ஹெர்ட் இம்யூனிட்டி.. மந்தை மந்தையாக எதிர்ப்பு சக்தி பெறும் வித்தை.. கொரோனாவுக்கு இதுதான் தீர்வா?
சென்னை: கொரோனா பாதிப்பிற்கு எதிராக ஹெர்ட் இம்யூனிட்டி (Herd Immunity) உதவுமா என்ற விவாதம் இணையம் முழுக்க எழ தொடங்கி உள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனா மிக தீவிரமாக பரவ தொடங்கி உள்ளது. மூன்று முறை லாக்டவுன் அறிவிக்கப்பட்ட பின்பும் இந்தியாவில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் கொரோனாவிற்கு ஹெர்ட் இம்யூனிட்டிதான் (Herd Immunity) சரியான தீர்வாக இருக்கும், கொரோனாவை எதிர்கொள்ள இதுதான் ஒரே வழி என்றெல்லாம் பலர் விவாதம் செய்ய தொடங்கி இருக்கிறார்கள்.
ஹெர்ட் இம்யூனிட்டி குறித்து நிறைய பேர் சந்தேங்கள் மற்றும் கேள்விகளை எழுப்ப தொடங்கி உள்ளனர். உண்மையில் ஹெர்ட் இம்யூனிட்டி என்றால் என்ன? அதன் மூலம் கொரோனாவில் இருந்து நாம் தப்பிக்கலாமா என்று பார்க்கலாம்.

மனித எதிர்ப்பு சக்தி
மனித குலத்தின் தொடக்க காலத்தில் சிறு சிறு நோய்களுக்கு கூட மனிதர்கள் கொத்து கொத்தாக செத்து மடிந்தார்கள். சாதாரண புட் பாய்சனுக்கு கூட மனிதர்கள் செத்து மடியும் நிலை இருந்தது. ஆனால் போக போக மனிதர்கள் நோய் தாக்க தாக்க அதற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை பெற்றனர். மனித குலம் இப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக நோய்களை எதிர்த்து வளர்ந்தது. இப்போது மனிதர்கள் உயிர்ப்போடு இருக்க இந்த எதிர்ப்பு சக்திதான் காரணம்.

எதிர்ப்பு சக்தி வரும்
ஒரு கொள்ளை தொற்று நோய் ஒருவரை தாக்கிய பின் அந்த நோய் மீண்டும் அவரை தாக்காது. ஏனென்றால் ஒரு வைரஸ் நமது உடலை தாக்கினால் அதற்கு எதிராக எப்படி செயல்பட வேண்டும் என்பதை நமது எதிர்ப்பு சக்தி செல்கள் நினைவில் வைத்துக்கொள்ளும். இதனால் மீண்டும் அந்த வைரஸ் நம்மை தாக்கினால் அது செயல்படும் முன் நமது உடலில் இருக்கும் எதிர்ப்பு சக்தி அதை அழித்துவிடும். இதனால்தான் சார்ஸ் போன்ற நோய்கள் ஒருவருக்கு வந்தால் மீண்டும் அதே நபருக்கு வராது.

ஹெர்ட் இம்யூனிட்டி
இங்குதான் ஹெர்ட் இம்யூனிட்டி வருகிறது. இதை மிக எளிதாக விளக்கலாம். ஏ என்ற ஒரு இடத்தை எடுத்துக்கொள்வோம். அந்த இடத்தில் மொத்தம் 1000 பேர் வசிக்கிறார்கள். அங்கு வேகமாக ஒரு வைரஸ் பரவுகிறது. இப்போது அந்த வைரஸ் பரவலை தடுக்க வேண்டும் என்றால், அந்த வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தியை குறைந்தது 70% பேராவது பெற்று இருக்க வேண்டும். ஏனென்றால் ஒரு இனக்குழுவின் 70% பேருக்கு ஒரு வைரசுக்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருந்தால், அங்கு அந்த வைரஸ் மேலும் பரவுவது கடினம்.

