"மனித உடல்கள்".. எந்த ஊர்னே தெரியல.. வரிசையாக அடுக்கி வச்சு.. பெட்ரோலை ஊற்றி.. எரியும் சடலங்கள்..!
பொதுவெளியில் கொரோனா நோயாளிகளின் சடலங்கள் எரியூட்டப்படுகின்றன
சென்னை: இது எந்த ஊர்ன்னே தெரியல... ஒரு பாலத்துக்கு அடியில் குவியல் குவியலாக சடலங்கள் எரிந்து கொண்டிருக்கின்றன.. இந்த வீடியோ இணையத்தில் வெளியாகி மனித இதயத்தையே கூறுபோட்டு வருகிறது!
Recommended Video
இரண்டாம் அலை பரவி கொண்டிருக்கிறது.. இந்த அலை முதல் கொரோனா தொற்று அலையைவிட ஆபத்தாக இருக்கும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் எச்சரித்திருந்தனர்.. பன்மடங்கு பரவும் வீரியம் கொண்டது என்றும் அலர்ட் செய்திருந்தனர்.. ஆனால், இவ்வளவு கொடூரம் என்று மக்கள் எதிர்பார்க்கவில்லை.
முதல் அலை பரவும்போது அசால்ட்டாக இருந்தவர்கள்கூட இப்போது பீதியும் கலக்கமும் சூழ்ந்து காணப்படுகின்றனர்.. ஆராய்ச்சியாளர்களே ஒன்றும் புரியாமல் விழிக்கிறார்கள்.. இதற்கான தீர்வில் தங்களையே அர்ப்பணித்து கொண்டு ஈடுபடுத்தியும் வருகிறார்கள். இந்த தொற்று பரவலை தடுக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

சோகம்
எனினும், இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் கொரோனாவினால் 2,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து வரும் சோகம் நடந்து வருகிறது.. இதைவிட சோகம், இவர்களை அடக்கம் செய்ய முடியாமல் உறவினர்கள் தவித்து வருகிறார்கள்.. பல நகரங்களில் சுடுகாடுகள் இரவு பகலாக இயங்கி வருகின்றன. இறந்தவர்களின் உடலை எரிக்கவோ, புதைக்கவோ மக்கள் பல மணிநேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.

சுடுகாடு
இப்போது நிலைமை என்னவென்றால், சுடுகாடுகளுக்கு காத்திருந்தால் வேலைக்காகாது என்று நட்டநடு மைதானங்களில் பிணங்களை எரிக்க தொடங்கி உள்ளனர்.. கொஞ்சம் பரந்து விரிந்து விசாலமான இடம் கிடைத்தால், அப்படியே பிணங்களை வரிசையாக அடுக்கிவைத்து எரித்து விடும் சூழல் பெருகி வருகிறது.. இப்படித்தான் ஒரு வீடியோ சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.. இது எந்த ஊர் என்று தெரியவில்லை.. ஆனால் நம்ம ஊர் இல்லை.. அந்த வீடியோவில் ஹிந்தியில் பேசிக் கொள்ளும் சத்தம் கேட்கிறது.

பாலம்
ஒரு பாலத்தின் மீதிருந்து பட்டப்பகலில் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.. கீழே அந்த ஆற்றுப்பகுதியில் தண்ணீர் எதுவும் இல்லாமல் வறண்டு கிடக்கிறது.. ஆற்று மணலில் பிணங்கள் வரிசையாக அடுக்க வைக்கப்பட்டு, அவை ஜிகுஜிகுவென எரிந்து கொண்டிருக்கின்றன.. இதுபோல அந்த மணற்பரப்பில் நான்கைந்து இடங்களில் பிணக்குவியல்கள் எரிந்து கொண்டிருக்கின்றன..

சடலங்கள்
இந்த சடலங்களுக்கு மேலே எதுவுமே போர்த்தப்படவில்லை.. வெற்று உடம்புகள் வரிசையாக கிடத்தப்பட்டுள்ளன.. ஓரிருவர் மட்டும் கவச உடை அணிந்து, இந்த குவியலுக்கும் அந்த குவியலுக்கும் ஓடி ஓடி தீ வைத்து கொண்டிருக்கிறார்... அந்த பகுதியே கரும்புகை சூழ்ந்து வருகிறது.. இறந்தவர்கள் எல்லாம் யாரோ? எவரோ? எப்படியெல்லாம் வாழ்ந்தார்களோ? தெரியவில்லை.. இறுதிசடங்கு மட்டும் இவ்வளவு கொடூரமாக இருக்கிறது..

நாடி
அமெரிக்கா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் இப்படி சுடுகாடு கிடைக்காமல், சடலங்கள் நிறைந்து வழிவதாக சென்ற வருடம் செய்திகள் வந்த நிலையில், இப்போது நமக்கே இப்படி ஒரு துர்நிலைமை வந்துள்ளது.. சடலங்கள் எரியூட்டப்பட்ட ஆரஞ்சு நிற நெருப்புகளிலும், கரும்புகையிலும், கதறல் கண்ணீர்களிலும், தடுப்பூசி தட்டுப்பாடும், ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் சேர்ந்து, இந்த தேசத்தின் நாடியை அசைத்து பார்க்க வைத்து வருகிறது..!












Click it and Unblock the Notifications