புதிய தலைமை செயலகம்: சென்னையில் ஒன்னு, திருச்சியில் ஒன்னு - முதல்வருக்கு கார்த்தி சிதம்பரம் கடிதம்
சென்னை: தமிழ்நாட்டுக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய தலைமைச் செயலகம் தேவை என காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டு உள்ள அவர், "கடந்த வாரம் நான் புதிய ஜார்ஜ் கோட்டைக்கு சென்று வந்த பிறகு தமிழ்நாட்டுக்கு நவீனமான புதிய தலைமைச் செயலகமும், சட்டப்பேரவையும் அவசியம் என்ற கோரிக்கை நியாயமானது என தோன்றியது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் புதிய தலைமைச் செயலகத்தை அமைக்க நடவடிக்கை எடுப்பதுடன், மாற்று ஏற்பாடுகளுக்காக திருச்சியில் சேட்டிலைட் சட்டப்பேரவையை அமைக்க வேண்டும்.
அதே போல் அனைத்து கேபினட் அமைச்சரவை கூட்டத்தையும் சென்னைக்கு வெளியில் நடத்துமாறு நான் முதலமைச்சரிடம் கேட்டுக்கொள்கிறேன். இதன் மூலம் அரசின் உயர்மட்டக்குழுவுக்கு மக்களுடன் கூடுதல் நெருக்கம் ஏற்படும் என குறிப்பிட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தற்போது கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார். அதில், "18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட புனித ஜார்ஜ் கோட்டையில் தமிழக அரசின் தலைமைச் செயலகம் மற்றும் சட்டப்பேரவையும் இயங்கி வருகிறது.
தற்போது இந்த புனித ஜார்ஜ் கோட்டையானது மிகவும் பழைய கட்டிடமாகவும், போதிய இடவசதி இல்லாமலும், நவீன வசதிகள் இல்லாமலும் செயல்பட்டு வருகிறது. எனவே புதிதாகவும், இடவசதியோடும், நவீன தொழில்நுட்பத்துடன், அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய தமிழகத்தின் அடையாளமாக புதிய சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தினை கட்ட வேண்டும்.
கூடுதலாக ஒரு தமிழகத்தின் சட்டப்பேரவை மற்றும் தலைமைச் செயலகத்தினை மையமான திருச்சியில் அமைத்து, சட்டப்பேரவை நிகழ்வுகளை சென்னையிலும், திருச்சியிலும் மாற்றி மாற்றி நடத்திட வேண்டும்.மேலும், தமிழக அமைச்சரவை கூட்டத்தினை சென்னையில் மட்டும் நடத்தாமல், வேறு ஊர்களிலும் நடத்திட வேண்டும் கேட்டுக்கொள்கிறேன்." என்று குறிப்பிட்டு இருக்கிறார்.












Click it and Unblock the Notifications