பிற நபர்களுக்கு பரவாது
அங்கு வைரஸ் இருக்கும் நபர் ஏற்கனவே எதிர்ப்பு சக்தி உள்ள நபருக்கு வைரசை பரப்ப முடியாது. ஒரு இனக்குழுவில் பலருக்கு இப்படி நோய்க்கு எதிரான எதிர்ப்பு சக்தி கிடைத்துவிட்டால், ஏற்கனவே நோய் தாக்கிய நபர்கள் பிற நபர்களுக்கு அந்த நோயை பரப்ப முடியாது. இப்படி மக்கள் மந்தை மந்தையாக எதிர்ப்பு சக்தியை பெறுவதுதான் மந்தை எதிர்ப்பு சக்தி எனப்படும் - ஹெர்ட் இம்யூனிட்டி. இந்த ஹெர்ட் இம்யூனிட்டி ஒரு இனக்குழுவில் ஒரு நோய்க்கு எதிராக வந்துவிட்டால் அங்கு பெரும்பாலும் அந்த நோய் மேலும் பரவாது.

இரண்டு வகை உள்ளது
இந்த ஹெர்ட் இம்யூனிட்டியை பெற இரண்டு வகை உள்ளது. ஒன்று தடுப்பூசி. அதாவது ஒரு நோய்க்கு எதிரான தடுப்பூசியை 70% மக்களுக்கு மேல் செலுத்திவிட்டால் அந்த வைரஸ் மீதம் இருக்கும் யாரையும் பாதிக்காது. இன்னொரு முறை தடுப்பூசி இல்லாத பட்சத்தில் தானாக மக்களுக்கு ஹெர்ட் இம்யூனிட்டியை ஏற்படுத்துவது. அதாவது இயற்கையாக கொத்தாக மக்கள் நோயால் பாதிக்கப்பட்டு, 70% பேர் அந்த வைரசுக்கு எதிராக தானாக தடுப்பூசி இல்லாமலே எதிர்ப்பு சக்தியை பெற்றுக்கொண்டால் அது இன்னொரு வகையான இயற்கையான ஹெர்ட் இம்யூனிட்டி.

கொரோனாவை தடுக்க வழி
இப்போது கொரோனாவிற்கு எதிராக தடுப்பூசி இல்லை. இதனால் மக்களுக்கு கொத்து கொத்தாக கொரோனா ஏற்பட்டு அதன்மூலம் மக்கள் கூட்டத்திற்கு கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை ஏற்படுத்த வேண்டும். தடுப்பூசி இல்லாத காரணத்தால் மக்கள் தானாக நோயை பெற்றுக்கொண்டு , அதன் மூலம் அந்த கொரோனாவிற்கு எதிரான எதிர்ப்பு சக்தியை அவர்கள் அடையலாம். இதன் மூலம் மீதம் இருக்கும் மக்களுக்கு தானாக கொரோனா பரவும் சங்கிலி தொடர் நின்றுவிடும்.

எத்தனை பேருக்கு ஏற்பட வேண்டும்
சரி கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் எத்தனை பேருக்கு இந்த வைரஸ் தாக்க வேண்டும். எத்தனை பேர் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளானால் ஒரு இனக்குழுவிற்கு ஹெர்ட் இம்யூனிட்டி கிடைக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. சராசரியாக உலகில் கொரோனா வைரஸ் தாக்கிய ஒருவர் தன்னுடன் பழகும் மூன்று பேருக்கு அந்த வைரஸை பரப்புகிறார். இதனால் ஒரு குறிப்பிட்ட மக்கள் தொகையில் 70% பேர் வரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மீண்டும் வந்தால், நமக்கு இடையே தானாக ஹெர்ட் இம்யூனிட்டி உருவாகிவிடும்.

சில சமயம் அதிகரிக்கும்
இங்குதான் சிக்கல் ஆரம்பிக்கிறது. இந்தியாவில் தற்போது கொரோனாவிற்கு எதிராக ஹெர்ட் இம்யூனிட்டி வர வேண்டும் என்றால் 120 கோடி பேரில் 70% பேர் அதாவது மொத்தம் 84 கோடி பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்டும் வர வேண்டும். அப்படி நடந்துவிட்டால், புதிதாக ஒருவருக்கு கொரோனா வந்தால் அவரால் வேறு ஒரு நபருக்கு கொரோனாவை பரப்ப முடியாது. ஏனென்றால் அவரின் அருகில் இருக்கும் நபர்களுக்கு ஏற்கனவே கொரோனா ஏற்பட்டு, அவர்களிடம் அதற்கான எதிர்ப்பு சக்தி உண்டாகிவிடும். இதனால் கொரோனா உள்ள ஒருவர் அதை பரப்ப முடியாமல் தோல்வி அடைவார்.. நோய் பரவும் சங்கிலி தடைபடும்.

