5 மாவட்டங்களில் அதிகரிக்கும் கொரோனா- தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட சி.பி.எம். வேண்டுகோள்
சென்னை: தமிழகத்தில் 5 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிப்பதால் தமிழக அரசு எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சி.பி.எம்) வேண்டுகோள் விடுத்துள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு இன்று வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் புதிய ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள சூழலில் 2வது கட்ட கொரோனா மிகுந்த உச்சத்தை தொட்டு, மரணங்கள் கூடுதலான நேரத்தில் - கூடுதல் கவனத்தோடு மருத்துவர்கள், முன்களப் பணியாளர்கள் என அனைவரும் ஒன்றுபட்டு செயல்பட்டதன் விளைவாக 2வது அலை தொற்று பின்னுக்கு தள்ளப்பட்டும் ஊரடங்கில் தளர்வுகளை அரசு அறிவித்து.
சகஜ வாழ்க்கைக்கு திரும்பும் இச்சூழலில், குறிப்பாக தமிழகத்தின் 5 மாவட்டங்கள் தஞ்சை, திருநெல்வேலி, மதுரை, கள்ளக்குறிச்சி மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக ஊடகத்தின் மூலம் வரும் செய்திகள் கவலையளிக்கிறது.
ஆகவே, தமிழக அரசு மேற்கூறிய மாவட்டங்களில் கூடுதலான கவனம் செலுத்தி தொற்று பரவலுக்கான மூலக்காரணத்தை கண்டறிந்து, துவக்கத்திலேயே கட்டுக்குள் கொண்டு வர நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
மேலும் இம்மாவட்டங்களில் போதுமான மருத்துவர்கள், முன் களப்பணியாளர்கள் மற்றும் துறை சார்ந்து ஒருங்கிணைப்பு உருவாக்கி, தேவையான நிதி ஒதுக்கீடும் செய்து தொற்று பரவாமலிருக்க உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
இவ்வாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications