தேர்தல் முடிவுக்குப் பின் அதிமுகவில் பூகம்பம்! எடப்பாடி Vs அண்ணாமலை! யாருக்கு சிக்கல்?
சென்னை: எடப்பாடி பழனிசாமி வலுவான கூட்டணி அமைத்திருந்தால் 10 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க முடியும். ஆனால், அதில் அவர் சறுக்கி விட்டார் என மூத்த பத்திரிகையாளர் ப்ரியன் கூறியுள்ளார்.
திமுக அரசு ஆட்சிக்கு வந்து 4 ஆம் ஆண்டை கொண்டாடி வருகிறது. அதற்குக் காரணம், தமிழ்நாட்டில் வலுவான எதிர்க்கட்சி என்ற ஒன்று இல்லை.

எடப்பாடி பழனிசாமி பெயருக்கு எதிர்க்கட்சியாக இருக்கிறார் என்றே பலரும் சொல்கிறார்கள். கடந்த முறை திமுக வலுவாக எதிர்க்கட்சியாக எடப்பாடியை எதிர்த்துச் செயல்பட்டது.
ஆனால், மின் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, பத்திரப்பதிவுக் கட்டணம் உயர்வு எனப் பல கட்டணங்களை திமுக அரசு கடுமையாக உயர்த்தி விட்டது.
அதை எதிர்த்துப் போராட எடப்பாடி பழனிசாமி முன்வரவே இல்லை. அவர் ஓபிஎஸை சமாளிக்கவும் கட்சி சின்னத்தைக் காப்பாற்றவும் கவனம் செலுத்தி வந்ததால், மக்கள் பிரச்சினையைப் பற்றி கேள்வி கேட்க அவருக்கு நேரம் இல்லை.
ஆனால், மக்கள் எடப்பாடியை வலுவான எதிர்க்கட்சியாகத்தான் உட்கார வைத்தார்கள். அப்படி இருந்தும் அவர் சறுக்கி இருக்கிறார். அதே வேகத்தில் 2024 மக்களவைத் தேர்தல் கூட்டணி அமைப்பதிலும் அவர் சறுக்கி இருக்கிறார்.
இதனால் கட்சிக்குள் சில அதிருப்திகள் நிலவுவதாகச் சொல்லப்படுகிறது. அதைப்போலவே ஓபிஎஸ். அவர் பெயரலில் அரசியலில் இருக்கிறார். ஜெயலலிதா காலத்துப் பழைய பன்னீர் செல்வமாக மறுபடியும் வருவாரா என்பது தெரியவில்லை.

இதனிடையே செல்வகணபதி பாஜக பக்கம் போக உள்ளதாக ஒரு செய்தி. அது கூட ஆதாரமற்ற செய்தி. இப்படிப் பல குழப்பங்களின் கூடாரமாக மாறி உள்ளது அதிமுக.
அதைப்பற்றி பல கருத்துகளைத் தெரிவித்துள்ளார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன். அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளதா? என்பது பற்றி ப்ரியன் என்ன சொல்கிறார்?
"அதிமுகவுக்குள் எடப்பாடிக்கு எதிராக அதிருப்தி இருப்பது உண்மைதான். 2019இல் பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் தோல்வியைத் தழுவினார்கள். அப்போது மோடி எதிர்ப்பு இருந்தது. அதனால் அதிமுக வெற்றி பெறமுடியாமல் போனது.
அதே 2021இல் பெரிய அளவில் கூட்டணியை ஒருங்கிணைத்து 75 சட்டசபை உறுப்பினர்களைப் பெற்றார்கள். அப்போது தேமுதிக மட்டும்தான் கூட்டணியில் இல்லை.

இந்த 2024 தேர்தல் பலருக்கும் முக்கியமான தேர்தல். பாஜக மீண்டும் ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதால், அவர்களுக்கு இது முக்கியத்துவம் பெற்ற தேர்தலாக உள்ளது. அதிமுகவை மீண்டும் வளர்த்து எடுக்க வேண்டும் என்றால், எடப்பாடி பழனிசாமி தன் பலத்தை நிரூபித்தாகவேண்டும். ஆகவே அவருக்கும் முக்கியமான தேர்தல் இது.
எடப்பாடி 18% முதல் 22% வரையான வாக்குகளைப் பெற்றுவிட்டால், தப்பித்துவிடுவார். அதில் சறுக்கினால், கட்சி அவரது கட்டுப்பாட்டில் இருக்குமா என்பதை இந்தத் தேர்தல்தான் முடிவு செய்ய உள்ளது.
தங்களின் அரசியல் வாழ்க்கையை நிர்ணயிக்கப் போகும் தேர்தல் என்பதால் ஓபிஎஸுக்கும் டிடிவி தினகரனுக்கும் கூட இது முக்கியமான தேர்தல்தான்.

