கடலூர்-பாம்பன் நடுவே நாளை மாலை கரையை கடக்கிறது கஜா புயல்!
Recommended Video

சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள 'கஜா' புயல் கடலூர் மற்றும் பாம்பன் நடுவே நாளை மாலை கரையை கடக்கிறது. இதையொட்டி புயலால் பாதிக்க வாய்ப்பு உள்ள மாவட்டங்களில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது.
வங்கக்கடலில், அந்தமான் அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நவம்பர் 10ம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது மேலும் வலுப்பெற்று கடந்த 11ம் தேதி புயலாக மாறியது.
இந்த புயலுக்கு கஜா என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் கணிப்புப்படி, இந்த புயல், கடலூர் மற்றும் ஸ்ரீஹரிகோட்டா நடுவே 15ஆம் தேதி பிற்பகலில் கரையை கடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
[கஜா வருவது இருக்கட்டும்.. ஆனால் சென்னைக்கு என்ன கிடைக்கும்.. இங்கே வெயிலா இருக்கே!]

நாளை கரையை கடக்கும்
ஆனால் கஜா புயலின் திசை நேற்று முன்தினம் திடீரென மாறியது. இதனால் கடலூர் மற்றும் பாம்பன் நடுவே நாளை மாலையில் இந்த புயல் கரையை கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்து உள்ளது. புயல் கரையை கடக்கும்போது, மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், சில நேரங்களில் அதிகபட்சமாக 100 கிலோ மீட்டர் வேகத்திலும், பலத்த காற்று வீசக்கூடும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
புயல் மற்றும் மழை பீதி காரணமாக, கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மற்றும் ராமநாதபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களிலும், புதுச்சேரியின், காரைக்கால் மாவட்டத்திலும் நாளை, பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட மாவட்டங்களில் கனமானது முதல் மிகக் கனமானது வரை, மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

சென்னை வானிலை
சென்னையை பொறுத்த அளவில், வியாழக்கிழமை காலை முதல், மூன்று நாட்களுக்கு மிதமான மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயலால் சென்னைக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது. புயல் காரணமாக, மீனவர்கள் 15ம் தேதி வரை கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முன்னெச்சரிக்கை
புயல் காரணமாக, ராமேஸ்வரத்திற்கு செல்லக்கூடிய மற்றும் அங்கிருந்து பிற நகரங்களுக்கு புறப்பட கூடிய ரயில்கள், வியாழக்கிழமை, ரத்து செய்யப்பட்டுள்ளன. புயலை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகங்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடலூரில் பேரிடர் மீட்பு சிறப்பு அதிகாரியாக ககன்தீப் சிங் பேடி நியமிக்கப்பட்டுள்ளார். இரு தினங்களுக்கு முன்பாகவே, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், புயலை எதிர்கொள்வது, தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி அறிவுரைகள் வழங்கி உள்ளார்.












Click it and Unblock the Notifications