போதும் சாமி.. வந்த பாதையிலேயே ஓட்டமெடுக்கும் பாஜக முக்கிய நிர்வாகிகள்! மாறிய சீசன்! அடுத்த விக்கெட்!
சென்னை : பாஜக முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து கட்சியில் இருந்து வெளியேறி, வெவ்வேறு கட்சிகளில் இணையும் சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் நிறுவன பொதுச்செயலாளர் அருணாச்சலம், கமல்ஹாசனை நேரில் சந்தித்து மீண்டும் அக்கட்சியில் இணைந்தார். அருணாச்சலம் 2020-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில், பாஜகவின் பொருளாதார அணியின் மாநிலத் துணைத் தலைவர் முனியசாமி, மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார்.

மாற்றுக் கட்சிகள் டூ பாஜக
பாஜக மாநிலத் தலைவராக எல்.முருகன் பொறுப்பேற்றது முதல், கட்சியில் உறுப்பினர்களைச் சேர்க்கும் படம் வெகு தீவிரமாக நடக்கத் தொடங்கியது. ரௌடிகள், சமூக விரோதிகள் பலரும் பாஜகவில் சேர்ந்தது கடும் சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. ஆனால், அதற்கெல்லாம் அசராமல் ஆட்களை வண்டியில் ஏற்றிக் கொண்டிருந்தது பாஜக. திமுக, அதிமுக, மக்கள் நீதி மய்யம் எப மாற்றுக் கட்சிகளில் இருந்தும் ஏராளமானோர் பாஜகவில் இணைந்து வந்தனர்.

பாஜகவுக்கு ஜம்ப்
2021 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எல்.முருகன் மத்திய அமைச்சர் ஆக்கப்பட்ட நிலையில், அண்ணாமலை பாஜக மாநிலத் தலைவர் ஆனார். அதன் பிறகு, மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவிற்கு ஆட்களை கொண்டு வர தனி அசைன்மெண்ட்டே நடத்தப்பட்டது. திமுக, அதிமுகவில் முக்கிய பொறுப்புகளில் இருந்த பலரும், மாநில பதவிகளோடு பாஜகவுக்கு ஜம்ப் அடித்தனர். இதனால், பாஜக பொதுக்கூட்டங்களில் கூட்டமும் கூடத் தொடங்கியது.

சரண்டர்
இப்போது அந்த சீசன் முடிந்து, பாஜகவில் இருந்து மாற்றுக் கட்சிகளுக்கு டைவ் அடிக்கும் சீசன் தொடங்கி இருக்கிறது. பாஜகவில் மாநில பதவிகள் கிடைக்கிறது எனச் சென்றவர்கள், அங்கு பதவி கிடைத்தாலும் முக்கியத்துவம் இல்லை என்பதை உணர்ந்து, தத்தம் கட்சிகளுக்கே மீண்டும் தாவி வருகின்றனர். திமுக முன்னாள் எம்.எல்.ஏ கு.க.செல்வம், பாஜகவில் இருந்து மீண்டும் திமுகவிலேயே சரண்டர் ஆகி, அங்கும் முக்கிய பதவியைப் பெற்றிருக்கிறார்.

இரவோடு இரவாக
சில மாதங்களுக்கு முன்பு அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் கார் மீது பா.ஜ.கவினர் நடத்திய செருப்பு வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து மதுரை மாநகர் மாவட்ட தலைவராக இருந்த டாக்டர் சரவணன் பாஜகவிலிருந்து விலகினார். இரவோடு இரவாக அமைச்சர் பிடிஆரை சந்தித்து வருத்தம் தெரிவித்து பாஜகவின் அரசியல் தனக்கு செட்டாகவில்லை எனக் கூறி பாஜகவில் இருந்து வெளியேறினார் சரவணன். அவர் திமுக தலைமையின் கண்ணசைவுக்காகக் காத்திருக்கிறார்.

தாவிய மாநில நிர்வாகி
இந்நிலையில், கடந்த சில நாட்களில் மட்டும் முக்கியமான பொறுப்புகளில் இருந்த பாஜக நிர்வாகிகள் விலகி, தாங்கள் முன்பு இருந்த கட்சிகளிலேயே சேர்ந்து வருகின்றனர். பாஜக பொருளாதார அணியின் மாநிலத் துணைத் தலைவராக இருந்த மதுரையைச் சேர்ந்த முனியசாமி, சென்னையில் கமல்ஹாசனைச் சந்தித்து மக்கள் நீதி மய்யம் கட்சியில் இணைந்தார். இவர் ஏற்கெனவே மக்கள் நீதி மய்யத்திலிருந்துதான் பா.ஜ.கவுக்கு சென்றவர்.

அருணாச்சலம்
அதேபோல, மக்கள் நீதி மய்யம் கட்சியின் முன்னாள் நிறுவன பொதுச்செயலாளர் அருணாச்சலம், கமல்ஹாசனை நேற்று நேரில் சந்தித்து மீண்டும் அக்கட்சியில் இணைந்தார். அருணாச்சலம் 2020-ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக மநீம வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலில் ஆழங்காற்பட்ட அனுபவம் மிக்க அருணாச்சலம் தமிழக அரசியலில் ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்த நம்மவர் அவர்களால் தான் முடியும் என்பதை உணர்ந்து களப்பணியாற்றியவர். அவர் மீண்டும் நம்மோடு இணைவது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக டூ பாமக
முன்னாள் திருத்தணி எம்.எல்.ஏ. ரவிராஜ் கடந்த 2017ஆம் ஆண்டு பாமக கட்சியில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தார். பாஜகவில் மாநில செயற்குழு உறுப்பினராக இருந்து வந்த ரவிராஜ், சமீபத்தில் அக்கட்சியில் இருந்து விலகி ராமதாஸ் முன்னிலையில் மீண்டும் பாமகவில் இணைந்தார். இதேபோல, பா.ஜ.க வர்த்தக அணி மதுரை மாவட்டச் செயலாளர் ஜெயராமன், சமீபத்தில் அமமுகவில் இணைந்தார்.

பாஜக டூ அதிமுக
பாஜகவில் இருந்து வந்த முன்னாள் கவுன்சிலர் ராஜா சீனிவாசன், சில நாட்களுக்கு முன்பு செல்லூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். இவரும் அதிமுகவிலிருந்து பாஜகவுக்கு சென்றவர்தான். பாஜகவில் இருந்த மைதிலி வினோ, சில மாதங்களுக்கு முன்னர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இப்படி, பாஜக நிர்வாகிகள் அடுத்தடுத்து தத்தம் பழைய கட்சிகளுக்கே தாவி வருவது பாஜகவினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீசன் மாறிடுச்சா
பாஜகவில் சேர்ந்ததுமே முக்கிய பதவி வழங்கப்படும் என்ற ஆசைகாட்டி, பலரும் மாற்றுக் கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு இழுக்கப்பட்ட நிலையில், பதவி கிடைத்தாலும், முக்கியத்துவம் இல்லை, மக்களிடமும் மரியாதை இல்லை என்பதை உணர்ந்தே மீண்டும் கட்சி மாறி வருகிறார்கள் எனக் கூறப்படுகிறது. பலரும் மற்ற கட்சிகளில் இருந்து பாஜகவுக்கு தாவிய சீசன் முடிந்து, தற்போது பாஜகவில் இருந்து பறக்கும் சீசன் நடைபெறுகிறது என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications