சென்னையில் நடு ரோட்டில் ரூ.2000 கோடியுடன் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி.. குவிந்த பொதுமக்கள்
Recommended Video

சென்னை: அமைந்தகரை பகுதியில் ரூ.2,000 கோடியுடன் பழுதாகி நின்ற கன்டெய்னர் லாரி பரபரப்பை ஏற்படுத்தியது.
2016ம் ஆண்டு மே 13ம் தேதி, வாகன சோதனையில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ஈடுபட்டபோது, 3 கன்டெய்னர் லாரிகளில், ரூ.570 கோடியை பறிமுதல் செய்தனர்.
பணத்துக்கு பாதுகாப்பாக காரில் வந்த நபர்களிடம், அதற்கான ஆவணங்கள் இல்லை. போலீசாரின் விசாரணையில், கன்டெய்னர் லாரிகளின் பதிவு எண்கள் போலியானவை என்பது தெரியவந்தது.

எஸ்பிஐ பணம்
சட்டவிரோதமாக கடத்தப்பட்ட பணத்தின் உரிமையாளரை, காப்பாற்ற, மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், எஸ்பிஐ வங்கி அது தங்கள் பணம் என கூறியது. மர்மமான இந்த வழக்கு, சென்னை ஹைகோர்ட் உத்தரவை தொடர்ந்து, சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது.

ரிசர்வ் வங்கி பணம்
இந்த நிலையில், மைசூரில் இருந்து சுமார் ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான நோட்டுகளை ஏற்றிக்கொண்டு சென்னை ரிசர்வ் வங்கிக்கு கன்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தது. நேற்றிரவு அமைந்தகரை பகுதியில் வந்தபோது அந்த லாரி திடீரென பழுதாகி நின்றது. கியர் பாக்சில் பழுது ஏற்பட்டது தெரியவந்தது.
அதை உடனே சரிசெய்ய முடியாததால் கன்டெய்னர் லாரி சாலையின் நடுவில் சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக பணத்துடன் நின்று கொண்டிருந்தது.

வேடிக்கை கூட்டம்
லாரியை சுற்றிலும் துப்பாக்கி ஏந்திய போலீசார் நின்றனர். இதை பார்த்த மக்கள் அதிசயித்தனர். தகவலறிந்த பொதுமக்கள் அங்கு வேடிக்கை பார்க்க திரண்டனர். பொதுமக்கள் கூடியதால் லோக்கல் காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் பாதுகாப்புக்காக விரைந்து வந்தனர்.

திடீர் பரபரப்பு
லாரி பாதுகாப்பாக வந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் பணம் இருந்த கன்டெய்னரை யாரும் நெருங்கிவிடாமல் இருக்க கண்ணில் விளக்கெண்ணையை ஊற்றியபடி கண்காணிப்பில் ஈடுபட்டனர். அதன்பின்னர் மீட்பு வேன் அங்கு வரவைக்கப்பட்டு, கன்டெய்னர் லாரி ரிசர்வ் வங்கி அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சுமார் ஒருமணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications