மத்திய பாஜக ஆட்சியில் அமலாக்கத்துறை + சிபிஐ.. 2014 முதல் தற்போது வரை ஏற்படுத்திய சர்ச்சைகள்!
சென்னை: சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறையின் நடவடிக்கைக்கு திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்நிலையில் கடந்த 2014ம் ஆண்டு முதல் பல்வேறு மாநிலங்களில் மத்திய அரசின் விசாரணை அமைப்புகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது எடுத்துள்ள நடவடிக்கைகள் பேசுபொருளாகியுள்ளன.
சிபிஐ தோற்றம்: இந்தியாவில் மிகவும் பலம் வாய்ந்த விசாரணை அமைப்புகளாக என்ஐஏ, சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை பார்க்கப்படுகிறது. இதில் சிபிஐதான் மிகவும் பழமையான புலனாய்வு அமைப்பாகும். இரண்டாம் உலகப்போரின் போது போர் மற்றும் வழங்கல் துறையில் பல்வேறு முறைகேடுகள் நடந்தன. இதில் பெருமளவு லஞ்ச புகார்கள் குவிந்தது. இதனையடுத்து இதை விசாரிக்க 'சிறப்பு காவல் ஸ்தாபனம்' 1941ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.
போர் முடிந்த பின்னரும் இந்த அமைப்பு கலைக்கப்படாமல் இருந்தது. பின்னர், இது 1963ம் ஆண்டில் இது, சிபிஐ-ஆக பரிணமித்தது. இந்த மாற்றத்திற்கு அடிப்படை வித்திட்டவர் அப்போதைய உள்துறை அமைச்சராக இருந்த லால் பகதூர் சாஸ்திரிதான். இதன் பின்னர் சிபிஐ-ன் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக மாநில அரசின் விவகாரங்களில் இது தலையிட தொடங்கியது. மறுபுறம் இந்த விசாரணை/புலனாய்வு அமைப்புகள் தன்னிச்சையாக இயங்கவில்லை என்று குற்றச்சாட்டுகளும் எழுந்தன.

மணீஷ் சிசோடியா: கடந்த 2016ம் ஆண்டு டெல்லி ஆம் ஆத்மி அரசாங்கத்தின் முதன்மை செயலாளர் ராஜேந்திர குமார் மற்றும் கேபினட் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் ஆகியோரின் அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு மேற்கொண்டது. மேலும், டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவிடமும் விசாரணை நடத்தியது. இதன் தொடர்ச்சியாக கடந்த 2020ம் ஆண்டு ஜிஎஸ்டி முறைகேடுகள் தொடர்பான ஊழல் வழக்கில் சிசோடியாவின் அலுவலகத்தில் சிறப்புப் பணியில் இருந்த அதிகாரி கோபால் கிருஷ்ணா மத்தியா கைது செய்யப்பட்டார். பின்னர் இந்த ஆண்டு தொடக்கத்தில் சிசோடியாவையும் சிபிஐ கைது செய்தது.
ப.சிதம்பரம்: அதேபோல முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்திக் சிதம்பரம் எம்பி சம்பந்தப்பட்டிருப்பதாக சொல்லப்படும் ஐஎன்எக்ஸ் மீடியா தொடர்பான வழக்கையும் சிபிஐதான் கையில் எடுத்தது. ஐஎன்எக்ஸ் மீடியாவில் ரூ.305 கோடி மதிப்பிலான அன்னிய நேரடி முதலீட்டில் முறைகேடு நடந்ததாக இருவர் மீதும் குற்றம்சாட்டப்பட்டது.
இந்த வழக்கு நடந்துக்கொண்டிருக்கும்போதே எதிர்பாராத விதமாக கடந்த 2019ம் ஆண்டு நள்ளிரவில் ப.சிதம்பரத்தை சிபிஐ அதிரடியாக கைது செய்தது. இந்த நடவடிக்கைக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். ஆனால், சிதம்பரம் 106 நாட்களுக்கு பிறகுதான் விடுவிக்கப்பட்டார்.
