கொரோனா அச்சம்.. டாஸ்மாக்கை மூடக்கோரி மனு.. தமிழக அரசுக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்
கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரிய மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை: கொரோனா பரவாமல் தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரிய மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அடிக்கடி கைகளைக் கழுவ வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். இந்நிலையில் மக்கள், தங்கள் கைகளை கழுவுவதற்கு தேவையான தண்ணீரை வினியோகிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.
சென்னை நகரில் வசிக்கும் ஒரு கோடிக்கும் அதிகமான மக்களுக்கு தினமும் 1,350 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. ஆனால் சென்னை பெருநகர குடிநீர் வாரியம் 650 மில்லியன் லிட்டர் மட்டுமே சப்ளை செய்து வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு நீங்கும் வரை தினமும் 3 மணி நேரம் தண்ணீர் வினியோகம் செய்ய குடிநீர் வாரியம் தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியுள்ளார்.
மேலும், பள்ளி மாணவ- மாணவிகளுக்கு போதுமான தண்ணீர் வழங்கப்படுவதில்லை எனவும் கைகளை சுத்தப்படுத்த தேவையான ஹேண்ட் வாஷ் போன்ற திரவங்கள் வழங்கப்படவில்லை எனவும் மனுவில் குற்றம் சாட்டியுள்ளார்.
பள்ளி - கல்லூரி மாணவர்களுக்கு தேவையான தண்ணீரை விநியோகிக்க செய்வதுடன், கைகளை சுத்தப்படுத்த பயன்படுத்தும் திரவங்களையும் வழங்கவேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதேபோல, சென்னையில் நெருக்கமான தெருக்களில் டாஸ்மாக் கடைகள் உள்ளதாகவும், அந்த கடைகளில் சுகாதாரமற்ற முறையில் பார்கள் இயங்குவதால், கொரோனோ வைரஸ் பரவ 90 சதவீதம் வாய்ப்புள்ளதாகவும் கூறி, தமிழகம் முழுதும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட வேண்டும் எனக் கோரி கூடுதல் மனுவையும் தாக்கல் செய்தார்.
அதில், கொரோனா வைரஸ் பாதித்து பலியானவர்களுக்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது... இதை 10 லட்சம் ரூபாயாக அதிகரிக்க வேண்டும் எனக் கோரியுள்ளார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் சுந்தரேஷ் மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மனுவுக்கு ஒரு வாரத்தில் பதிலளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.