ஆரம்பமே அட்டாக் மோடில் இறங்கிய ஆனந்த் சீனிவாசன்! பிரதமர் மோடி, அமித் ஷா என ஒருத்தரையும் விடல!
சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு துறைத் தலைவராக நியமிக்கப்பட்ட ஆனந்த் சீனிவாசன் செய்தியாளர் சந்திப்பில் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
தமிழ்நாட்டில் இருக்கும் முக்கிய பொருளாதார வல்லுநர்களில் ஒருவர் ஆனந்த் சீனிவாசன்.. சிக்கலான டாபிக் ஆக இருக்கும் பொருளாதாரத்தையும் கூட மிக எளிமையாக அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பவர் ஆனந்த் சீனிவாசன்..

பல ஆண்டுகளாகவே காங்கிரஸ் கட்சியில் இருக்கும் இவருக்கு நேற்றைய தினம் தான் புதிய பொறுப்பு வழங்கப்பட்டது. இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்பு துறை தலைவராக நியமிக்கப்பட்டார்.
ஆனந்த் சீனிவாசன்: நேற்று தான் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் செய்தி தொடர்புத்துறை தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில், இன்றே அவர் பாஜகவை மிகக் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்துவிட்டார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆனந்த் சீனிவாசன் பாஜகவைக் கடுமையாக விமர்சித்தார். அவர் பேசுகையில், " தமிழ்நாடு எப்போதும் அனைவரையும் வரவேற்கும். அதுபோல மோடியையும் நாங்கள் வரவேற்கிறோம். எப்படி தினசரி பல லட்சம் பேர் தமிழகத்திற்கு வருகிறார்கள். அதுபோல தான் இவரும் வருகிறார்.
அவர் திருப்பூரில் நடக்கும் கூட்டத்தில் கலந்து கொள்கிறார். திருப்பூரில் புதிய இஎஸ்ஐ மருத்துவமனை கட்டப்படும் என நீண்ட காலமாகச் சொல்லி வருகிறார். ஆனால், இன்னும் அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளைக் கூட முடிக்கவில்லை. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையைப் போல இஎஸ்ஐ மருத்துவமனை கட்டுவார் என நம்புவோம். ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் கட்டாததை இனி கட்டவா போகிறார்.
கவலை: திருப்பூரில் பாஜகவுக்கு ஆதரவு அதிகம் என்பதால் அவர்கள் அங்கே கூட்டத்தைப் போடுகிறார்கள். அதே திருப்பூரில் உள்ள சிறு முதலாளிகள் எந்தளவுக்குக் கவலைப்படுகிறார்கள் என்பது குறித்துப் பல முறை நான் விளக்கி உள்ளேன். குதிரை பேரம் செய்யும் இவர்கள், அந்த மக்களுக்கும் சிறு முதலாளிகளுக்கும் எதாவது செய்தால் நன்றாக இருக்கும்.
திமுக காங்கிரஸ் கூட்டணியில் எந்தவொரு இழுபறியும் இல்லை. எங்கள் கூட்டணி 40க்கு 40 இடங்களிலும் வெல்வோம். இந்தியா கூட்டணிக்கு ஆதரவு அதிகமாகவே இருக்கிறது. 2004இல் தமிழ்நாட்டில் 40 இடங்களிலும் வென்று தான் காங்கிரஸ் கட்சி திமுக ஆதரவுடன் யுபிஏ அரசை அமைத்தார்கள். எனவே, கூட்டணி தொடர்பாக இரு கட்சித் தலைமையும் விரைவில் பேசி நல்ல முடிவைக் கூறுவார்கள்.
கடும் தாக்கு: இந்தியா கூட்டணியில் இருப்போர் குடும்ப அரசியல் பின்னணியில் வருவதாக என பாஜக விமர்சிப்பதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் ஜோதிராதித்ய சிந்தியா எந்த குடும்பம். குதிரை பேரம் செய்து வாங்கிக் கொண்டு போனவர்கள் குடும்ப அரசியலில் இருந்து வந்தவர்கள் இல்லையா.. பாஜகவில் உள்ள பலர் குடும்ப அரசியல் பின்னணியில் வந்தவர்கள் தான்.
கிரிக்கெட்: ஜெய்ஷா எந்த இடத்தில் கிரிக்கெட் ஆடினார். அவர் குஜராத் மாநிலத்திற்காவது கிரிக்கெட் போட்டியில் ஆடி இருக்கிறாரா. பின்னி என்பவர் தான் பிசிசிஐ தலைவராக இருக்கிறார். நீங்கள் எதாவது ஒரு மீட்டிங்கில் ஆவது அந்த பின்னியை பார்த்து உள்ளீர்களா.. பின்னியை சும்மா பதவியில் உட்கார வைத்துவிட்டு அனைத்து முடிவுகளையும் ஜெய்ஷா தான் எடுத்து வருகிறார். இது வாரிசு இல்லை என்றால் வேறு எது வாரிசு அரசியல்..
தகுதியே இல்லாத ஒருவரை பிசிசிஐ செயலாளராகப் போட்டுள்ளீர்கள். அதேபோல ஆசியன் கவுன்சிலில் எப்போதும் பிசிசிஐ தலைவர் தான் இந்தியா சார்பில் செல்வார். ஆனால், இந்த முறை ஜெய்ஷா போய் இருக்கிறார். இதற்குப் பெயர் என்ன.. கங்குலி போன்ற திறமையான ஒரு நபர் பாஜகவில் இணைய மறுத்த ஒரே காரணத்திற்காக அவர் ஓரங்கட்டப்பட்டுள்ளார்" என்று கடுமையாக விமர்சித்துப் பேசினார்.












Click it and Unblock the Notifications