தொடர் விடுமுறை காரணமாக ஏ.டி.எம் மையங்களில் பணம் நிரப்பாத வங்கிகள்.. மக்கள் கடும் அவதி
சென்னை: தொடர் விடுமுறை காரணமாக தலைநகர் சென்னையில் உள்ள ஏ.டி.எம் மையங்களில், பணம் இல்லாமல் அவதியடைந்துள்ளதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். மக்களவை தேர்தல் மற்றும் புனித வெள்ளி என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை காரணமாக ஏடிஎம் மையங்களில் பணம் இல்லாத சூழல் உள்ளது.
தொடர் விடுமுறையால் ஏ.டி.எம் மெஷின்களில் வங்கிகள் பணத்தை நிரப்பாததே இதற்கு காரணம். வங்கிகளின் இந்த செயல்பாடு காரணமாக அவசர தேவைகளுக்கு கூட தங்களால் பணம் எடுக்க முடியவில்லை என தலைநகரில் வசிக்கும் மக்கள் குமுறுகின்றனர்.

ஏ.டி.எம் மையங்களில் பணம் எடுக்கச் சென்றால், ஒன்றுக்கு 5 மையங்களை தேடி அலைந்தாலும் அவற்றில் எதிலுமே பணம் இல்லை என மக்கள் கூறியுள்ளனர். ஏ.டி.எம் என்பது அவசர தேவைகளுக்கு பணம் எடுக்க தானே அமைக்கப்பட்டன.
விடுமுறை நாட்கள், வங்கி மூடியுள்ள நேரம் உள்ளிட்ட நேரங்களில் அவசர தேவைகளுக்கு உபயோகிக்க தானே ஏ.டி.எம் மெஷின்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இப்படி அதில் பணம் போடாமல் வங்கிகள் மக்களை அலைக்கழிப்பது நியாயமா என கேள்வி எழுப்பியுள்ளனர்.
மருத்துவமனை உள்ளிட்ட அத்தியாவசிய செலவுகளுக்கு பணம் தேவைப்படுவோரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க, நடமாடும் ஏடிஎம் மையங்களை அமைத்து பொதுமக்களுக்கு உதவ வங்கிகள் முன்வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications