சவுக்கு சங்கர் வழக்கு.. ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனையுடன் ஜாமீன்.. யூடியூப் சேனலை மூட உத்தரவு
சென்னை: சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பியதால் கைது செய்யப்பட்ட ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஃபெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, அவரது யூடியூப் சேனலை மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளார். மேலும் சர்ச்சைக்குரிய வகையில் பேட்டி அளிக்கக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளார்.
தனியார் யூடியூப் சேனலில் ஒளிபரப்பான நேர்காணல் நிகழ்ச்சியில் பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், பெண் போலீசார் குறித்து அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. இதையடுத்த சவுக்கு சங்கர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனியில் தங்கியிருந்த அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதனிடையே அதே சம்பவத்திற்காக திருச்சி மாவட்டம் முசிறி போலீஸ் டிஎஸ்பி யாஸ்மின் கொடுத்த புகாரின் பேரில், திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய பேட்டியை ஒளிபரப்பிய தனியார் யூடியூப் சேனலின் தலைமை செய்தி ஆசிரியர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட போலீசார் சவுக்கு சங்கர் மீது புகார் கொடுத்தனர். இதையடுத்து சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே பெண் போலீஸாரை அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கர் பேட்டியை ஒளிபரப்பிய யூடியூபரான பெலிக்ஸ் ஜெரால்டு டெல்லி அருகே தனியார் தங்கும் விடுதியில் தங்கியிருந்தார். அவரை திருச்சி தனிப்படை ஆய்வாளர் வீரமணி தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து செய்து தமிழகம் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். கிட்டத்தட்ட 80 நாட்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஃபெலிக்ஸ் ஜெரால்டு ஜாமீன் கேட்டு முறையீடு செய்தார். கீழமை நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்ட்டது.
இந்நிலையில் ஃபெலிக்ஸ் ஜெரால்டு இரண்டாவது முறையாக ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி T.V.தமிழ்ச்செல்வி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மேகநாதன், சர்ச்சைக்குரிய வகையில் இனி பேச மாட்டேன் என இதே போன்ற வழக்கில் ஏற்கனவே ஃபெலிக்ஸ் ஜெரால்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாகவும், ஆனால் அதனை மீறி தொடர்ந்து இப்படி பேசி வருவதாகவும் ஜாமீனுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.
அதேநேரம் ஃபெலிக்ஸ் ஜெரால்டு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், தனது பேச்சுக்கான விளைவை தற்போது ஃபெலிக்ஸ் ஜெரால்டு உணர்ந்துள்ளதாகவும், இனி ஒரு போதும் இவ்வாறு பேச மாட்டேன் என உறுதி அளித்ததாக தெரிவித்துள்ளதாகவும் கூறினார். இதனையடுத்து, ஃபெலிக்ஸ்-க்கு நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கிய நீதிபதி T.V.தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார்.
அதேநேரம், ஃபெலிக்ஸ் ஜெரால்டு நடத்தி வரும் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலை மூட வேண்டும் என்றும் சர்ச்சைக்குரிய வகையில் இனி நேர்காணல் அளிக்க மாட்டேன் என்றும் விசாரணை நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்ற நீதிபதி, ஜாமீனுக்கான நிபந்தனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications