அண்ணாமலை சொல்லுவாருங்க.. "மேகதாது” டக்கென வந்து விழுந்த கேள்வி.. சுதாரித்து எஸ்கேப் ஆன சிடி ரவி!
சென்னை: பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவியிடம் கர்நாடகா மேகதாது விவகாரம் தொடர்பாக சென்னையில் செய்தியாளர்கள் கேள்வி எழுப்ப, அவர் அண்ணாமலையைக் கையைக் காட்டிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்.
கர்நாடக துணை முதலமைச்சரும், நீர்வளத்துறை அமைச்சருமான டி.கே.சிவக்குமார், காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது உறுதி என கூறியதுடன், மேகதாது அணை கட்டுவது தொடர்பான திட்டத்தை மத்திய நீர்வள அமைச்சரை சந்தித்து விளக்கியுள்ளார். மேலும், நதிநீர்ப் பங்கீடு பிரச்சினைக்கு புதிதாக ஒரு தீர்ப்பாயத்தை ஏற்படுத்தும் முயற்சியை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

காவிரி விவகாரத்தில் கர்நாடகா காங்கிரஸ் அரசின் செயல்பாடு, தமிழ்நாட்டை ஆளும் திமுக அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள், திமுகவின் கூட்டணி கட்சியான காங்கிரஸ் ஆளும் கர்நாடகாவிடம் இருந்து திமுக அரசு காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையை பெறவேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றன.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டி.கே.சிவகுமாரையும், காங்கிரஸ் கட்சியையும் கண்டிக்க மனம் இல்லை, இந்த சூழலில் பெங்களூருவில் நடக்கவுள்ள எதிர்கட்சிகள் கூட்டத்திற்கு எப்படி முதலமைச்சர் செல்வார்? தனது அரசியல் லாபத்திற்காக கர்நாடகாவுக்கு சென்று விட்டு தமிழ்நாட்டுக்கு திரும்பினால் முதலமைச்சருக்கு எதிராக "கோ பேக் ஸ்டாலின்" எனச் சொல்வோம் என எச்சரிக்கை விடுத்தார்.
அதேசமயம், திமுகவினர், அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். கர்நாடகத்தில் பாஜக ஆட்சியில் பசவராஜ் பொம்மை முதல்வராக இருந்தபோது தான் மேகதாது அணை தொடர்பான வரைவு திட்டம் ஒன்றை தயாரித்து மத்திய ஜல் சக்தி அமைச்சகத்துக்கு அனுப்பி ஒப்புதல் பெற்றனர். மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக அரசுகள் இருந்ததால், சட்டத்தை மீறி ஒப்புதல் பெற்றுவிட்டனர். அப்போது பாஜகவின் அண்ணாமலை எங்கே போனார் எனக் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில், கர்நாடகாவைச் சேர்ந்த பாஜக தமிழ்நாடு மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி, பாஜக மாவட்ட தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்பதற்காகச் சென்னை வந்துள்ளார். சென்னை பாஜக தலைமை அலுவலகத்தில் சி.டி.ரவியிடம், மேகதாது விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "கர்நாடகா மேகதாது விவகாரத்தில் தமிழ்நாடு பாஜகவின் நிலைப்பாடு குறித்து அண்ணாமலை தெரிவிப்பார். நான் இந்த மாவட்ட தலைவர்கள் கூட்டத்திற்காக வந்திருக்கிறேன்." என பதிலளித்தார்.
கர்நாடகாவைச் சேர்ந்த சி.டி.ரவி, மேகதாது விவகாரத்தில் கர்நாடகாவுக்கு ஆதரவாகவே பேசுவார். மேகதாது அணை கட்டுவதில் முந்தைய பாஜக அரசும் உறுதியாகவே இருந்தது. ஆனால், சென்னையில் இருந்து அந்த கருத்தை தெரிவிப்பது சிக்கல் ஆகும், அதன் காரணமாகவே, தமிழ்நாடு பாஜகவின் நிலைப்பாட்டை அண்ணாமலையிடம் கேளுங்கள் என்று கைகாட்டிவிட்டு பறந்துள்ளார் சிடி ரவி.












Click it and Unblock the Notifications