மகத்தான வெற்றிபெறுவார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.. அதிமுக சஞ்சலத்தில் இருக்கிறது.. கே.எஸ்.அழகிரி பேட்டி!
ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகத்தான வெற்றி பெறுவார் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். அதேபோல் அதிமுக கூட்டணி சஞ்சலத்தில் உள்ளதாக கூறிய அவர், தன்னம்பிக்கை இல்லாத கட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள் என்று கூறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இந்த இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக வேட்பாளர் ஆனந்த், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா நவநீதன் உள்ளிட்ட 77 பேர் போட்டியிட்டனர்.
இந்த நிலையில் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருந்து வருகிறார்.

காங்கிரஸ் முன்னிலை
காலை 9 மணி நிலவரப்படி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 9,124 வாக்குகளுடன் முன்னிலையில் இருந்து வருகிறார். இவருக்கு பின் அதிமுக வேட்பாளர் 2,868 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் இருக்கிறார். கிட்டத்தட்ட தன்னுடன் போட்டியிட்ட அதிமுக வேட்பாளரை விடவும் சுமார் 7 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலையில் இருப்பது திமுக, காங்கிரஸ் கூட்டணி கட்சி தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கே.எஸ்.அழகிரி பேட்டி
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லாட்சி மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாடு மக்களுக்கு தேர்தலின் போது திமுக கொடுத்த வாக்குறுதி 2 ஆண்டுகளுக்குள் 80 சதவிகிதத்திற்கும் அதிகமாக நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. திமுக - காங்கிரஸ் கூட்டணி கொள்கை சார்ந்த அரசியலை முன்னெடுத்தோம்.

சஞ்சலத்தில் அதிமுக
எங்களை எதிர்த்து நின்ற அதிமுக, சஞ்சலத்தில் இருக்கிறார்கள். சஞ்சலத்தில் உள்ள, தன்னம்பிக்கையில்லாத ஒரு கட்சியை மக்கள் விரும்ப மாட்டார்கள். எங்களின் கூட்டணி மகத்தான வெற்றியை பெறும். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறுவார் என்று தெரிவித்தார்.

3வது அணி
தொடர்ந்து மூன்றாவது அணி பற்றி மு.க.ஸ்டாலின் பேசியது பற்றிய கேள்விக்கு, இதுவொரு பொதுவான கருத்து. காங்கிரஸ் அல்லாத கூட்டணி கரைசேராது என்று முதல்வர் சொல்லிய வார்த்தைகள் முத்தான வார்த்தைகள். அதேபோல் மு.க.ஸ்டாலின் ஒரு அரைகூவலை விடுத்துள்ளார் என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications