கடலூர் திமுக எம்.எல்.ஏ. அய்யப்பன் மீதான ஒழுங்கு நடவடிக்கை வாபஸ்! துரைமுருகன் அதிரடி அறிவிப்பு!
சென்னை: கடலூர் திமுக எம்.எல்.ஏ. அய்யப்பன் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்ப பெறுவதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
கடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலின் போது தலைமைக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதனிடையே அண்மையில் இவர் பாஜகவுக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் பரவிய நிலையில் திமுக தலைமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடலூர் எம்.எல்.ஏ.
கடலூர் மாநகராட்சி மேயர் மறைமுகத் தேர்தலில் தலைமை அறிவித்த வேட்பாளருக்கு எதிராக அய்யப்பன் செயல்பட்டதாக கூறி அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து பலமுறை திமுக தலைமையை அணுகி தனது தரப்பு நியாயத்தை எடுத்துக் கூறி வந்தார் அய்யப்பன் எம்.எல்.ஏ. இருப்பினும், அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை திரும்பப்பெறப் படாமலே இருந்தது.

உள்ளூர் அரசியல்
இந்நிலையில் அய்யப்பன் எம்.எல்.ஏ. கடும் அதிருப்தியில் இருப்பதாகவும் பாஜகவில் அவர் இணையவுள்ளதாகவும் சில நாட்களுக்கு முன்பு தகவல்கள் பரவின. உள்ளூர் அரசியலில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வத்துக்கும் அய்யப்பன் எம்.எல்.ஏ.வுக்கும் ஏழாம் பொருத்தமாக இருப்பதால் அவர் பாஜகவில் இணையும் முடிவை எடுத்துவிட்டார் எனவும் தகவல்கள் உலா வந்தன. ஆனால் அய்யப்பன் தரப்பு இதனை மறுத்து வந்தது.

நடவடிக்கை வாபஸ்
இந்நிலையில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ''கடலூர் கிழக்கு மாவட்டம், கடலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கோ.அய்யப்பன் அவர்கள் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து, மீண்டும் கழகப் பணியாற்ற அனுமதிக்குமாறு கழகத் தலைவர் அவர்களிடம் வைத்த கோரிக்கையினை ஏற்று, அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்யப்பட்டு, இன்று முதல் கழக உறுப்பினராகச் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளார்.''

கட்சி மாறி
அய்யப்பன் எம்.எல்.ஏ.வை பொறுத்தவரை கடந்த 2011-ஆம் சட்டமன்றத் தேர்தலில் திமுகவில் சீட் கிடைக்கவில்லை என்பதால் அதிமுகவில் ஜெயலலிதா முன்னிலையில் இணைந்தார். பின்னர் 2016 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் மீண்டும் திமுகவில் இணைந்தார். இதனால் கட்சி மாறுவது என்பது அய்யப்பனுக்கு ஒன்றும் புதிதல்ல என்பது கவனிக்கத்தக்கது.












Click it and Unblock the Notifications