கொரோனா பாதிப்பு அதிகரிப்பு.. மீண்டும் ஊரடங்கு வருமா? அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்னது இதுதான்!
சென்னை: கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் அரசு மருத்துவமனைகளில் இருப்பு இல்லை. தமிழகத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் 90 % உள்ளதால் இங்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை. அதே சமயம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் உள்ளன என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் உள்பட நாடு முழுவதும் தற்போது கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனால் மக்கள் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று சுகாதார நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
தமிழகத்திலும் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு மெல்ல மெல்ல அதிகரித்து வரும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் மீண்டும் கொண்டு வரப்படுமா? என்பது குறித்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.

மருத்துவமனைகளில் முக கவசம் கட்டாயம்
கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் ஆய்வு மெற்கொண்ட பிறகு அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- கொரோனா அதிகரிப்பால் நேற்று முதல் அரசு மருத்துவமனைகளில் முகக்கவசம் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் கொரொனா வழிகாட்டுதல்கள் முறையாக பின்பற்றப்படுகிறதா? என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மருத்துவமனைகளில் தடுப்பூசி இல்லை
கொரோனா தடுப்பூசி உற்பத்தியை மத்திய அரசு நிறுத்தி விட்டது. கையிருப்பில் இருந்த தடுப்பூசிகளையும் மாநில அரசுகளுக்கு அனுப்புவதையும் நிறுத்தி உள்ளது. இதனால், கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் அரசு மருத்துவமனைகளில் இருப்பு இல்லை. எனவே தேவைப்படும் மக்கள் தனியார் மருத்துவமனையில் இருப்பு இருந்தால் அங்கு போட்டுக்கொள்ளலாம். தமிழகத்தில் மக்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் 90 % உள்ளதால் இங்கு பெரிய அளவில் பாதிப்பு எதுவும் இல்லை.

ஊரடங்கு போடப்படுமா?
அதே சமயம் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதுமான படுக்கை வசதிகள் உள்ளன. கொரானோ பாதிப்பு அதிகரித்தாலும் ஊரடங்குக்கான தேவை என்பது வராது" என்றார். முன்னதாக, ஊட்டி உதயமாகி 200 ஆண்டுகள் நிறைவு பெறுவதையொட்டி அங்கு நடைபெற்ற 30 கி.மீ.மாரத்தானில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்று ஓடினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மா சுப்பிரமணியன் கூறியதாவது:-

எக்ஸ்.பி.பி., 'பி.ஏ.2' வைரஸ்
கொரோனா தொற்று கடந்த 2019 - ஆம் ஆண்டு முதல் உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்தியது. கடந்த 6, 7 மாதங்களாக தொற்று பாதிப்பு பெரிதும் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் மீண்டும் ஒமைக்ரான் உருமாறிய தொற்று அதிகரித்துள்ளது. 'எக்ஸ்.பி.பி, 'பி.ஏ.2' போன்ற தொற்றுகள் உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் பரவி உள்ளது. எக்ஸ்.பி.பி.', 'பி.ஏ.2' வைரஸ் சிறிய பாதிப்பு ஏற்படுத்துவதால், பொதுமக்கள் பதற்றமும் அடைய தேவையில்லை. தொற்று பாதிக்கப்பட்டவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்வதோடு, மருத்துவர்கள் ஆலோசனைப்படி மருந்து மாத்திரைகளை உட்கொள்ளவேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications