வெளிநாடுகளில் இருந்து மருந்து பொருட்கள்.. பெரும்பாலும் மத்திய அரசு மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைப்பு
சென்னை: வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட மருத்துவ பொருட்கள் பெரும்பாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்கே அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. தற்போது நாட்டில் தினசரி மூன்று லட்சத்திற்கும் அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவுக்கு உதவ பல்வேறு நாடுகளும் முன் வந்துள்ளன. அமெரிக்கா, கனடா, பிரிட்டன் உள்ளிட்ட உலக நாடுகள் இந்தியாவுக்குத் தேவையான மருத்துவ பொருட்களை அனுப்பி வருகின்றன.
மக்களுக்கு கருணை காட்டுங்கள்.. தனியார் மருத்துவமனைகளை முழுமையாக ஒப்படைக்க கோரி ஸ்டாலின் உருக்கம்..!
17 ஆண்டுகளில் முதல்முறை
கடந்த 17 ஆண்டுகளில் வெளிநாடுகளின் உதவிகளை இந்தியா ஏற்பது இதுவே முதல்முறையாகும். இதுவரை மருந்துகள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், மாஸ்க்குகள் என மொத்தம் 40 லட்சம் மருத்துவ பொருட்களை இந்தியா பெற்றுள்ளது. அவை நாடு முழுவதும் உள்ள 86 மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்டுள்ள மருத்துவ பொருட்கள் பெரும்பாலும் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும் மருத்துவமனைகளுக்கே அனுப்பப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
வெளிநாடுகளிலிருந்து உதவி
முதல்கட்டமாக ஐக்கிய அமீரகத்திலிருந்து 20 மெட்ரிக் டன் திரவ ஆக்சிஜன் குஜதார் மாநிலத்திற்கு வந்தடைந்துள்ளது. அமெரிக்காவிலிருந்து 5ஆம் கட்டமாக 545 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியா வந்தடைந்தது. அதேபோல பிரிட்டன் நாட்டிலிருந்து சிறப்பு விமானம் மூலம் 450 ஆக்சிஜன் சிலிண்டர்கள் சென்னை வந்தடைந்தது. மேலும், குவைத் நாட்டிலிருந்தும் 60 ஆக்சிஜன் செறிவூட்டிகள் இந்தியாவுக்கு வந்துள்ளது.
சமமாக அனுப்பி வைத்துள்ளோம்
கொரோனா 2ஆம் அலையில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள டெல்லியில் இருக்கும் 8 மருத்துவமனைகளில் 6 மருத்துவமனைகளுக்கு இந்த மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது குறித்து மத்திய சுகாதார துறை அமைச்சகம் கூறுகையில், அனைத்து மாநிலங்களுக்கும் சமமாகவே மருத்து பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளன.
எந்த மாநிலங்களுக்கு முன்னுரிமை
முதலில் மாநிலங்களுக்குத் தேவையான மருத்து பொருட்கள் எய்ம்ஸ் உள்ளிட்ட மத்திய அரசு நிறுவனங்கள் மூலம் அனுப்பப்பட்டன. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களுக்கு தேவைக்கு ஏற்ப மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்திய செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் மருத்துவ பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.