வீட்டு மனை வகைமாற்ற வழக்கு.. கடலூர் தாசில்தாருக்கு கடும் கண்டனம் தெரிவித்த ஹைகோர்ட்.. அதிரடி உத்தரவு
சென்னை: நிலத்தை வீட்டு மனையாக வகைமாற்றம் செய்யக்கோரி கடலூரைச் சேர்ந்தவர் தொடர்ந்த வழக்கில் உயர் அதிகாரிகளுக்காக பதில் மனு தாக்கல் செய்த தாசில்தாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
கடலூரைச் சேர்ந்த சார்லஸ் ஜெயக்குமார் என்பவர் பள்ளிக்கூடம் கட்டுவதற்காக கணிசமான நிலம் வாங்கி உள்ளார். அந்த நிலத்தில் பள்ளிக்கூடம் கட்ட அவர் விரும்பவில்லை.. அந்த நிலத்தை, வீட்டு மனையாக வகைமாற்றம் செய்து தரக்கோரி கடலூர் மாவட்ட நகரமைப்பு திட்டத் துறை உதவி இயக்குனரிடம் விண்ணப்பித்துள்ளார். ஆனால் அவரது மனு மீது எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதுபற்றி முறையிட்டு பார்த்த சார்லஸ் ஜெயக்குமார், ஒரு கட்டத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன், இந்த வழக்கிற்கு கடலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட வருவாய் அதிகாரி, வருவாய் கோட்டாட்சியர், கடலூர் மாவட்ட நகரமைப்பு திட்டத் துறை உதவி இயக்குனர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.
இந்நிலையில் இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, உயர் அதிகாரிகள் சார்பில் தாசில்தார் பதில் மனு தாக்கல் செய்தார். இதற்கு நீதிபதி கடும் கண்டனம் தெரிவித்தார்.
இதுபற்றி நீதிபதி பி.வேல்முருகன் உத்தரவிடுகையில் "எந்த அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு தொடரப்படுகிறதோ, அந்த அதிகாரி தான் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும். உயர் அதிகாரிகளுக்காக இதுபோல தாசில்தார், பதில் மனு தாக்கல் செய்யக்கூடாது என்று ஏற்கனவே விரிவான உத்தரவு பிறப்பித்துள்ளேன். அதையும் மீறி இந்த பதில் மனு தாக்கல் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.
இந்த பதில் மனுவை அபராதத்துடன் நிராகரிக்கிறேன். உயர் அதிகாரிகளுக்காக பதில் மனுவை தாக்கல் செய்த தாசில்தாருக்கு ரூ.10 ஆயிரம் வழக்குச்செலவு (அபராதம்) விதிக்கிறேன். இந்த தொகையை அவரது ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும். கடலூர் மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்" என்று உத்தரவிட்டார்.
அப்போது, அபராதம் விதித்த உத்தரவை திரும்ப பெறவேண்டும் என்று தமிழக அரசின் வழக்கறிஞர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதி, இனி எந்த ஒரு தாசில்தாரும் இதுபோல பதில் மனுவை தாக்கல் செய்யக்கூடாது என்பதற்காகத்தான் அபராதம் விதித்துள்ளேன்'' என்று நீதிபதி வேல்முருகன் கூறினார்.












Click it and Unblock the Notifications