இலவச தடுப்பூசி அறிவிப்பு... தமிழக அரசுடன் காங்கிரஸ் கட்சி ஒத்துழைக்கும் - ப.சிதம்பரம்
தமிழ்நாட்டில் 18 வயது முதல் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என்றும் இதற்கான செலவைத் தமிழ்நாடு அரசு ஏற்கும் என்ற அறிவிப்பை வரவேற்பதாக மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழ்நாட்டில் 18 வயது முதல் இலவசமாகத் தடுப்பூசி போடப்படும் என்றும் இதற்கான செலவைத் தமிழ்நாடு அரசு ஏற்கும் என்ற அறிவிப்பை வரவேற்பதாக மத்திய முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார். இந்த நல்ல திட்டத்திற்குத் தேவையான நிதி ஆதாரங்களை எப்படிப் பெறுவது என்று தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகளையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
நாடு முழுவதும் மே 1ஆம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், அதை கட்டுப்படுத்த தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்துவது அவசியமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய தொழிற்சாலைகள், தங்கும் விடுதிகள், உணவகங்கள் போன்றவை தனியார் மருத்துவமனைகளுடன் இணைந்து 100 சதவிகிதம் பணியாளருக்கு தடுப்பூசி வழங்க ஊக்குவிப்பதுடன், 18 முதல் 45 வயதுக்குட்பட்ட அனைத்து கட்டிட தொழிலாளர்கள், சில்லறை விற்பனைக் கடை வியாபாரிகள், மாநில போக்குவரத்து ஊழியர்கள், அனைத்து பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள், ஆட்டோ, டாக்ஸி ஓட்டுனர்கள் உள்ளிட்டோருக்கு முன்னுரிமையில் தடுப்பூசி வழங்க இலவச சிறப்பு தடுப்பூசி முகாம்கள் மே 1ம் தேதி முதல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான செலவை மாநில அரசே ஏற்றுக் கொள்ளும் என்றும் அதிகம் பாதிப்படைந்த மாவட்டங்களில் முன்னுரிமை அடிப்படையில் இந்த முகாம்கள் நடத்தப்படும் என்றும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வரின் இந்த அறிவிப்புக்கு மத்திய முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 18 வயது முதல் அனைவருக்கும் இலவசமாகத் தடுப்பூசி, அனைத்து செலவைத் தமிழ்நாடு அரசு ஏற்கும் என்ற அறிவிப்பை வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த நல்ல திட்டத்திற்குத் தேவையான நிதி ஆதாரங்களை எப்படிப் பெறுவது என்று தமிழ்நாடு அரசு அனைத்துக் கட்சிகளையும் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்றும் அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழ்நாடு அரசுடன் ஒத்துழைப்பதற்கு காங்கிரஸ் கட்சி முன் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications