தமிழகத்தில் 24 மணி நேரத்தில் இரு மடங்கு கொரோனா நோயாளிகள் அதிகரிப்பு.. ஆனாலும், ஒரு ஹேப்பி நியூஸ்
சென்னை: 24 மணி நேரம்தான்.. அதற்குள்ளாக கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்ந்துள்ளது, தமிழகத்தில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை. நேற்று இரவு வரை, 124 என்ற அளவில் இருந்த, கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை, இன்று மாலை நிலவரப்படி 234ஆக உயர்ந்துள்ளது.
தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இதை உறுதி செய்துள்ளார். இதற்கு முக்கிய காரணம் இன்று ஒரே நாளில் 110 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளதாம். ஆனால், இவர்கள் அனைவருமே, டெல்லியில் நடைபெற்ற மத மாநாட்டுக்கு சென்று திரும்பியவர்கள்.
கேரளாவில் இன்று 24 பேருக்குதான் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்ட நிலையில், தமிழகத்தில் 110 பேருக்கு பாதிப்பு என்றால் அது அதிர்ச்சியாகத்தான் இருக்கும்.
அதேநேரம், இதில் பீதியடையவோ, அத்தியாவசிய தேவைக்காக, வீட்டை விட்டு வெளியே போக முடியாத அளவுக்கான ஸ்டேஜ் 3 என்ற நிலைக்கு சென்றுவிட்டதாகவோ அச்சப்பட தேவையில்லை.

முக்கிய தகவல்
ஏனெனில், பீலா ராஜேஷ் அளித்த ஒரு பேட்டியில், சொன்ன ஒரு தகவல், தமிழகத்திற்கு ரொம்பவே ஆசுவாசப்படுத்தக் கூடியது. அப்படி என்ன சொன்னார்? டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள், ஒவ்வொருவரும் தானாக முன்வந்து சோதனைக்கு உட்படுத்தி வருகிறார்கள். கிட்டத்தட்ட எல்லோரும் சோதனைக்கு உட்பட்டுள்ளனர். அப்படி சோதித்து பார்த்தபோதுதான், 110 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது என்று சொன்னார். ஆனால் அதைவிட முக்கியமான ஒரு தகவலையும் அவர் குறிப்பிட்டார்.

வேறு நபர்களுக்கு இல்லை
அதாவது, டெல்லி சென்று திரும்பிய 110 பேர் தவிர, தமிழகத்தில் இன்று புதிதாக வேறு ஒருவருக்கு கூட கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை என்று அவர் தெரிவித்தார். சமூக பரவல் என்ற மோசமான நிலைக்கு தமிழகம் செல்லவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம். டெல்லியில் பல நாட்டினரும் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால், அதில் பங்கேற்றவர்களுக்கு கொரோனா வந்துள்ளதே தவிர, சமூக பரவலால் வரவில்லை.

சீல் வைப்பு
மேலும், டெல்லி சென்று திரும்பியவர்கள் பலரிடமும் பழகியிருப்பார்கள். அவர்களின் மூலம் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கருதப்பட்ட நிலையில், டெல்லி சென்று திரும்பியவர்களை தவிர புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை பீலா ராஜேஷ் உறுதி செய்துள்ளார். இது கண்டிப்பாக சற்று ஆசுவாசப்படுத்தக் கூடிய தகவல்தான். டெல்லி சென்று திரும்பியவர்கள் யாரிடமெல்லாம் பழகினார்களோ அவர்களை கண்காணிக்கும் பணி நடக்கிறது. அவர்கள் புழங்கிய 8 கி.மீ சுற்றளவு சீல் வைக்கப்பட்டுள்ளது.

சோதனைகள் குறைவுதான்
இதுபோன்ற நடவடிக்கைகளால் பிறருக்கு நோய் பரவாமல் தடுக்கப்படும் என்ற நம்பிக்கையை பீலா ராஜேஷ் இன்றைய பேட்டியில் தெரிவித்தார். டெல்லி சென்று திரும்பியவர்கள் தவிர தமிழகத்தில் மற்ற மக்களுக்கு, அதிக அளவுக்கு இந்த நோய் பரவவில்லை என்பது நம்பிக்கைக்குரிய செய்தி என்றபோதிலும், அனைவரும் சோதனைக்கு உட்படுத்தப்படவில்லை, சொற்ப அளவே சோதனைகள் நடந்து வருகின்றன என்பதையும் மறுக்க முடியாது. ஆனால் கொரோனா பாதிப்பு அறிகுறி உள்ளவர்கள் யாராவது மருத்துவமனை சென்றால், அவர்களுக்கு தக்க பரிசோதனை செய்யப்படுவதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது.












Click it and Unblock the Notifications