V.R.Mall Parking: சென்னை வி.ஆர்.மாலில் பார்க்கிங் கட்டணம் வசூலிக்க தடை! நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி
சென்னை: சென்னை திருமங்கலத்தில் உள்ள வி.ஆர்.மாலில் வாகனங்கள் நிறுத்த பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என சென்னை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை திருமங்கலத்தில் முக்கியமான இடத்தில் வி.ஆர்.மால் உள்ளது. இங்கு ஏராளமான உணவு கடைகள், அழகு சாதன பொருட்கள் விற்பனையகம், தியேட்டர்கள், ஆடைகள் விற்பனை கடை, ஜூஸ், ஐஸ்கிரீம் பார்லர் உள்ளிட்டவை உள்ளன. 6 மாடிகளை கொண்ட இந்த மாலில் 200-க்கும் மேற்பட்ட கடைகளும், 10 தியேட்டர்களும் உள்ளன.

இந்த வி.ஆர்.மாலுக்கு வரும் வாடிக்கையாளர்களின் வாகனங்களை விடுவதற்கு பார்க்கிங் உள்ளன. இதற்காக கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. அந்த வகையில் ஒரு மணி நேரத்திற்கு ரூ 50 வசூலிக்கப்படுகிறது. அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தலா ரூ 30 வசூலிக்கப்படுகிறது.
பார்க்கிங் கட்டணம்
உதாரணமாக காலை 9 மணிக்கு வண்டியை விட்டுவிட்டு சரியாக 10 மணிக்கு எடுத்துவிட்டால் வெறும் ரூ 50 கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு வேளை அடுத்து ஒரு மணி நேரம் கூடுதலாக அதாவது 11 மணிக்கு வந்தால் 50+ 30= 80 ரூபாய் செலுத்த வேண்டும்.
தியேட்டர்
அங்குள்ள தியேட்டர்களுக்கு செல்வோர் அதிகம் வி.ஆர் மாலுக்கு வருவதால் அவர்களுக்கு டிக்கெட் கட்டணத்தை விட திண்பண்டங்கள் கட்டணமும் பார்க்கிங் கட்டணமும்தான் அதிகம் ஆகிறது. மேலும் பார்க்கிங்கிற்காக அத்தனை காசு வாங்கினாலும் போதிய அளவில் இடவசதி இல்லை என சொல்லப்படுகிறது.
சென்னை நபர் வழக்கு
இதை எதிர்த்து சென்னை கொசப்பேட்டையை சேர்ந்த அருண்குமார் என்பவர் சென்னை வடக்கு மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார் மனு அளித்திருந்தார். அந்த மனுவில், கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி வி.ஆர். மாலுக்கு சென்றேன். அங்கு வாகன நிறுத்துமிடத்தில் வாகனத்தை நிறுத்தியிருந்தேன்.
ரூ 80 கட்டணம்
ஒரு மணி நேரம் 57 நிமிடங்களுக்கு பார்க்கிங் கட்டணமாக ரூ 80 வசூலிக்கப்பட்டது. என்னிடம் பார்க்கிங் கட்டணம் வசூலித்தது நியாயமற்றது என்பதால் ஒரு லட்சம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவாக ரூ 50 ஆயிரம் வழங்கவும் மால் நிர்வாகத்திற்கு உத்தரவிட வேண்டும். தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகள்படி வணிக வளாகங்களில் போதுமான வாகன நிறுத்துமிடத்திற்கான வசதிகளை செய்து தர வேண்டியது அவசியம். என கோரிக்கை விடுத்திருந்தார்.
பார்க்கிங் கட்டணம்
இந்த மனு மீதான விசாரணையின் போது "தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டட விதிகளில் வணிக வளாகங்களில் வாகனங்கள் பார்க்கிங் கட்டணம் வசூலிக்கக் கூடாது என கூறப்படவில்லை" என வணிக வளாகம் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டது.
வாகன நிறுத்திமிட கட்டணம் வசூலிக்கக் கூடாது
இதை அந்த ஆணையம் நிராகரித்தது. மேலும், "பார்க்கிங் கட்டணம் வசூலிக்கலாம் என்பது தொடர்பான விதிகள் எதையும் வணிக வளாக நிர்வாகம் தாக்கல் செய்யவில்லை. திருமங்கலத்தில் உள்ள வணிக வளாகம் , வாடிக்கையாளர்களிடம் இருந்து வாகனங்களை நிறுத்த கட்டணம் எதுவும் வசூலிக்கக் கூடாது, பார்க்கிங் கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்திட வேண்டும். கழிப்பறை, எஸ்கலேட்டர் உள்ளிட்டவை போன்று பார்க்கிங்கும் அடிப்படை வசதிகளின் பட்டியலில் வருமா? சட்டப்பூர்வமாக ஒழுங்குப்படுத்தப்பட்டால் மட்டுமே வாகன கட்டணம் வசூலிக்க முடியுமா என்ற கேள்விகளுக்கு விடைகாண நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு அதிகாரமில்லை என தெளிவுப்படுத்தியுள்ளது. மேலும் மனுதாரருக்கு ரூ 10 ஆயிரம் இழப்பீடும், வழக்குச் செலவாக ரூ 2000 என ரூ 12 ஆயிரம் வழங்கவும் வணிக வளாகத்திற்கு உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications