பூரா வன்மம்.. முதல்வரின் அரசுமுறை பயணத்தை சிறுமைப்படுத்துகிறார் ஆளுநர்.. பொங்கி எழுந்த முத்தரசன்!
சென்னை: ஆளுநர் ரவி கூறிய கருத்து முதல்வர் ஸ்டாலினின் அரசு முறை பயணத்தை சிறுமைப்படுத்தும் வன்மம் கொண்டது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் காட்டமாக விமர்சித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாட்டில் இளைஞர்களுக்கு படித்த படிப்பிற்கு ஏற்ற வேலை கிடைக்கவில்லை. குறிப்பாக வேலைவாய்ப்பு திறன் கொண்ட பொறியியல் பட்டதாரிகள் கிடைப்பதில்லை என்று தொழில்துறையினர் கூறுகின்றனர் என்று தெரிவித்திருந்தார்.

மேலும், முதலீட்டாளர்களை சந்தித்து பேசுவதால் மட்டுமே முதலீடுகள் வந்துவிடாது, உலகலாவிய தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கு பொருத்தமான சூழலை உருவாக்க வேண்டும், அதற்கு திறமையான திறன்மிக்க மனித வளத்தை உருவாக்குவதே சிறந்த வழி என்றும் பேசினார் ஆளுநர் ரவி.
இந்த நிலையில், ஆளுநர் ஆர்.என்.ரவியின் இந்த கருத்துக்கு திமுக அமைச்சர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலினும், ஆளுநரின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். இந்நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் ஆளுநரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி உதகமண்டலம் ஆளுநர் மாளிகையில் ஜூன் 5 அன்று பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றுள்ளது. இம்மாநாட்டை தொடக்கி வைத்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அரசின் புதிய தேசியக் கல்விக் கொள்கையை கருத்தில் கொண்டு, மாறிவரும் சூழலுக்கு தக்கபடி பாடத்திட்டங்கள் அமைய வேண்டும் என்று பேசியிருக்கிறார்.
தமிழக அரசு மாநிலத்துக்கான தனித்துவம் வாய்ந்த கல்விக் கொள்கை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கும்போது அதற்கு இடையூறு செய்து, குழப்பம் ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபடுவது ஏற்கதக்கதல்ல. அத்துடன், "நாம் வேண்டுகோள் விடுப்பதாலோ அல்லது அவர்களது நாடுகளுக்கு சென்று பேசுவதாலோ மட்டும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய முன்வரமாட்டார்கள்" என்று பேசியுள்ளார்.
அண்மையில் தமிழக முதல்வர் சிங்கப்பூர், ஜப்பான் போன்ற நாடுகளில் சுற்றுப்பயணம் செய்து, தமிழ்நாட்டில் நடத்தப்படும் சர்வதேச முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு நேரில் அழைத்ததுடன், அங்கு ரூபாய் 3 ஆயிரத்து 233 கோடி முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்து திரும்பியுள்ள நிலையில் ஆளுநர் கூறிய கருத்து முதல்வரின் அரசு முறை பயணத்தை சிறுமைப்படுத்தும் வன்மம் கொண்டதாகும்.
மாநில அரசின் அரசு கட்டமைப்பை வழிநடத்தும் அதிகாரம் மக்களால் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகளிடம்தான் இருக்கிறது. ஆளுநர்களிடம் இல்லை என உச்ச நீதிமன்றம் தெளிவாக வரையறுத்து உத்தரவிட்ட பிறகும் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கை அதிகார அத்துமீறலாக தொடர்வதை இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications