் கூட்டணி இறுதியாகவில்லை. இது ஒரு பக்கம் நடக்கப் பிரச்சாரத்தையும் ஆரம்பிக்கும் முனைப்பில் இருக்கிறார்.
இந்த முறை தேர்தல் சமயத்தில் தமிழ்நாட்டில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் தேர்தல் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகிறார்கள். இது தொடர்பாகத் தேர்தல் ஆணைய தலைவர் ராஜீவ் குமரே விளக்கமளித்திருந்தார். தமிழ்நாட்டில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்படும் என்று அவர் கூறியிருந்தார். முறையான ஆவணம் இன்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.
தேமுதிக: தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் மறைந்த பிறகு கோயம்பேட்டில் அமைந்துள்ள தேமுதிக தலைமை அலுவலகத்திலேயே அவர் அடக்கம் செய்யப்பட்டு, அங்கேயே அவருக்கு நினைவிடமும் அமைக்கப்பட்டது அனைவருக்கும் தெரியும். அதன் பிறகு அங்கே வரும் மக்களுக்குத் தினசரி உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. விஜயகாந்த் இருந்த போது, வழங்கப்பட்டது போலவே இப்போதும் உணவுகள் எடுத்து வரப்படுகிறது.
பிரியாணியால் வந்த சிக்கல்: இந்நிலையில் நேற்றைய தினம் தேமுதிக அலுவலகத்தில் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் 300 பெண்களுக்கு இலவச எம்பிராய்டிங் பயிற்சி வழங்கப்பட்டது. அதேபோல கட்சி அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் அனைவருக்கும் பிரியாணி வழங்கப்பட்டது. நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், இதுபோன்ற பொதுமக்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை நடத்த அரசியல் கட்சிகள் அனுமதி பெற வேண்டும் என்பதே விதிமுறை.
ஆனால், தேமுதிக இதுபோல எந்தவொரு அனுமதியையும் பெறவில்லை என்று தெரிகிறது. அனுமதி பெறாமல் நிகழ்ச்சி நடத்தி பிரியாணி தையல் பயிற்சி ஆகியவற்றை அவர் வழங்கியுள்ளார். இந்த விவகாரம் குறித்து விருகம்பாக்கம் தேர்தல் பொறுப்பு அதிகாரி ஒருவர், போலீஸில் பிரேமலதா விஜயகாந்த் மீது புகார் அளித்துள்ளார். அதன்படி இதன்பேரில், கோயம்பேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லோக்சபா தேர்தலைப் பொறுத்தவரை ஏற்கனவே பாமக பாஜக உடன் கூட்டணி அமைப்பதாக அறிவித்துள்ள நிலையில், தேமுதிக நிலைப்பாடு இன்னும் சில நாட்களில் தெரியும் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications