திசை மாறும் புயல்..13 மாவட்டங்களில் இன்று கனமழை..தமிழகம் தப்பித்ததா? வானிலை சொல்வதென்ன?
சென்னை: அந்தமான் அருகே வங்கக் கடலில் 10ஆம் தேதி புயல் உருவாகக்கூடும் எனவும் புயலானது தமிழகத்தை விட்டு விலகிச்செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் 13 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்னி நட்சத்திர அனலே தெரியாத வகையில் தமிழ்நாட்டில் பல ஊர்களில் கோடை மழை பெய்து வருகிறது. தென்னிந்திய பகுதியில் உருவான வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நேற்றும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.

இந்நிலையில், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தென்கிழக்கு வங்கக்கடல் அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக விரைவில் வலுவடையும். அது தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய கிழக்கு மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வரும் 10ஆம் தேதி புயலாக வலுபெறக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்றைய தினம் கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனியில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை, விருதுநகர், தென்காசி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் புதுச்சேரியில் இன்று தொடங்கி 11ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும். அத்துடன், 11ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரியில் படிப்படியாக 2 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரையில் வெப்பம் உயரும்.
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியும், அதற்கு பிறகு காற்றழுத்த தாழ்வு மண்டலமும் உருவாக உள்ளதால், தென் கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதியில் மணிக்கு 50 முதல் 60 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் உருவான புயல் தமிழ்நாட்டை விட்டு விலகிச்செல்ல வாய்ப்பு உள்ளதாகவும் மியான்மர் வங்கதேசத்தை நோக்கி புயலானது நகர வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.












Click it and Unblock the Notifications