தெற்கே நாங்க தான்.. விஜய்யோடு சேர்ந்து கெத்து காட்டும் காங்கிரஸ்.. பாஜகவால் நெருங்க கூட முடியலையே!
சென்னை: தென்மாநிலங்களில் காங்கிரஸ் தனது செல்வாக்கை தொடர்ந்து உயர்த்தி கொண்டே செல்கிறது. அந்த வகையில் 5 தென்மாநிலங்களில் 4 மாநிலங்களை காங்கிரஸ்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சி ஆள்கிறது. இந்த விஷயத்தில் பாஜக பின்தங்கி உள்ளது.
'காங்கிரஸ் இல்லா' இந்தியாவை உருவாக்குவோம் என்று பிரதமர் மோடி உள்பட பாஜக தலைவர்கள் மேடைகள் தோறும் முழங்கி வருகின்றனர். அதன்படி வடமாநிலங்களில் பல இடங்களில் காங்கிரஸ் கட்சியின் செல்வாக்கு சரிந்துள்ளது. தொடர்ந்து பாஜக வளர்ந்து கொண்டே செல்கிறது. வடமாநிலங்களில் செல்வாக்கை மீட்டெடுக்கும் முனைப்பில் காங்கிரஸ் கட்சி செயல்பட்டு வருகிறது.

அதேவேளையில் தென்மாநிலங்களை எடுத்து கொண்டால் பாஜகவை விட காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது. அதோடு பல மாநிலங்களில் காங்கிரஸ் தனித்து ஆட்சியை பிடிக்கும் தன்மையுடன் விளங்கி வருகிறது.
தென்மாநிலங்களாக தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 மாநிலங்கள் உள்ளன. இதில் கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. முதல்வராக சித்தராமையா உள்ளார். தெலுங்கானாவையும் காங்கிரஸ் ஆள்கிறது. அங்கு முதல்வராக ரேவந்த் ரெட்டி இருக்கிறார். இந்த 2 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி பலமாக உள்ளது.
கேரளாவில் அமோக வெற்றி
அதேபோல் காங்கிரஸ் பலமாக இருக்கும் இன்னொரு தென்மாநிலம் என்றால் அது கேரளா. தமிழகத்தை போல் சமீபத்தில் தான் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. இந்ததேர்தலில் கேரளாவில் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றுள்ளது. 140 தொகுதிகளில் 102 தொகுதிகளில் காங்கிரஸ் கூட்டணி வென்று அசத்தி உள்ளது.
இதில் அதிகபட்சமாக காங்கிரஸ் கட்சி 63 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன்மூலம் 10 ஆண்டுகளுக்கு பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணியை வீழ்த்தி காங்கிரஸ் அரியணை ஏறி உள்ளது. தற்போது முதல்வரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது.
தமிழகத்தில் விஜய்யால் மாற்றம்
அதேபோல் தமிழகத்தில் 1967க்கு பிறகு காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கே வந்தது இல்லை. திமுக கூட்டணியில் இருந்தாலும் கூட காங்கிரஸ் கட்சி அமைச்சரவையில் இடம் பிடிக்காது. இந்நிலையில் தான் தற்போது ஜோசப் விஜய் தலைமையிலான தவெகவிற்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து கூட்டணியில் இணைந்துள்ளது.
ஜோசப் விஜய்க்கு மெஜாரிட்டி கிடைக்காத நிலையில் காங்கிரஸ் கட்சி தனது 5 எம்எல்ஏக்களின் ஆதரவை வழங்கி உள்ளது. மேலும் ஆட்சியிலும் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதிகபட்சமாக 2 அமைச்சர்கள் வரை வழங்கப்பட வாய்ப்புள்ளது. இதன்மூலம் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆளும் கூட்டணியாக மாறி உள்ளது.
ஒன்றில் மட்டும் பாஜக
இதன்மூலம் கர்நாடகா, தெலுங்கானா, கேரளா, தமிழ்நாடு என 4 மாநிலங்களில் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெறுகிறது. ஆந்திராவில் மட்டும் தெலுங்குதேசம் கட்சியின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த கட்சி பாஜகவின் கூட்டணியில் உள்ளது. அங்கு தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு முதல்வராக உள்ளார்.
நடிகர் பவன் கல்யாண் துணை முதல்வராக உள்ளார். அதேபோல் புதுச்சேரி யூனியன் பிரதேசமாக உள்ளது. அங்கு நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மீண்டும் பாஜக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. என்ஆர் காங்கிரஸ் தலைவர் நாராயணசாமி மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். பாஜகவை சேர்ந்தவர்கள் அமைச்சர்களாக செயல்பட உள்ளனர்.












Click it and Unblock the Notifications