ஸ்கைவாக், பீனிக்ஸ் உள்பட 10 மால்கள், 38 மார்கெட்டுகளில் தடுப்பூசி மையங்கள்.. அசத்தும் சென்னை!
சென்னை: சென்னையில் உள்ள 10 மால்கள் மற்றும் 38 பழம் மற்றும் காய்கறி மார்கெட்டுகளில் கொரோனா தடுப்பூசி மையங்கள் செயல்படுவதால் மாநகர மக்கள் எளிதாக தடுப்பூசி போட்டுக் கொள்ள ஏதுவாக இருக்கிறது.
கொரோனாவை முற்றிலும் அகற்ற அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என மத்திய, மாநில அரசுகள் வலியுறுத்தி வருகின்றன. கொரோனா வருவதையும் அதனால் ஏற்படும் உயிரிழப்பையும் தடுக்க கொரோனா தடுப்பூசி ஒன்றுதான் தீர்வு என சொல்லப்படுகிறது.
மக்கள்தொகைக்கேற்ப தடுப்பூசிகளை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தடுப்பூசிகள் இல்லை என மாவட்ட நிர்வாகத்தால் போர்டு எழுதி வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி போட்டலும் விடாமல் துரத்தும் டெல்டா கொரோனா.. தப்பிப்பது எப்படி.? ஆய்வாளர்கள் புது விளக்கம்
38 மார்க்கெட்
ஆனால் சென்னையில் உள்ள ஷாப்பிங் மால்கள் மற்றும் 38 மார்க்கெட்டுகளில் கொரோனா தடுப்பூசி மையங்களை சென்னை மாநகராட்சி அமைத்துள்ளது. இதனால் சென்னை மக்கள் எளிதில் கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொள்கிறார்கள்.
ஸ்கைவாக்
பீனிக்ஸ் மால், ஆம்பா ஸ்கைவாக் உள்பட 10 மால்களில் இந்த தடுப்பூசி மையம் செயல்படுகிறது. இது போன்று சென்னையில் ஆங்காங்கே செயல்படும் தடுப்பூசி மையங்களால் மக்கள் எளிதாக தடுப்பூசி போட்டுக் கொள்கிறார்கள்.
தடுப்பூசி மையங்கள்
மருத்துவமனைகள் உள்ளிட்ட இடங்களில் தடுப்பூசி மையங்கள் செயல்படும் நிலையில் அங்கு நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. அப்படி காத்திருந்தாலும் ஊசி கிடைக்காத நிலையே இருப்பதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.
மால்களில் தடுப்பூசி மையங்கள்
இந்த நிலையில் பீனிக்ஸ் மால், ஸ்கைவாக் உள்ளிட்ட மால்களில் தடுப்பூசி மையங்கள் செயல்படுவதால் இங்கு வந்த 15 நிமிடங்களில் தடுப்பூசி போட்டுக் கொள்வதாக மக்கள் தெரிவிக்கிறார்கள். இது போல் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் தடுப்பூசி மையங்கள் வைக்கப்படுவதால் மால்களுக்கும் மார்க்கெட்டுக்கும் வரும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதை உணர்கிறார்கள்.
மீண்டும்
இதன் மூலம் நம்பிக்கை பிறக்கிறது. தங்கள் குடும்பத்தினருடன் இந்த இடங்களுக்கு மீண்டும் வருகிறார்கள். இதனால் கொரோனாவால் மூடிக் கிடந்த கடைகளில் தற்போது வியாபாரம் சூடு பிடிக்கிறது என்கிறார்கள் மால்களின் நிர்வாக அதிகாரிகள்.
18 வயதுக்கு மேற்பட்டோர்
சென்னையில் 18 வயதுக்கு மேற்பட்டோர் 59 லட்சம் பேர் உள்ளனர். அவர்களில் 35.9 லட்சம் பேர் இதுவரை கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொண்டனர். அவர்களில் 26.7 லட்சம் (44.9%) பேர் முதல் டோஸை பெற்றனர். 9.2 லட்சம் பேர் இரு டோஸ்களையும் (15.5%) பெற்றுள்ளனர்.
தடுப்பூசி
தேவை அதிகரிப்பதால் தடுப்பூசிகளுக்கு தட்டுபாடுகள் ஏற்பட்டுள்ளன. இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி ஒரு இணையத்தை தொடங்கியுள்ளது. அதில் முன்கூட்டியே பதிவு செய்யும் 50 சதவீதம் பேருக்கு டோஸ்களை வழங்குகிறது.
50 சதவீதம் பேர் வாக்சின்
மீதமுள்ள 50 சதவீதம் பேர் கொரோனா தடுப்பூசி மையங்களில் நேரடியாக சென்று ஊசி போட்டுக் கொள்ளலாம். தமிழகத்தில் 6 கோடி மக்களில் இதுவரை 2 கோடி பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். அவர்களில் 1.64 கோடி பேர் முதல் டோஸையும் 36 லட்சம் பேர் இரு டோஸ்களையும் போட்டுக் கொண்டுள்ளனர்.