7 முக்கிய விஷயங்களை கடைபிடித்த தமிழக சுகாதார துறை.. கொரோனவை எதிர்கொண்டது இப்படித்தான்!
தமிழகத்தில் கொரோனா வைரஸை வெற்றிகரமாக கட்டுப்படுத்த பின்வரும் 7 முக்கிய விஷயங்களை தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக கடைபிடித்தது.
சென்னை: தமிழகத்தில் கொரோனா வைரஸை வெற்றிகரமாக கட்டுப்படுத்த பின்வரும் 7 முக்கிய விஷயங்களை தமிழக சுகாதாரத்துறை தீவிரமாக கடைபிடித்தது.
Recommended Video
தமிழகத்தில் இருந்து கொரோனா வைரஸ் அறிகுறியுடன் சோதனைக்கு அனுப்பப்பட்ட அனைத்து ரத்த மாதிரியிலும் கொரோனா தாக்குதல் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு தமிழகம் எப்போதும் போல கொரோனா இல்லாமல் இருப்பதற்கான போதிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது, என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார் .
சென்னையில் கொரோனா வைரஸால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் நேற்று இரவு மொத்தமாக குணப்படுத்தப்பட்டார். இவருக்கு ஓமன் நாட்டிற்கு சென்று திரும்பிய பின் கொரோனா ஏற்பட்டுள்ளது.இந்த அந்நிலையில் தமிழகத்தில் கொரோனவை விரட்டி அடிக்க பின்வரும் 7 விஷயங்கள் பெரிய அளவில் உதவி உள்ளது.
தீவிர சோதனை
அதன்படி முதல் காரணமாக, விமான நிலையங்களில் செய்யப்பட்ட சோதனைதான் முக்கியம். சென்னை விமான நிலையத்தில் கொரோனா அறிகுறியோடு இருந்தவர்கள் எல்லோரும் சோதனை செய்யப்பட்டனர். அப்படித்தான் அமெரிக்காவில் இருந்து வந்த சிறுவன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான். விமான நிலையத்தில் நோய் அறிகுறியோடு யார் வந்தாலும் அவர்கள் உடனே மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். உடனே அவர்களின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு சோதனைக்கு அனுப்பப்பட்டது.
சந்தேகம் வந்தால்
யாரெல்லாம் சந்தேகத்தோடு மருத்துவமனையில் இப்படி சேர்க்கப்படுகிறார்களோ அவர்களுடைய உறவினர்கள் எல்லோரும் கண்காணிக்கப்பட்டார்கள். அதேபோல் அந்த நபர்கள் பழகிய நபர்கள் எல்லோரும் கண்காணிக்கப்பட்டனர். ஒருவரை விடாமல் எல்லோரையும் தமிழக சுகாதாரத்துறை சோதனை செய்தது. கொரோனா பாதித்தவர்களை சோதிக்க, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மையமாக மாற்றப்பட்டது பயன்படுத்தப்பட்டது.
ரத்த மாதிரி வேகமான சோதனை
இந்த ரத்த மாதிரிகளை புனேவில்தான் சோதனை செய்ய முடியும். ஆனாலும் கூட உடனே உடனே மாதிரிகளை சோதனை செய்து முடிவுகளை தெரிந்து கொண்டனர். உடனே ரத்த மாதிரியை சோதனை செய்து, நோயாளிகள் உண்மையில் கொரோனா மூலம் பாதிக்கப்பட்டு இருக்கிறார்களா என்று உறுதி செய்து முடிவுகளை அறிவித்தார்கள். இப்படிபட்ட துரிதமான சோதனை மற்றும் முடிவு நோயை கட்டுப்படுத்த அதிக பலன் அளித்தது.
நோயாளி கண்காணிப்பு
அதே சமயம் இன்னொரு பக்கம் காஞ்சிபுரத்தை சேர்ந்த கொரோனா வந்த இளைஞர், தனி அறையில் தீவிரமாக சிகிச்சை பெற்றார். இவருக்கு என்று தனியாக இரண்டு மருத்துவர்கள் நியமிக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டார். மருத்துவர்களும் மிக பாதுகாப்பான கவச உடைகளை அணிந்து சிகிச்சை அளித்தனர். இதனால் அந்த ஒரு நபரை தவிர வேறு யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா உறவினர்களும் சோதனை
இது போக காண்டாக்ட் டிரெஸ் முறை மூலம், அந்த இளைஞர் தொடர்பு கொண்ட எல்லா நபர்களும் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்கள் எல்லோரும் சோதனை செய்யப்பட்டனர். அதேபோல் அந்த இளைஞரின் உறவினர்களும் மிக தீவிரமாக சோதனைக்கு உள்ளாக்கப்பட்டனர். இவர்கள் எல்லோருக்கு, கொரோனா இல்லை என்று உறுதி செய்யப்பட்ட பின்புதான் அவர்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதில் தமிழக சுகாதார துறை மிகவும் கறாராக இருந்தது.
வதந்தி & விழிப்புணர்வு
அதேபோல் தமிழக அரசு கொரோனா தொடர்பான வதந்திகளை மிக தீவிரமாக கட்டுப்படுத்தியது. கேரளாவில் சில மருத்துவர்களே இது தொடர்பான வதந்திகளை பரப்பினார்கள். ஆனால் தமிழக அரசு அப்படி வதந்தி எதுவும் பரவாமல் தடுத்தது. முக்கியமாக சமூக வலைத்தளங்களில் இது தொடர்பாக தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
உடனே உடனே தெரிவித்தார்
முக்கியமாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரடியாக இந்த பணிகளை கவனித்தார். நேரடியாக அவர் 24 மணி நேரமும், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்களுடன் தொடர்பில் இருந்தார். இது நோயை கட்டுப்படுத்த மிக முக்கிய காரணமாக இருந்தது. கொரோனா குறித்த செய்திகளை அவர் உடனுக்குடன் டிவிட்டரில் பகிர்ந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.