விவேகானந்தர் பாறையில் மோடியின் ’தியான’ நாடகம்.. இந்தியாவுக்கே அவமானம்! செல்வப்பெருந்தகை சுளீர்..!
சென்னை: மே 30 அன்று, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தியான நாடகம், தமிழ்நாட்டிற்கு மட்டும் அவமானமல்ல. இந்தியாவிற்கே அவமானமாகும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல் இறுதி பரப்புரை முடிந்து, மே 30ஆம் தேதி கன்னியாகுமரிக்கு வருகை புரிந்து, அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் மூன்று நாட்கள் தியானம் செய்வதென நரேந்திர மோடி திட்டமிட்டிருக்கிறார்.

இதனையடுத்து கன்னியாகுமரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. விவேகானந்தர் பாறையில் நரேந்திர மோடி மேற்கொள்ளும் நிலையில் அங்கு பொதுமக்கள் செல்ல 3 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ்: இந்நிலையில் மோடியின் தியானத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநில தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்,’ இறுதிகட்ட தேர்தல் நடைபெற இருக்கிற 57 மக்களவைத் தொகுதிகளில் அரசியல் ஆதாயம் தேடுவதற்காக விவேகானந்தர் பாறையில் தியானம் செய்ய பிரதமர் மோடி தேர்வு செய்திருப்பதைவிட ஒரு அரசியல் மோசடி வேறு எதுவும் இருக்க முடியாது. பதவிக்காக நரேந்திர மோடி எவ்வளவு தரம் தாழ்ந்த நிலைக்கும் செல்வார் என்பதற்கு இந்தத் 'தியான நாடகம்” ஒரு உதாரணமாகும்.
விவேகானந்தர்: சுவாமி விவேகானந்தர் தம் வாழ்நாள் முழுவதும் மதநல்லிணக்கத்தைக் கடைப்பிடித்து இந்துமதத்தை உலகம் முழுவதும் பரப்பியவர். அனைத்து மதத்தினராலும் அன்போடு நேசிக்கப்பட்டவர். அவர் ஒரு சாந்த சொரூபி. அதேநேரத்தில், தமது நாவன்மையால் உலகத்தின் கவனத்தை ஈர்த்தவர். அவரது ஆன்மீகப் பயணத்தில் 1893ஆம் ஆண்டில் செப்டம்பர் 11 அன்று அமெரிக்காவில், சிகாகோ நகரில் நடைபெற்ற சமய மாநாட்டில் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்புமிக்கதாகும். அதில், விவேகானந்தர் உரையாற்றும் போது, 'உலகில் அனைத்து மதங்களாலும் துன்புறுத்தப்பட்டவர்களுக்கும், அகதிகளுக்கும் அடைக்கலம் கொடுத்த ஒரு தேசத்தைச் சேர்ந்தவன் என்பதில் நான் பெருமைப்படுகிறேன்” என்று குறிப்பிட்டதை எவரும் மறந்திட இயலாது.
நல்லிணக்கம்: தாங்கள் சார்ந்திருக்கும் மதத்தைப் பற்றிய தனிவிதமான, பிரத்யேகவாதப் பார்வையைக் கொண்டவர்களை ஏளனம் செய்த விவேகானந்தர், “தான் சார்ந்திருக்கும் மதம் ஒன்று மட்டும்தான் நிலைத்திருக்க வேண்டும். மற்ற மதங்கள் அழிந்துவிட வேண்டும் என்று எவராவது கனவு கண்டால், அவருக்காக நான் என் இதயத்தின் அடி ஆழத்திலிருந்து பரிதாபப்படுகிறேன்” என்று கூறினார். சுவாமி விவேகானந்தர் தமது உரையை நிறைவு செய்கிற போது, 'ஒருவருக்கு நல்லிணக்கமும், அமைதியும் மட்டுமே தேவைப்படுகிறது. வேற்றுமை அல்ல என்றும், இதை ஒவ்வொரு மதத்தின் பதாகையிலும் எழுதப்பட வேண்டும்” என்று மோடிக்கு உரைக்கிற மாதிரி 131 ஆண்டுகளுக்கு முன்பு பேசியவர் சுவாமி விவேகானந்தர்.
