உச்சக்கட்ட குழப்பம்.. பெங்களூர்- கிருஷ்ணகிரி சாலையில் என்ன தான் நடக்கிறது! கதறும் மக்கள்.. என்னாச்சு
சென்னை: புத்தாண்டு தினமான இன்று பெங்களூரு- ஓசூர் சாலையில் மிக மோசமான டிராபிக் நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் பல கிமீ தூரத்திற்கு அணிவகுத்து நிற்கிறது.
2024 புத்தாண்டை இன்று நாம் அனைவரும் வரவேற்றோம். இது நீண்ட வார இறுதியாக அமைந்ததால் பொதுமக்கள் பலரும் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்பி இருந்தனர். பள்ளிகளிலும் அரையாண்டு விடுமுறை என்பதும் இதற்கு முக்கிய காரணம்.

இன்றுடன் விடுமுறை முடியும் நிலையில், பொதுமக்கள் சொந்த ஊர்களில் இருந்து திரும்பி வருகின்றனர். இதனால் முக்கியமான பல சாலைகளில் கடுமையான டிராபிக் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
டிராபிக் நெரிசல்: இதற்கிடையே பெங்களூரு- ஓசூர் சாலையில் மிக மோசமான வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் சுமார் 3+ கிமீ தூரத்திற்குப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.. தமிழ்நாடு கர்நாடக எல்லையில் கர்நாடக பகுதியில் பல பிரத்யேக லைன்கள் உள்ளன. மேலும், தனியாகச் சோதனை சாவடிகளும் இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் இருந்து கர்நாடகாவுக்குச் செல்லும் வாகனங்கள் பிரச்சினை இல்லாமல் ஸ்மூத்தாக சென்றுவிடுகிறது. அங்கே பெரியளவில் வாகன நெரிசல்கள் இல்லை.
அதேநேரம் கர்நாடக எல்லையில் இருந்து ஓசூருக்குள் நுழையும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தமிழ்நாடு அரசின் சோதனை சாவடிகள் நெடுஞ்சாலையின் நடுவிலேயே அமைந்துள்ளது. இது போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்துவதாகக் கூறப்படுகிறது. எனவே, தமிழ்நாடு அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
4 மணி நேரம்: கர்நாடக தலைநகர் பெங்களூரில் உள்ள அத்திபெலே என்ற இடத்தில் இருந்து தேசிய நெடுஞ்சாலை 44இல் கிருஷ்ணகிரி வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் போக்குவரத்து ஸ்தம்பித்து நிற்கிறது. பெங்களூரில் இருந்து கிளம்பியவர்கள் 4 மணி நேரம் கடந்தும் கிருஷ்ணகிரியை அடையவில்லை என்று இணையத்தில் புலம்பி வருகின்றனர்.

இந்த டிராபிக் நெரிசலுக்குச் சோதனை சாவடிகள் காரணம் என்ற போதிலும், கிருஷ்ணகிரி மருத்துவக் கல்லூரி அருகே நடந்த லாரி விபத்தும் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது. அதேபோல கிருஷ்ணகிரி பகுதியில் அமைந்துள்ள சுங்கச்சாவடியும் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது.
சாடும் நெட்டிசன்கள்: இது குறித்து நெட்டிசன்கள் தங்கள் சமூக வலைத்தளங்களில் கூறுகையில், "கடுமையான டிராபிக் நெரிசலுக்கு முக்கிய காரணமே கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி தான். தமிழ்நாட்டில் அதிக சுங்க தொகையை வசூலிக்கும் சுங்கச் சாவடியாக இது இருக்கிறது. இந்தியாவில் டாப் 5க்குள் வருகிறது. அதேபோல அதிகபட்ச டிராபிக் நெரிசலை ஏற்படுத்தும் ஒன்றாகவும் இது இருக்கிறது.
போக்குவரத்தை நிர்வகிக்க முடியவில்லை என்றால், சுங்கச்சாவடியை மூடிவிட வேண்டும். 10 நொடி விதி என்பது வெறும் விதியாகவே இருக்கிறது. அதை யாரும் பின்பற்றுவதில்லை. இது தொடர்பாக யாராவது நீதிமன்றத்தில் வழக்கு தொடர வேண்டும்" என்று கூறி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications