தவெகவில் இணையப் போகிறீர்களா?.. 25 எம்.எல்.ஏக்களில் இப்போது 17 பேர் தான்.. டென்ஷனாகிய சி.வி.சண்முகம்
சென்னை: அதிமுகவில் எம்எல்ஏக்கள் அணிமாறும் விவகாரம் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.பி.வேலுமணி - சி.வி.சண்முகம் அணியில் இருந்த சில எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி மற்றும் தவெக தரப்புக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், "25 என்பது 35 ஆக மாற எவ்வளவு நேரம் ஆகப் போகிறது?" என சி.வி.சண்முகம் டென்ஷனாக பதிலளித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
அதிமுக இரண்டு பிரிவுகளாகப் பிரிந்த நிலையில் எஸ்.பி வேலுமணி மற்றும் சிவி சண்முகம் அணியிலிருந்து சில எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் சென்றுள்ளனர். அதிமுக உள்கட்சி பூசல் விவகாரத்தில் அதிருப்தியடைந்த அணியினர் தற்போது எடப்பாடி பழனிசாமியுடன் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. இந்நிலையில், எஸ்பி வேலுமணி மற்றும் சி.வி சண்முகம் தலைமையிலான 25 எம்எல்ஏக்கள் கொண்ட அணியில் இருந்து 3 பேர் எடப்பாடி அணிக்கு தாவியிருக்கின்றனர்.

இதைத்தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்.எல்.ஏ க்களின் எண்ணிக்கை தற்போது 25 ஆக உயர்ந்துள்ளது. மேலும், வேலுமணி தரப்பு ஆதரவு எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 22 ஆக குறைந்துள்ளது. சுகுமார், ஹரிபாஸ்கர், மோகன் ஆகிய மூன்று எம்எல்ஏக்கள் தான் சி.வி.சண்முகம் தலைமையிலிருந்து எடப்பாடி தலைமைக்கு தாவி உள்ளனர். அதேபோல, 3 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு தாவியுள்ளனர்.
இதனால், எஸ்.பி.வேலுமணி, சிவி சண்முகத்தின் அணியின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 17 ஆக குறைந்துள்ளது. இந்நிலையில், அதிமுகவில் மீண்டும் உள்கட்சிப் பரபரப்பு கிளம்பியுள்ளது. கட்சியின் தற்போதைய எம்எல்ஏ எண்ணிக்கை மற்றும் சிலர் வேறு அணிகளுக்கு நகர்கிறார்களா என்ற கேள்வி அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.
எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து மாறியுள்ளது குறித்த கேள்விக்கு சிவி சண்முகம் டென்ஷனாகி பதிலளித்துச் சென்றது பரபரப்பை ஏற்படுத்தியது. 3 எம்எல்ஏக்கள் தவெக அணிக்குச் சென்றுள்ளதாகவும், மேலும் 5 பேர் எடப்பாடி பழனிசாமி அணியுடன் இருப்பதாகவும் எழுந்த கேள்விக்கு, முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் "வில் டாக் லேட்டர்" என சுருக்கமாக பதிலளித்தார்.
எஸ்பி வேலுமணி, சிவி சண்முகத்தின் 25 எம்எல்ஏக்கள் தற்போது 17 ஆக குறைந்துவிட்டதாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "25 என்பது 35 ஆக மாற எவ்வளவு நேரம் ஆகப் போகிறது?" என்று சற்று டென்ஷனாக பதிலளித்தார். இந்த பதில் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது. மேலும், தவெகவில் இணையப் போகிறீர்களா என்ற கேள்விக்கு தேவையில்லாத கேள்விகள் வேண்டாம் என்று கூறினார்.
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் விளக்கம் அளிக்கப்படும் என்றும், எல்லா கேள்விகளுக்கும் சரியான நேரத்தில் பதில் தரப்படும் என்றும் சி.வி.சண்முகம் தெரிவித்தார். தற்போது அதிமுகவில் நடக்கும் இந்த அரசியல் நகர்வுகள், 2026 தேர்தலை முன்னிட்டு முக்கியத்துவம் பெறத் தொடங்கியுள்ளது.












Click it and Unblock the Notifications