Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மழைக்கு தயிர் நல்லது; நோய் எதிர்ப்புச்சக்தி தரும்! இனிப்பு, காரம் வேண்டாம்! எச்சரிக்கும் டாக்டர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகம் முழுவதும் மழைக்காலம் தொடங்கி இருக்கும் நிலையில், நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ளலாம் என்பது பற்றி டாக்டர் சுதா சேஷையன் விளக்கம் அளித்துள்ளார்.

சென்னைக்குப் புயல் வருமா? வெள்ளம் வருமா? எனப் பலரும் பயந்து போய் உள்ளனர். அதேபோல் இது மழைக்காலம் என்பதால் நிறைய பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனை நோக்கிப் படை எடுத்து வருகிறார்கள். டெங்கு, ப்ளூ காய்ச்சல் என 11 வகையான நோய் பரவல்கள் இருப்பதாக மருத்துவர்களே எச்சரித்து வருகின்றனர்.

foods monsoon diseases

இந்நிலையில் மழைக்காலத்தில் என்ன மாதிரியான உணவுகளை உட்கொள்ளலாம்? நோய் எதிர்ப்புச் சக்தியை எப்படி அதிகப்படுத்தலாம்? அதன் மூலம் எப்படி நோய் வராமல் தற்காத்துக் கொள்ளலாம்? என பல அறிவுரைகளை வழங்கி இருக்கிறார் டாக்டர் சுதா சேஷையன். அவர் இது பற்றிப் பேசுகையில், "பொதுவாக மழைக்காலங்களில் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க வேண்டியது நல்லது. மழைக்காலங்களில் வீடுகளில் பல இடங்களில் ஈரப்பதம் அதிகமாகக் காணப்படும். அப்படியான இடங்களில் ஒரு பூஞ்சை படியத் தொடங்கிவிடும். இந்தச் சூழல் நோய்க் கிருமிகள் செழித்து வளர்வதற்கு மிக ஏதுவாக இருக்கும். மேலும் மழைக்காலங்களில் நோய்க் கிருமிகள் இயல்பாகவே அதிகமாக உருவாகும்.

நல்ல நீருடன் கழிவுநீர் என்பது கலப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆகவே, அதன் மூலம் நீர் மூலமாகக் கிருமி பரவல் என்பது கூடுதலாகவே இருக்கும். சாலைகளில் கழிவு நீர் கலந்து வெளியேறுவதால், அதில் நாம் நடப்பதால் கிருமித் தொற்று உண்டாகும். ஆகவே, தோல் பிரச்சினைகள் உருவாகும். வீட்டில் உள்ள நீர்த் தொட்டிகளில் பூஞ்சை உருவாகும். அதைச் சமையலுக்குப் பயன்படுத்துவதால் உணவுகள் உடனடியாக கெட்டுவிடும். அதை உண்பதால் வயிறு தொடர்பான உபாதைகள், நோய்கள் ஏற்படும்.

foods monsoon diseases

காற்றில் ஈரப்பதம் உள்ளதால் அதில் கிருமி பரவலும் சேர்ந்தே இருக்கும். அதைச் சுவாசிப்பதனால் கிருமித் தொற்று ஏற்பட்டு நுரையீரல் சார்ந்த நோய்கள் வரலாம். அதனால் ப்ளூ ஜுரம் வரலாம். ஒருவரிடம் இருந்து தொற்றும் கிருமி மற்றவரையும் பாதித்து நோய் பரவல் அதிகமாகலாம். மழைக்காலம் என்றாலே வழக்கமான ஒரு மந்தநிலை இருக்கும். பலரும் உடல் சோம்பலாக இருப்பதை உணருவார்கள். இதுவும் மழைக்காலங்களால் ஏற்படும் பிரச்சினைதான். எனவே இதை சமாளிக்க நாம் வழக்காக உள்ளதைவிட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய உணவுகளை உண்ண வேண்டும். அதற்கு என்ன செய்யலாம்?