ஆளும் கட்சியான திமுக, தனது ஆட்சியை மீண்டும் தக்க வைக்க வேண்டும். அதை நிரூபிக்கப் போகும் தேர்தல் இதுதான். ஆகவே அவர்களுக்கும் இது முக்கியமான தேர்தல்தான். ஆளும் கட்சி எதிர்ப்பு என்பது எந்தளவில் உள்ளது என்பதை இந்தத் தேர்தல் படம்பிடித்துக் காட்டப் போகிறது. ஆகவே அவர்களும் இந்தத் தேர்தலை முக்கியமானதாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' யாத்திரை எல்லாம் நடத்தினார். அதனால் கட்சி வளர்ந்துள்ளதா? அப்படி வளர்ந்திருந்தால், அது ஓட்டுகளாக மாறி உள்ளது? அப்படிப் பார்த்தால் பாஜக எத்தனை சதவீதம் வாக்குகளைப் பெறும்?
இப்படிப் பல வகைகளில் இந்த 2024 மக்களவைத் தேர்தல் பல கட்சிகளுக்கு வாழ்வா? சாவா ? என நிரூபிக்கப் போகின்ற தேர்தலாகவே உள்ளது.
அதிமுக பாஜகவை விட்டு ஏன் வெளியேறினார் என்பதற்கு இன்னும் சரியான விளக்கமே கிடைக்கவில்லை. அவருக்காவது அது ஏன் எனத் தெரியுமா என்பது சந்தேகமாக உள்ளது.

அதிமுக பாஜகவுடன் சேர்ந்து நின்றிருக்கலாம். ஒரு மிகப் பெரிய போட்டியை அது திமுகவுக்கு ஏற்படுத்தி இருக்கும். அதை எடப்பாடி தவற விட்டாரா? அல்லது அண்ணாமலை கொடுத்த தவறான அறிவுரையால் பாஜக தவறிவிட்டதா? என்பது எல்லாம் புரியாத புதிராக உள்ளது.
பாஜக, அதிமுக, தேமுதிக, பாமக எல்லாம் சேர்ந்து நின்றிருந்தால் குறைந்தது 10 தொகுதிகளில் திமுகவுக்குக் கடுமையான போட்டியைக் கொடுத்திருக்க முடியும்.
எடப்பாடி பழனிசாமியை விட்டு அதிமுக போய்விடக் கூடாது என்பது கொங்கு மண்டல அதிமுக இரண்டாம் கட்ட தலைவர்கள் உறுதியாக உள்ளனர். இவர்களிடம் கட்சியும் உள்ளது, பணமும் உள்ளது. ஆகவே அவர்கள் மீண்டும் சசிகலா வகையறாக்களின் கையில் கட்சி போய்விடக் கூடாது என்பதில் மிகத் தெளிவாக உள்ளனர்.
ஆனால், வடத் தமிழ்நாட்டுப் பகுதியில் எடப்பாடிக்குக் கட்சிக்குள் ஆதரவு இல்லை. சிவி சண்முகம் போன்றவர்கள் அவர் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழக்க ஆரம்பித்துள்ளனர்.
ஆர்வி உதயகுமார் போன்றவர்கள் கூட கடைசி 10 நாள்கள் தேர்தல் பணிகளைச் சரியாகச் செய்யவே இல்லை எனத் தகவல் வருகிறது. அவர், டிடிவி, ஒபிஎஸ் போன்ற தன் சமூகத்தினரை எதிர்த்து வேலை செய்ய வேண்டாம் என தயக்கம் காட்டி உள்ளார்.
எப்படிப் பார்த்தாலும் அதிமுக எத்திரணியானது வலுவாக இல்லை. அவர்களால் எடப்பாடியை எதிர்த்து வெற்றி பெறும் அளவுக்குச் செல்வாக்கு இல்லை. ஒருவேளை டிடிவி மற்றும் ஓபிஎஸ் இந்தத் தேர்தலில் வெற்றி பெற்றால், சற்று நிலைமை மாறலாம். கட்சி மீண்டும் ஒன்றிணைய வேண்டும் எனத் தொண்டர்கள் குரல் எழுப்பலாம்.
ஆனால், ஓபிஎஸ், டிடிவி வெற்றி பெற முடியுமா என்பது கேள்விக்குறிதான். பாஜகவே ஓபிஎஸை பெரிய அளவுக்கு மதிக்கவில்லை. அவரைக் கழற்றிவிடவே முயற்சி செய்தார்கள். டிடிவி கூட தனது வழக்கு விசாரணைக்குப் பயந்து பாஜக பக்கம் போய் இருக்கிறார். அவரும் தெளிவான முடிவில் இல்லை.
அப்படி இருக்கும் போது எடப்பாடியிடம் இருந்து கட்சியைக் கைப்பற்றுவது என்பது இப்போதைக்கு நடக்காத காரியம்" என்கிறார்.












Click it and Unblock the Notifications