உண்மை வேணுமா.. ஹெட்லைன் வேணுமா? ஆன்லைன் ரம்மி குறித்த கேள்வியால் டென்ஷன் ஆன கிரிக்கெட் வீரர் அஸ்வின்
சென்னை : நகர்ப்புறங்களில் விளையாட இடம் கிடைப்பது கடினமாக உள்ளது, மாணவர்களுக்கு விளையாட இடம் வேண்டி விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்திக்கும் வாய்ப்பு அமைந்தால் முறையிடுவேன் என கிரிக்கெட் வீரர் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கோடைகால சிறப்பு கிரிக்கெட் பயிற்சி முகாம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய அவர், "வெளிநாடுகளில் ஒரு குழந்தை கிரிக்கெட் விளையாட நினைத்தால் கிடைக்கும் வசதிகள் அனைத்தும் இந்தியாவில் கிடைக்கிறதா என்றால் அது இல்லை.

நகர்ப்புறத்திலிருந்து கிரிக்கெட் விளையாட வருபவர்கள் குறைந்து, கிராமப்புறத்திலிருந்து தற்போது அதிக அளவில் விளையாட வருகிறார்கள். விளையாடுவதற்கு தற்போது இடம் கிடைப்பது கடினமாக உள்ளது. தற்போது அகாடமிகள் மூலம் பணிகள் நடைபெற்று வருகின்றன. கிராமப்புறத்தில் இருந்து குழந்தைகளை வர அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கப்பட்டு வருகின்றன.
நாங்கள் முன்னெடுப்பது மட்டுமின்றி அரசாங்கமும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இளைஞர்களும் மாணவர்களும் கிரிக்கெட் விளையாடுவதற்குச் சென்னையில் போதிய மைதான வசதி இல்லை. இது குறித்து விளையாட்டுத்துறை அமைச்சரிடம் முறையிடுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் முறையிடுவேன்" எனத் தெரிவித்தார்.
ஆன்லைன் சூதாட்ட தடை பற்றிய கேள்விக்கு பதில் அளித்த அஸ்வின், "உங்களுக்கு உண்மை வேணுமா.. இல்ல ஹெட்லைன் வேணுமா? ஆன்லைன் ரம்மி தடை செய்யப்பட்டு இருந்தால் அதை விளையாடாதீர்கள். நான் அதை விளையாடவில்லை. கிரிக்கெட் ஆன்லைன் விளையாட்டுகளில் சூதாட்டம் இல்லை. அது "கேம் ஆஃப் ஸ்கில்ஸ்". அதனால் அதைச் சூதாட்டம் என்றால் இல்லை என்று தான் கூறுவேன்" எனத் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications