சட்டசபை வளாகத்தில் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவரிடம் சோதனை.. ஏன் தெரியுமா?
சென்னை: சட்டசபை கூட்டத் தொடரில் கலந்து கொள்வோருக்கு கொரோனா வைரஸ் சோதனை நடத்தப்பட்டு பின்னர் அனுமதிக்கப்படுகிறார்கள்.
இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 110-ஆக உயர்ந்துள்ளது. வேகமாக பரவி வரும் இதை கட்டுப்படுத்த நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் தொடர்ந்து நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் மருத்துவக் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழக சட்டசபை கூட்டத் தொடரில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த எம்எல்ஏக்களுக்கு கொரோனா அறிகுறிகள் குறித்த பரிசோதனை செய்யப்பட்டது.
சோதனைகளுக்கு பிறகு எம்எல்ஏக்கள் சட்டசபைக்குள் அனுமதிக்கப்பட்டனர். அது போல் சட்டசபை ஊழியர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. தமிழகத்தில் கொரோனா வைரஸால் ஒருவர் மட்டுமே பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த அந்த நபருக்கு தற்போது நோய் குணமடைந்த நிலையில் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுகிறார். எனினும் தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஜரூராக நடத்தி வருகிறது சுகாதாரத் துறை.
இந்த சோதனையில் முதல்வர், துணை முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித் துணை தலைவர், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட அனைவரும் பரிசோதனை நடத்தப்பட்டது. அது போல் மக்கள் கூடும் இடங்களிலும் இதுபோன்ற பரிசோதனைகளை அரசு முடுக்கிவிட்டுள்ளது.