விரட்டும் விசிக.. கண்டிக்கும் காங்கிரஸ்.. திமுக கூட்டணிக்குள்ளேயிருந்து வரிசையாக எழுந்த குமுறல்!
சென்னை: பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக கடந்த சில வாரங்களாகவே ஆளும் திமுக அரசின் நடவடிக்கைகள், செயல்பாடுகளை விமர்சித்து கூட்டணி கட்சிகள் கடும் விமர்சனங்களை முன்வைத்து வருவது திமுகவுக்கு தலைவலியை கொடுத்து இருக்கிறது.
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, தமிழ்நாடு வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்து திமுக வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றியது.
திமுக ஆட்சிக்கு வந்த ஓராண்டை கடந்துள்ள நிலையில் தொடக்கத்தில் சீமான், ராமதாஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கூட அரசை பாராட்டி அறிக்கைகளையும், பேட்டிகளையும் அளித்தனர். ஆனால், கடந்த சில மாதங்களாக திமுக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக திமுகவின் கூட்டணி கட்சிகள் கூட அரசை விமர்சித்து வருகின்றன.

விடுதலை சிறுத்தைகள்
திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே காவல்துறையின் செயல்பாடுகள், விடுதலை சிறுத்தைகள் கொடிகளை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தது, லாக் அப் மரணங்கள் தொடர்பாக பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வந்தார் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன். அண்மையில் கள்ளக்குறிச்சி மாணவி மரணத்துக்கு ஆதிதிராவிடர்களே காரணம் என்று நாளிதழில் வெளியான செய்தியை விமர்சித்து உளவுத்துறையில் உள்ள சாதியாவதிகளே இதற்கு காரணம் என்று குற்றம்சாட்டினார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் வன்னியரசு, 60 அருந்ததியர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்ததுடன், அமைச்சர் அன்பில் மகேசையும் விமர்சனம் செய்திருந்தார்.

மனிதநேய மக்கள் கட்சி
திமுக கூட்டணியில் போட்டியிட்ட 2 தொகுதிகளில் வென்ற மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையை கடந்த நவம்பர் மாதம் விமர்சித்து இருந்தார். " 20 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்நாள் சிறைவாசம் அனுபவித்து வரும் சிறைவாசிகள் குறிப்பாக முஸ்லிம் சிறைவாசிகள் இந்த அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் விடுதலை பெறுவதற்கான வாய்ப்பே இல்லை என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. அரசாணை ஏமாற்றமளிக்கிறது." என்று தெரிவித்து இருந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு
இதேபோல் அண்மையில் மின் கட்டணத்தை உயர்த்தியதற்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமிழக அரசை விமர்சித்து இருந்தார். அதில், "தமிழக அரசு அறிவித்துள்ள உயர்வு நடுத்தர குடும்பத்தினருக்கும், வாடகை வீடுகளில் குடியிருப்போருக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தும். சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை உயர்வால் அனைத்து பகுதி மக்களும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மாநில அரசின் மின் கட்டண உயர்வு அறிவிப்பும் மக்களுக்கு கூடுதல் சுமையாக அமையும். மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு நடைபெறும் என்ற வாக்குறுதியும் செயல்படுத்தப்படவில்லை. எனவே, மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்." என்று வலியுறுத்தி இருந்தார்.

காங்கிரஸ் கட்சி
இந்த நிலையில்தான் திமுகவின் பிரதான கூட்டணி கட்சியான காங்கிரஸும் தற்போது திமுக அரசை விமர்சித்து உள்ளது. முன்னதாஸ் செஸ் ஒலிம்பியாட்டை புறக்கணிக்க இருப்பதாக அக்கட்சி தெரிவித்து இருந்த நிலையில், "தமிழக அரசு வெளியிட்ட செஸ் ஒலிம்பியாட் விளம்பரத்தில் பாஜகவினர் அத்துமீறி மோடியின் படத்தை ஒட்டியிருக்கிறார்கள். இந்த செயலை செய்தவர்களை காவல்துறை ஏன் கைது செய்யவில்லை? பாஜகவினர் என்பதால் காவல்துறை கைது செய்ய அஞ்சுகிறதா? ஏதோவொரு வகையில் காவல்துறையினர் பாஜகவினரின் மனதைக் குளிர வைக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது. சில அமைப்பினர் கருப்பு மை கொண்டு மோடி படத்தை அழித்ததற்காக மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்திருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications