பேச வேண்டாம்.. மாணிக்கம் தாகூரை கண்டித்ததா காங்கிரஸ் டெல்லி தலைமை? நடந்தது என்ன?
சென்னை: திமுக - காங்கிரஸ் கூட்டணி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வந்த விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூருக்கு காங்கிரஸ் டெல்லி மேலிடம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது என்று கூறப்படுகிறது.
தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் திமுக மற்றும் அதன் முக்கிய கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் இடையே மோதல் போக்கு வலுத்து வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை கொறடா மாணிக்கம் தாகூர் மற்றும் தரவு பகுப்பாய்வுக் குழுத் தலைவர் பிரவீன் சக்ரவர்த்தி ஆகியோர் திமுகவை விமர்சித்துத் தொடர்ந்து கருத்து தெரிவித்து வருவது, சத்தியமூர்த்தி பவன் மற்றும் அண்ணா அறிவாலயம் வட்டாரங்களில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

மோதலுக்குக் காரணம் என்ன?
மதுரை தெற்கு மாவட்ட காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய மாணிக்கம் தாகூர், திமுகவை மறைமுகமாகச் சாடினார். "நீங்கள் செய்த தவறுகளுக்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல வேண்டியுள்ளது," என்று அவர் பேசியது கூட்டணிக்குள் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியது. மேலும், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் விருதுநகர் தொகுதியில் திமுகவினர் சரியாக வேலை செய்யவில்லை என்றும், ஆட்சியில் பங்கு கிடைத்தால் மட்டுமே காங்கிரஸ் கட்சி தமிழகத்தில் வளர முடியும் என்றும் அவர் வாதிட்டுள்ளார்.
இதற்கிடையே, பிரவீன் சக்ரவர்த்தி தமிழகத்தின் கடன் சுமை குறித்து வெளியிட்ட தரவுகள் திமுக தலைமைக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன.
தலைமையிடம் புகார்
கூட்டணிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசுபவர்கள் யாராக இருந்தாலும் அது தவறு எனத் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து பெங்களூருவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை நேரில் சந்தித்த அவர், மாணிக்கம் தாகூர் மற்றும் பிரவீன் சக்ரவர்த்தி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி விரிவான அறிக்கையைச் சமர்ப்பித்தார்.
மறுபுறம், சர்ச்சைக்குரிய வகையில் பேசும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு வருவோம் என திமுக தலைமை காங்கிரஸ் மேலிடத்திடம் கறாராகத் தெரிவித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலிடத்தின் விளக்கம்
நிலைமை விபரீதமாவதை உணர்ந்த அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால், சென்னைக்கு வந்து விளக்கம் அளித்தார். "கூட்டணி குறித்து தனிநபர்கள் தெரிவிக்கும் கருத்துக்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு அல்ல. கூட்டணி குறித்து டெல்லி மேலிடமே இறுதி முடிவெடுக்கும்," என அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
அதன்படி மாணிக்கம் தாகூருக்கு, அகில இந்திய காங்கிரஸ் மேலிடம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. "கூட்டணி மற்றும் ஆட்சிப் பங்கீடு தொடர்பான விவகாரங்களில் கட்சியின் அகில இந்திய தலைமை மட்டுமே இறுதி முடிவெடுக்கும்; தனிப்பட்ட முறையில் யாரும் பொதுவெளியில் கருத்து கூறக்கூடாது" என டெல்லி மேலிடம் கறாராகத் தெரிவித்துள்ளது.
திமுக தலைமையிடம் இருந்து வந்த புகார்களைத் தொடர்ந்து, காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் மூலமாக இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. "கூட்டணி ஒற்றுமையைச் சிதைக்கும் வகையில் பேசுவதை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும், மீறினால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்" என மாணிக்கம் தாகூரிடம் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியின் இந்த அதிரடித் தலையீடு, தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தைக்கு முன்னதாக காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் சலசலப்பை அடக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
மாணிக்கம் தாகூரின் பதிலடி
காங்கிரஸ் மேலிடம் மாணிக்கம் தாகூரிடம் விளக்கம் கேட்டு எச்சரித்ததாகக் கூறப்படும் நிலையில், அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பாரதியாரின் வரிகளைப் போன்ற ஒரு கவிதையைப் பதிவிட்டுள்ளார்.
"தேடிச் சோறு நிதம் தின்று, பல சின்னஞ் சிறு கதைகள் பேசி... நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ?" என்ற பாணியில் அவர் பதிவிட்டுள்ள கருத்து, தம்மைக் கட்டுப்படுத்த நினைக்கும் திமுக மற்றும் கட்சிக்குள்ளேயே இருக்கும் எதிர்ப்பாளர்களுக்கு அவர் அளித்த சவாலாகவே பார்க்கப்படுகிறது. இந்த சமூக ஊடகப் பதிவு திமுகவினரை மேலும் ஆத்திரமடையச் செய்துள்ளதால், தமிழக அரசியலில் கூட்டணி குறித்த குழப்பம் நீடிக்கிறது.












Click it and Unblock the Notifications