பழங்களை அதிகம் உட்கொள்ள வேண்டும். குறிப்பாக சி வைட்டமின் சத்துகள் நிறைந்த பழங்களை அதிகம் எடுத்துக்கொள்ள வேண்டும். தக்காளி, எலுமிச்சை, ஆரஞ்சு, ஆப்பிள் இவற்றை நேரடியாக எடுத்துக்கொள்ளலாம். சிலருக்கு எலுமிச்சை எடுப்பதால் உடனடியாக ஜலதோஷம் வரலாம். அப்படியான பிரச்சினை உள்ளவர்கள் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சையைக் கலந்து குடிக்கலாம்.

அப்படி இல்லை எனில் முளைக் கட்டிய தானியங்களில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதையும் சேர்த்துக் கொள்ளலாம். மழைக் காலங்களில் லேசான வெயில் கிடைத்தாலும், அதில் சற்று நிற்பது நல்லது. அதன் மூலம் வைட்டமின் டி கிடைக்கும். அப்படி சூரிய ஒளி மூலம் பெறும் வைட்டமின் டி நமது கல்லீரலையும் சிறுநீரகத்தையும் ஆக்டிவ் ஆக்கும். அது கிடைக்காத பட்சத்தில் வைட்டமின் டி மாத்திரைகளை மருத்துவர் ஆலோசனை பெற்றுச் சேர்த்துக் கொள்ளலாம். இதனால் தோல் சார்ந்த பிரச்சினைகள் வராமல் தவிர்க்க முடியும்.

புரதச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்வது அவசியம். அதாவது சோயா, அவரைக் காய், இறைச்சி உணவுகளைச் சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. அதேபோல் ஆண்டி ஆக்சிடென்ட் நிறைந்த உணவுகள் கட்டாயம் தேவை. இந்தச் சத்துகள் எதில் உள்ளன என்றால், அதிக நிறம் கொண்ட பீட்ரூட், கேரட், குடை மிளகாய் போன்ற காய்கறிகளை உட்கொள்ள வேண்டும்.

இதைவிட மிக முக்கியம் அதிகமாக நீர் அருந்தவேண்டும். மழைக் காலம் என்பதால் அதிக தாகம் இருக்காது. அதனால் பலர் நீர் அருந்த மாட்டார்கள். அப்படி இல்லாமல் அதிகமாகத் தண்ணீர் குடிக்க வேண்டும். வழக்கமான எடுத்துக் கொள்ளும் உப்பைவிடக் குறைவான அளவு பயன்படுத்த வேண்டும். பால் தவிர்த்துவிட்டு தயிரை எடுத்துக் கொள்ளலாம். புளித்துப்போன தயிரைப் பயன்படுத்த வேண்டாம். தயிர் சாப்பிடுவதால் புரோபயாடிக் சத்து கிடைக்கும். இது குடலில் உள்ள பாக்டீரியாவை அதிகப்படுத்தும். அது உணவுகள் வழியாக ஏற்படும் நோய்களைக் குறைக்கும். ஒருவகையில் இது நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகப்படுத்தும்.

சர்க்கரை அளவை கட்டாயம் குறைத்துக்கொள்ள வேண்டும். சர்க்கரை அளவு உடலில் கூடினால் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்துவிடும். சர்க்கரை நோயாளிகள் மட்டும் இல்லாமல் பொதுவாகவே அனைவருமே மழைக்காலங்களில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவது நன்மை தரும். மழைக்காலங்களில் காரமான உணவு வகைகளைச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும் எனப் பலரும் நினைப்பார்கள். ஆனால், காரமான உணவுகளைத் தவிர்ப்பதுதான் புத்திசாலித்தனம்.

இப்படி கார உணவுகளை மழை நேரத்தில் உண்பதால் ஒவ்வாமைகள் அதிகம் வரும். இரவு நேரங்களில் குறைந்தது 7 மணிநேரம் தூங்குவது நல்லது. இந்த உறக்கம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும். நல்ல உறக்கம் தேவை என்றால் நமது போர்வை, பெட், தலையணை ஆகியவை தூய்மையாக இருக்க வேண்டும்" என்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+