என்டிடிவி: இது ஒருபுறம் எனில் மறுபுறம், ஊடகங்களையும் கூட புலனாய்வு அமைப்புகள் மிரட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. என்டிடிவி (NDTV) செய்தி ஊடகம் போலியான நிறுவனங்களை உருவாக்கி அதில் முதலீடு செய்ததாக அதன் உரிமையாளர்களான பிரணாய் ராய் மற்றும் அவரது மனைவி ராதிகா ராய் ஆகியோர் மீது சிபிஐ குற்றம்சாட்டியது. அது மட்டுமல்லாது அவர்களிடம் கடந்த 2017ம் ஆண்டு விசாரணையையும் நடத்தியது.
இதன் தொடர்ச்சியாக 2019ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிபிஐ அவர்கள் மீது FDI மீறல்களுக்காக புதிய வழக்கு ஒன்றையும் பதிவு செய்தது. இந்நிலையில்தான் இதே மாதத்தில் வெளிநாடு செல்ல இருந்த அவர்களை அதிகாரிகள் விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தினர்.
விசாரணை: 2014ம் ஆண்டுக்கு பின்னர் சிபிஐ மீதான குற்றச்சாட்டுகள் டபுள் மடங்காக அதிகரித்தன. அதாவது கடந்த 2004ம் அண்டு முதல் 2014ம் ஆண்டு வரை 72 முக்கிய அரசியல் தலைவர்களை சிபிஐ விசாரித்துள்ளது. இதில் 29 பேர் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சியை சேர்ந்தவராவார்கள். 43 பேர் எதிர்க்கட்சியை சேர்ந்தவராவார்கள். இதே நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு (2014 முதல் தற்போது வரை) 118 எதிர்க்கட்சித் தலைவர்களிடம் சிபிஐ விசாரணைகளை நடத்தியிருக்கிறது.
அமலாக்கத்துறை: இதுவரை நாம் பார்த்தது எல்லாம் சிபிஐ மீதான குற்றச்சாட்டு மட்டும்தான். இதேபோல அமலாக்கத்துறை மீதும் ஏராளமான குற்றச்சாட்டுகள் இருக்கின்றன. தனிப்பட்ட நபர்களுக்கு சிபிஐ எனில், ஒரு கட்சியை கூண்டோடு கலைப்பதற்கும், மிரட்டுவதற்கும் அமலாக்கத்துறை பயன்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.
சஞ்சய் ராவத்: மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்பில் மோசடி நடைபெற்றதாகவும், சட்டவிரோத பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதாகவும் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவதின் உதவியாளர் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு கொஞ்சம் கொஞ்சமாக சஞ்சய் ராவத்தையும் பாதம் பார்க்க தொடங்கியது. கடைசியாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 1ம் தேதியன்று அவரை அமலாக்கத்துறை கைது செய்தது.
கட்சி மாறிய தலைகள்: இவரை போலவே தற்போது அசாம் முதலமைச்சராக இருக்கும் ஹிமந்தா பிஸ்வா சர்மா, மேற்குவங்க எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி, முகுல் ராய், பஞ்சாப் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆகியோரையும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. ஆனால், இவர்கள் அனைவரும் பாஜக பக்கம் தாவிவிட்டனர். இதன் பின்னர் அமலாக்கத்துறை இவர்கள் குறித்து எந்த விசாரணையும் நடத்தவில்லை.
இது மட்டுமல்லாது மகாராஷ்டிராவில் மகாராஷ்டிர விகாஸ் அகாடி கூட்டணியிலிருந்து சிவசேனா (ஷிண்டே பிரிவு) பிரிந்து வந்ததற்கு பின்னணியில் அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. தெலங்கானாவின் முதலமைச்சரான சந்திரசேகரராவின் மகள் கவிதா மீதான வழக்கு, கேரளாவின் தங்க கடத்தல் வழக்கு ஆகியவற்றிலும் மத்திய அரசு விசாரணை அமைப்புகளை பயன்படுத்தவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
விசாரணை: கடந்த 2004ம் ஆண்டு முதல் 2014ம் ஆண்டு வரை அமலாக்கத்துறையானது 26 அரசியல் தலைவர்களை விசாரித்துள்ளது. இதில் 54% பேர் எதிர்க்கட்சிகளை சேர்ந்தவர்களாவார்கள். ஆனால் 2014ம் ஆண்டு தொடங்கி தற்போது வரை சுமார் 121 அரசியல் தலைவர்கள் விசாரிக்கப்பட்டுள்ளனர். இதில் 95% பேர் அதாவது, 115 பேர் எதிர்க்கட்சியினரை சேர்ந்தவராவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications