போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 10 நாள் முன்பு ஜாமீனில் வந்தவர் வேட்பாளர்.. விஜய் அறிவிப்பால் சலசலப்பு
சென்னை: போதையில்லா தமிழகம் அமைப்போம் என தேர்தல் வாக்குறுதி அளித்த விஜய், கஞ்சா வழக்கில் கைதாகி 10 நாட்களுக்கு முன்பு ஜாமீனில் வெளியே வந்த நபரை பேராவூரணி தொகுதி வேட்பாளராக அறிவித்தது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் திமுக, அதிமுக, தவெக, நாதக, சசிகலா - ராமதாஸ் அணி என 5 முனைப் போட்டி நிலவுகிறது. திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுவிட்டது. நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஏற்கெனவே 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வேட்பாளர்களை அறிவித்துவிட்டார்.

முதல் முறையாக தேர்தல் களம் காணும் நடிகரும், தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய், நேற்று சென்னையில் 234 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அறிவித்து, வேட்பாளர்களை அறிமுகப்படுத்தினார். அதன்படி பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய 2 தொகுதிகளில் விஜய் போட்டியிடுகிறார்.
வேட்பாளர் பட்டியலை வெளியிடுவதற்கு முன்னதாக இளைஞர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார் விஜய். முதல் வாக்குறுதியாக, "போதைப்பொருள் இல்லாத மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றுவோம்" என்று அறிவித்தார் தவெக தலைவர் விஜய்.
போதைப்பொருட்கள் உள்வரவை தடுக்கவும், போதைப்பொருள் விற்பனையை கட்டுப்படுத்தவும் கடுமையான சட்டங்களை கொண்டு வருவோம். சமூக காவல் உள்ளிட்ட பல்வேறு முயற்சிகளை முழு அர்ப்பணிப்புடன் மேற்கொள்வோம். போதைப்பொருட்களால் ஏற்படும் மோசமான விளைவுகள் குறித்து பொது விழிப்புணர்வை ஏற்படுத்தவும், அதைத் தடுக்கவும் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதை எதிர்ப்பு மன்றங்களை நிறுவுவோம் என்று அறிவித்தார் விஜய்.
இந்நிலையில், விஜய் வேட்பாளராக அறிவித்த பேராவூரணி தொகுதி வேட்பாளர் சந்திரகாண்டீபன் மீது கஞ்சா கடத்தல் வழக்கு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு 13 கிலோ கஞ்சாவுடன் பிடிபட்ட இவர், 10 நாட்களுக்கு முன்புதான் சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இவர் மீது கொலை, கொலை முயற்சி, அடிதடி, ஆள் கடத்தல் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜாமீனில் வெளிவந்த சில நாட்களுக்குள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து அவர் சீட் பெற்றுள்ளார் என்று கூறப்படுகிறது. முன்னதாக சந்திரகாண்டீபன் பாஜக மாவட்ட விவசாய அணி செயலாளராக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தஞ்சை மாவட்ட தவெக வேட்பாளர்களைப் பொறுத்தவரை பேராவூரணி தொகுதியில் சந்திரகாண்டீபன், பட்டுக்கோட்டையில் ஏனாதி சி. மதன், ஒரத்தநாட்டில் அரவிந்த், தஞ்சாவூரில் சரவணன், திருவையாறு மணிகண்டன், பாபநாசம் அசாருதீன், திருவிடைமருதூர் பிரபாகரன், மற்றும் கும்பகோணத்தில் வினோத் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications