ரயில் விபத்து துயரம்! முதலமைச்சருக்கு மனசே சரியில்லை! கனிமொழி வீட்டில் துரைமுருகன் பகிர்ந்த தகவல்!
சென்னை: ஒடிஸாவில் நிகழ்ந்த கோரமண்டல் ரயில் விபத்து சம்பவத்தால், முதலமைச்சரின் மனசே சரியில்லை என மூத்த அமைச்சர் துரைமுருகன் ராஜாத்தி அம்மாளிடம் எடுத்துக் கூறினார்.
கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாளை ஒட்டி சென்னை சிஐடி காலனியில் உள்ள கனிமொழி இல்லத்துக்கு சென்ற முதல்வர் ஸ்டாலின், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். அப்போது முதலமைச்சரின் முகத்தில் சிரிப்பை பார்க்க முடியவில்லை.
சோகமான முகத்துடன் முதல்வர் நிற்பதை பார்த்த ராஜாத்தி அம்மாள் அது குறித்து ஸ்டாலினிடம் எதுவும் கேட்காவிட்டாலும் , துரைமுருகன் அது குறித்து விளக்கம் அளித்திருக்கிறார். கருணாநிதி நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை மிகவும் எழுச்சியோடு கொண்டாட திட்டமிட்டிருந்த தருணத்தில் கோரமண்டல் ரயில் விபத்தால் முதல்வரின் மனசே சரியில்லை எனத் தெரிவித்திருக்கிறார்.

துரைமுருகன் கூறியதற்கேற்ப தான் ஸ்டாலினும் கவலை தேய்ந்த முகத்துடன் காணப்பட்டார். வழக்கமாக கருணாநிதி பிறந்தநாள் என்றால் உற்சாகம் பொங்க சிரித்த முகத்துடன் வலம் வரும் ஸ்டாலின் இன்றைய தினம் உற்சாகமின்றி காணப்பட்டார். இதனிடையே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அலைபேசி மூலம் அவ்வப்போது ஒடிஸா கள நிலவரத்தை கேட்டறிந்துகொண்டார்.
கனிமொழியின் கணவர் அரவிந்தனை சந்தித்த போது மட்டும் லேசாக புன்னகைத்த முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூர் பயணம் குறித்து பேசினார். ஏனெனில் கனிமொழியின் கணவர் அரவிந்தன் சிங்கப்பூரில் தொழில் செய்து வருவதும் அவருக்கு சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமை இருக்கிறது என்பது கூடுதல் தகவலாகும்.
தனது இல்லத்துக்கு ஸ்டாலின் வந்து சென்ற பிறகு மகளிரணி நிர்வாகிகளோடு கருணாநிதி நினைவிடத்துக்கு சென்ற கனிமொழி மற்றும் அவரது தாயார் ராஜாத்தி அம்மாள் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.












Click it and Unblock the Notifications