இன்றிலிருந்து அடுத்த 6 நாட்கள்.. கொரோனா கேஸ்கள் வேகம் எடுக்கும்.. சென்னைக்கு காத்திருக்கும் சிக்கல்!
சென்னை: சென்னையில் இன்றில் இருந்து அடுத்த 6 நாட்களுக்கு கொரோனா கேஸ்கள் வேகமாக அதிகரிக்கும் என்று சென்னை மாநகராட்சியின் கொரோனா தடுப்பு சிறப்பு முதன்மை அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று மட்டும் 669 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 7,204 ஆக உயர்ந்துள்ளது. பலி எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் நேற்று ஒரே நாளில் 509 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 3,330 லிருந்து 3,839 ஆக அதிகரித்துள்ளது.
திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்து 7 கொரோனா நோயாளிகள் டிஸ்சார்ஜ்
பேட்டி அளித்தார்
இந்த நிலையில் சென்னை மாநகராட்சியின் கொரோனா தடுப்பு சிறப்பு முதன்மை அதிகாரி டாக்டர் ராதாகிருஷ்ணன் இது குறித்த பேட்டி அளித்து எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் அளித்த பேட்டியில், கண்ணுக்கு தெரியாத கிருமிக்கு எதிராக நாம் போர் நடத்தி வருகிறோம். இதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். மக்கள் அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். மக்கள் சிப்பாய்கள் போல முன்னின்று அரசுக்கு ஒத்துழைக்க வேண்டும். மக்கள் தங்கள் தனிமைப்படுத்திக் கொள்வது மட்டுமே இதற்கு ஒரே தீர்வு. இந்த கொரோனா தொடுதல் மூலம் பரவுகிறது.
பரவல் முறை
தொண்டை மற்றும் மூச்சு காற்று மூலம் கொரோனா பரவுகிறது. அதனால் நாம் நம்மை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் சென்னையில் மக்கள் இதில் பெரிதாக கவனம் செலுத்துவது இல்லை. மக்கள் தங்களை தனிமைப்படுத்தி சமூக விலகலை கடைபிடிக்கவில்லை . சென்னையில் எனக்கு தெரிந்து 30% பேர் மாஸ்க் அணிவதில்லை. இது கொரோனா பரவ மிக முக்கிய காரணம்.
மொத்தமாக கட்டுப்படும்
சென்னையில் கொரோனா விரைவில் கட்டுப்படுத்தப்படும். கோயம்பேடு மார்க்கெட் மூலம்தான் பலருக்கு கொரோனா பரவி உள்ளது. அதை தற்போது கட்டுக்குள் கொண்டு வந்து இருக்கிறோம். கொஞ்சம் கொஞ்சமாக இந்த பாதிப்பு முழுமையாக குறையும். சென்னையில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் கட்டுக்குள் கொண்டு வரப்படும்.
அதிகரிக்கும் கேஸ்கள்
சென்னையில் அதிக அளவில் கொரோனா சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது. இதனால் இனி நிறைய கேஸ்கள் வரும். பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது. அதனால் இனி கேஸ்கள் அதிகம் வரும். வரிசையாக 6 நாட்களுக்கு தமிழகத்தில் 6 நாட்களுக்கு கேஸ்கள் அதிகமாக வரும். இன்றில் இருந்து இந்த கணக்கு தொடங்கும். அதன்பின் கொரோனா கேஸ்களில் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சமாக குறையும்.
வடசென்னை நிலை எப்படி
சென்னையில் வடசென்னை பகுதியில் பலருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்குதான் அதிக பேருக்கு பாதிப்பு வந்துள்ளது . ஆனால் நமக்கு இறப்பு எண்ணிக்கை மற்றும் சதவிகிதம் மிகவும் குறைவாக உள்ளது. சென்னையில் இறப்பு விகிதம் 0.68 என குறைந்துள்ளது. இது போக போக குறையும். விரைவில் அனைத்தும் இயல்பு நிலைக்கு திரும்பும் என்று ராதாகிருஷ்னன் தெரிவித்துள்ளார்.