காங்கிரஸ், விசிகவை இழுக்க திட்டம்? விஜய் சாய்ஸ் அதிமுக அல்ல! பாண்டே விளக்கம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் சார்பாக யாரும் அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே ஒரு தகவலைப் பகிர்ந்துகொண்டிருக்கிறார்.
அதிமுகவுடன் தவெக மறைமுகமாகக் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்ததாக தகவல்கள் கசிய தொடங்கி இருந்த நிலையில், அது ஆதாரமற்ற செய்தி என்று தமிழக வெற்றிக் கழக பொதுச் செயலாளர் ஆனந்த் மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தார். தங்களது தலைமையில் பெரும்பான்மை பலத்துடன் நல்லரசை அமைப்போம் என்றும் அவர் அறிக்கையில் சுட்டிக்காட்டி இருந்தார்.

இதனிடையே அதிமுக தரப்பில் கள ஆய்வுக் குழுவை பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். 10 முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய இந்தக் குழுவினர், மாவட்டந்தோறும் சென்று கட்சிப் பணிகள் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒரு தேர்தலைக் கூட இதுவரை சந்தித்து பலத்தை நிரூபிக்காத தவெக தைரியமாக அதிமுக கூட்டணியை மறுத்துள்ளது. ஆனால், பல ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்திலிருந்த அதிமுக இந்த விவகாரம் தொடர்பாக மவுனம் காத்து வருகிறது. பலத்தையே நிரூபிக்காத தவெகவுடன் கூட்டணி வைக்க வேண்டிய தேவை தங்களுக்கு இல்லை என வெளிப்படையாக அறிக்கை விடவில்லை.
இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என புஸ்ஸி ஆனந்த் அதிரடியாக அறிக்கை விட வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? அதற்கான அவசியம் எங்கே எழுந்தது என்பது பற்றி பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே விளக்கம் அளித்துள்ளார். பாண்டே தனது பேட்டியில், "அதிமுக தரப்பிலிருந்துதான் விஜய் கட்சியிடம் கூட்டணி பேச்சு வார்த்தை மேற்கொள்ளப்பட்டது. விஜய் தரப்பிலிருந்து யாரும் அதிமுகவை அணுகவில்லை. இதுதான் நான் அறிந்தவரை எனக்குக் கிடைத்த தகவல். ஆனால், தவெக அதிமுக இல்லாமல் பிற 3 கட்சிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது என்பது எனக்குத் தெரியும். திமுக கூட்டணியை உடைக்க வேண்டும் என்பது விஜய் கணக்கு.
ஆகவே, அங்கே உள்ள கட்சியை கரைக்க முயற்சிகள் நடந்து வருகின்றன. அதை உணர்ந்துதான் திருமாவளவன், 'கூட்டணியை விட்டு வெளியேற வேண்டிய தேவை எங்கே வந்தது?' என்கிறார். அப்படி என்றால், யாருக்கு விசிக ஆதரவு வேண்டுமோ அவர்கள்தான் தேவையை ஏற்படுத்த வேண்டும். காங்கிரஸ் கட்சி 10 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 23 எம்.எல்.ஏக்களை வைத்துள்ளது. அவர்கள் தமிழ்நாட்டில் 3வது பெரிய கட்சியாக உள்ளனர். அவர்கள் ஏன் திமுக கூட்டணியை விட்டு வெளியே வரவேண்டும்? அதற்கு ஒரு தேவை உருவாக வேண்டும் இல்லையா? தவெகவுடன் வந்தால் 30 சீட்டு காங்கிரசுக்குக் கிடைக்கலாம். ஆனால், எத்தனை இடங்களில் வெற்றி கிடைக்கும்? அதைப் பார்ப்பார்கள் இல்லையா?
ஒரு மாநாடு சக்சஸ் ஆக நடத்திவிட்டால் உடனே வந்துவிடமாட்டார்கள். 2025 டிசம்பர் வரை விஜய் பல வியூகங்களை வகுப்பார். கட்சியைப் பேச வைப்பார். இப்போதைக்கு தவெக தலைமையில் கூட்டணி. விஜய் முதல்வர் வேட்பாளர். அதில் உறுதியாக உள்ளது அந்தக் கட்சி. ஆனால், 2026 விஜய் முதல்வராக வருவதற்கு வாய்ப்பே இல்லை. அது என் கணிப்பு.

திமுக கூட்டணி உடையாமல் யாராலும் ஆட்சியைப் பிடிக்க முடியாது. இன்றைய தேதியில் அந்தக் கூட்டணி பலமாகவே இருக்கிறது. விஜய் அதிமுகவுடன் கூட்டணி இல்லை என்கிறார். அதிமுக ஏன் அதை மறுக்கவில்லை. பாஜகவுடன் கூட்டணி இல்லை என உறுதியாகச் சொல்கிறார் எடப்பாடி. அவர் பாமக மற்றும் தவெகவுடன் கூட்டணியே இல்லை எனச் சொல்வரா? மாட்டார். தவெக மற்றும் அதிமுக இடையே கூட்டணி அமைந்தால், விஜய்க்கு எதிர்பார்க்க முடியாத அளவுக்கு எம்.எல்.ஏக்கள் கிடைப்பார்கள். அது உறுதி. கூட்டணியை விஜய் ஏற்பாரா? மாட்டாரா என்பது வேறு கதை. ஏற்பட்டால் வெற்றி உறுதி.
விஜய் பாஜக பக்கம் போக மாட்டார். திமுகதான் அவருக்கு எதிரி. நாதகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை. மீதி உள்ள கட்சிகள் என்ன? அதிமுகதான் பெரிய வாய்ப்பு. அதை மறுத்துவிட்டார். தேமுதிக, தமாகா, பாமக என சில வாய்ப்புகள்தான் உள்ளன. அதை வைத்து வெற்றி சாத்தியமில்லை. ஆகவே, காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் என பலரிடம் விஜய் தரப்பு பேசி வருகிறது. அதில் ஒரு அமைந்தால் திமுக பலத்தைக் குறைக்கலாம். அதிமுகவுக்கும் வேறு வாய்ப்புகள் குறைவு. நாதகவுடன் கூட்டணிக்குக் கடுமையாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். அதேபோல் 2025 டிசம்பர் வாக்கில் தவெகவில் மாற்றங்கள் வரலாம்" என்கிறார்












Click it and Unblock the Notifications