ரயிலில் எத்தனை பேர் இருந்தனர்.. கொரோனா பற்றி கேள்வி கேட்ட செய்தியாளர்.. கோபப்பட்ட விஜயபாஸ்கர்.. பரபர
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே ஒருவருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்ட நிலையில் தற்போது புதிய நபருக்கு சென்னையில் கொரோனா வைரஸ் ஏற்பட்டுள்ளது.
உத்தர பிரதேசத்தை சேர்ந்த இவர் டெல்லியில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு வந்துள்ளார். இவருக்கு நேற்று மாலைதான் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
என்ன கேள்வி
இந்த நிலையில் இந்த வைரஸ் தாக்குதல் குறித்தும், அந்த பயணி உடன் ரயிலில் எத்தனை பேர் வந்தார்கள் என்பது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதேபோல் அவர் உடன் வந்த பயணிகள் சோதிக்கப்பட்டார்களா என்றும் கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதில் அளித்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருந்தோம். சோதனை முறைகளை தீவிரப்படுத்தி இருக்கிறோம்.
தீவிர சோதனை
எல்லா ரயில் நிலையங்களிலும் சோதனை செய்து வருகிறோம். ரயில்வே காவல் அதிகாரிகளுக்கு இதற்காக பயிற்சி அளித்து உள்ளோம். இதற்காக 7 குழுக்கள் அமைக்கப்பட்டு சோதனைகள் செய்யப்பட்டு வருகிறது.அதேபோல் மக்கள் நல்வாழ்வு துறை, சுகாதாரத்துறை சேர்ந்து பணிகளை தொடர்ந்து செய்து வருகிறது. வெளிநாட்டு பயணிகளை கவனித்து வந்தோம்.
என்ன கண்காணிப்பு
தற்போது பிற மாநில பயணிகளையும் கண்காணித்து வருகிறோம். முக்கியமாக மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகாவில் இருந்து வருபவர்களை கண்காணித்து வருகிறோம். இதற்காக பணியாளர்களுக்கு பயிற்சி அளித்துள்ளோம். 2000 பேரை தனிமைப்படுத்தி இருக்கிறோம். பயணங்களை மக்கள் தவிர்க்க வேண்டும். புதிய சென்னை நோயாளி தொடர்பு கொண்ட எல்லோரையும் சோதனை செய்து வருகிறோம்.
ரயில்
அவர் யாருடன் வந்தாரோ அவரை எல்லாம் சோதனை செய்து வருகிறோம். நான் அதை கண்டிப்பாக செய்வோம். அவர் ரயிலில் வந்தார். அந்த தகவல் மட்டும் தெரிந்தால் உங்களுக்கு போதும். மற்ற பணிகளை நாங்கள் செய்வோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம். ரயிலில் வந்தவர்களை கண்டிப்பாக கண்டுபிடிப்போம். நீங்கள் அதை பற்றி கவலையடைய வேண்டாம்.
செய்ய வேண்டாம்
நாங்கள் எங்கள் பணிகளை சரியாக செய்து வருகிறோம். சென்னையில் இருக்கும் நோயாளி தற்போது நன்றாக இருக்கிறார். அவர் உடலை சோதனை செய்து வருகிறோம். ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறோம். அவர் உடல் நிலை நன்றாக இருக்கிறது. நீங்கள் அவர் யாருடன் பயணம் செய்தார் என்று டிரேஸ் செய்ய முயல வேண்டாம், கோபமாக குறிப்பிட்டார்.