மரணம் ஆக வாய்ப்புள்ளது
ஆனால் இங்குதான் இன்னொரு சிக்கல் வருகிறது. தற்போது ஹெர்ட் இம்யூனிட்டி பரப்புவதற்காக மக்களை வெளியே விடுகிறோம் என்று வைத்தகொள்வோம். 85 கோடி பேருக்கு கொரோனா ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அத்தனை பேருக்கு இந்தியாவில் ஒரே நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாது. அத்தனை பெட்கள் இல்லை. அதேபோல் உண்மையில் கொரோனாவிற்கு என்ன மருந்து கொடுத்தால் குணமாகும் என்பது தெரியாததால் 70% பேருக்கு கொரோனா ஏற்படட்டும் என்று விட்டுவிடுவது மிகவும் தவறாக முடியும்.

பலி சதவிகிதம்
அதே போல இந்தியாவில் கொரோனா பலி விகிதம் 1% என்று வைத்துக்கொள்வோம். கொரோனா பாதிக்கப்படும் மொத்த நபர்களில் 1% பேர் பலியாவார்கள். அதாவது மொத்தம் 84 லட்சம் பேர் பலியாவார்கள். இதனால் ஹெர்ட் இம்யூனிட்டியை ஏற்படுத்த வேண்டும் என்று மொத்தமாக மக்களை வெளியே விடுவது பெரிய ஆபத்தில் முடியும். கொரோனாவிற்கு எதிராக முழுமையான சிகிச்சை முறை இல்லாத வரை இப்படி ஹெர்ட் இம்யூனிட்டி ரிஸ்க் எடுப்பது பெரிய பிரச்சனையாகும்.

மீண்டும் வரும்
ஒருவருக்கு கொரோனா வந்தால் எத்தனை நாட்களுக்கு அவருக்கு அதற்கு எதிரான எதிர்ப்பு சக்தி இருக்கும் என்று கண்டுபிடிக்கப்படவில்லை. அதேபோல் ஒருவருக்கு கொரோனா வந்தால் மீண்டும் அவருக்கு கொரோனா வருமா, இல்லை அவர் எதிர்ப்பு சக்தி பெற்று ஆயுள் முழுக்க கொரோனா இல்லாமல் இருப்பாரா என்றும் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்படி முழுமையாக தெரியாத பட்சத்தில் கொரோனாவிற்கு எதிராக ரிஸ்க் எடுக்க கூடாது.

திட்டம் என்ன
சுவீடன் போன்ற சில நாடுகளில் ஏற்கனவே ஹெர்ட் இம்யூனிட்டியை முயற்சி செய்ய தொடங்கி உள்ளனர். முதியவர்களை தனிமைப்படுத்திவிட்டு, இளைஞர்களை வெளியே அனுப்பி அவர்களுக்கு ஹெர்ட் இம்யூனிட்டி ஏற்படட்டும் என்று விட்டு வைக்கிறார்கள். ஆனால் இளைஞர்கள் கொரோனா காரணமாக சாக மாட்டார்கள். அவர்கள் பிழைத்து வந்துவிடுவார்கள் என்பதற்கு முழுமையான ஆதாரம் எதுவும் இல்லை.

கொரோனா மொத்தமாக மாறுகிறது
மேலும் இந்த கொரோனா வைரஸ் தனது பரவும் வேகம் தொடங்கி பண்புகள் வரை மாற்றிக்கொண்டே இருக்கிறது. எப்போது இந்த வைரஸின் அடிப்படை பண்பு மாறும் என்று தெரியாது. இந்த கொரோனா வைரஸ் குறித்து நாம் இன்னும் முழுமையாக தெரிந்துகொள்ளவில்லை. இப்படி இருக்கும் போது ஹெர்ட் இம்யூனிட்டியை உருவாக்குகிறோம் என்று முடிவு எடுத்தால் அது பெரிய சிக்கலாக முடியும்.












Click it and Unblock the Notifications