நரேந்திரமோடி: குஜராத் மாநில முதலமைச்சராக நரேந்திரமோடி இருந்தபோது ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பகிரங்கமாகப் படுகொலை செய்யப்பட்டபோது, ரோம் நகர் தீப்பற்றி எரிந்த போது நீரோ மன்னன் பிடில் வாசித்ததைப்போல கண்டும் காணாமல் இருந்தவர் தான் இன்றைய பிரதமர் நரேந்திர மோடி. இளமை காலத்திலேயே ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்து, மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தும் கோல்வால்கரின் சிந்தனைத் தொகுப்புகளைப் படித்து வளர்ந்த நரேந்திர மோடியால் சுவாமி விவேகானந்தரின் உரைகளைப் படித்திருக்க வாய்ப்பில்லை. அப்படியே படித்திருந்தாலும் அதை ஏற்றுக் கொள்கிற மனநிலை அவருக்கு இருந்திருக்காது.
தியானம்: அதிகாரவெறி, பகைமை, வெறுப்பு, பொய்மை, மனிதகுலத்தைப் பிளவுபடுத்தும் வஞ்சக புத்தி கொண்ட ஒருவருக்கு மனம் ஒன்றிய தியானம் என்றுமே கிட்டாது. ஆன்மீக மாண்புகளை மீறி மதவெறியால் ஆட்கொள்ளப்பட்டு, ஆரோக்கியமற்ற விரக்தியான மனநிலைக்குச் சென்றுவிட்ட நரேந்திர மோடி, ஆன்மீக ஞானக்கடல் விவேகானந்தர் பாறையில் தியானம் செய்வது என்பது ஏமாற்று நாடகம்.
அரசியல் நோக்கம்: சுவாமி விவேகானந்தரின் போதனைகளை ஏற்று அவரைப் போற்றுபவர்கள் எவரும் நரேந்திர மோடியின் தியான முடிவை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். சுவாமி விவேகானந்தரை இழிவுபடுத்துகிற முயற்சியில் ஈடுபட்டு, அதன்மூலம் இந்து மதத்திற்கே களங்கம் கற்பிப்பவராக நரேந்திர மோடியின் தியான நாடகம் அமைந்திருக்கிறது. இது அரசியல் நோக்கம் கொண்டதே தவிர, ஆன்மீக நோக்கம் கொண்டதல்ல.
நாடகம்: மே 30 அன்று, கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் நரேந்திர மோடி மேற்கொள்ளும் தியான நாடகம், தமிழ்நாட்டிற்கு மட்டும் அவமானமல்ல. இந்தியாவிற்கே அவமானமாகும்.நரேந்திர மோடி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில் தன்னந்தனியாக தியானம் செய்கிற மூன்று நாட்களும் அங்கு சுற்றுலா பயணிகள் எவரும் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. இந்த தடை மக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கிற செயலாகும். இதை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.” என கூறியுள்ளார்.
-
உடையும் கூட்டணி? திமுக முதுகில் குத்திய காங்கிரஸ்! நேருக்கு நேர் தோழமைகளுடன் மோதும் கதர் தலைகள்? -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"உங்களுக்கு 3 நாள் தான் டைம்.. உடனே காலி பண்ணுங்க.." காங்கிரஸுக்கு அதிர்ச்சி கொடுத்த நோட்டீஸ் -
ஆதவ் அர்ஜூனா போட்ட குண்டு.. தூக்கி அடிக்கப்பட்ட காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் செல்வம் -
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
175 தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி! திமுக கூட்டணியில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்? லிஸ்ட்! -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
எண்ணி 2 நாள்.. காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் தவெகவில் இணைவார்கள்.. குட்டையை குழப்பும் ஆதவ் அர்ஜுனா -
3 முறை பிரதமர்.. பாஜகவிற்கே எடப்பாடி 27 தான் தந்துள்ளார்.. காங்கிரசுக்கு 28.. திமுகவினர் குமுறல் -
அடித்து ஆடிய எடப்பாடி.. திமுக கேம்பில் எதிர்பார்க்காத குளறுபடி.. ஸ்டாலின் மனதில் என்ன இருக்கிறது?.. -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி












Click it and Unblock the Notifications