வேட்டி, சட்டை, பழைய சோறு! தமிழினத்தையே அவமானப்படுத்திய ஒடிஸா பாஜக
சென்னை: தனிமனிதனை அவமானப்படுத்துவதாக நினைத்து ஒட்டுமொத்த தமிழினத்தையும் ஒடிஸா பாஜக தனது விளம்பரம் மூலம் அவமானப்படுத்திவிட்டதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தனது எக்ஸ் வதைளத்தில் கூறியிருப்பதாவது:

"தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை நாம் உணர்ந்தவர்கள்! அறிந்தவர்கள்!
ஒரு தமிழன் ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்று விடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பாஜக ஏவியது!
தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ் இனத்தை இழிவுபடுத்தி பார்க்க வேண்டும் நோக்கத்தில் தமிழர் பாரம்பரியமிக்க வேட்டி-சட்டையுடன் ஒருவர் வாழை இலையில் உணவருந்துவதை போலவும் அதை மற்றொருவர் கேலி செய்வதை போலவும் ஒரு தேர்தல் விளம்பரத்தை பாஜக வெளியிட்டுள்ளது.
வி.கே.பாண்டியன் அவர்களை போன்ற ஒருவர் வேட்டி-சட்டை அணிந்து இருப்பதாக அனைத்து விளம்பரங்களிலும் பாஜக சித்தரித்துள்ளது.
உலகிற்கே நல்வழியையும் பாரம்பரியத்தையும் கற்று கொடுத்த முதல் இனம் தமிழினம்!
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே இலக்கியத்திலும் அறிவியலிலும் அனைவருக்கும் முன்னோடியாக இருந்தவர்கள் தமிழர்கள்!
என்பது பாஜகவிற்கு தெரிய வாய்ப்பில்லை.
ஒரு தனி மனிதனை அவமானப்படுத்துவதாக எண்ணி ஒட்டுமொத்த தமிழினத்தையும் பாஜக அவமதித்துள்ளது.
எல்லாவற்றிலும் ஒரே நாடு என கொக்கரிக்கும் பாஜக.. எதற்காக வி.கே.பாண்டியனை கண்டு அஞ்சுகிறது?
கடந்த ஆண்டு இதே நாளில் இதே வி.கே.பாண்டியன் தான் ஒடிசா ரயில் விபத்தின் போது படுகாயமடைந்து இருந்த தமிழர்களுக்கு தேவையான இரத்தமும் உரிய சிகிச்சையும் உடனடியாக கிடைப்பதற்கு உறுதுணையாக நின்றவர். தான் பிறந்த மண்ணிற்கும் இருக்கும் மண்ணிற்கும் உள்ள மக்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான சிகிச்சை அளிக்குமாறு மருத்துவமனைக்கு நேரில் சென்று அறிவுறுத்தியவர்.
"தமிழன் என்றோர் இனமுண்டு,தனியே அவர்க்கொரு குணமுண்டு" என்ற நாமக்கல் கவிஞரின் வரிகளை நாம் உணர்ந்தவர்கள்!அறிந்தவர்கள்!
— DJayakumar (@djayakumaroffcl) June 3, 2024
ஒரு தமிழன் ஒடிசாவில் முதன்மையான இடத்திற்கு சென்று விடக் கூடாது என்று எத்தனையோ இழிசொற்களை பாஜக ஏவியது!
தற்போது இன்னும் ஒரு படி மேலே சென்று தமிழ் இனத்தை… pic.twitter.com/If5PeO1HzI
ஒரு மனிதனை இனத்தாலும் மொழியாலும் மதத்தாலும் பிரித்து, பிரிவினைவாதம் என்ற விழியின் வழியாக தான் பாஜக பார்க்கிறது. மதுரை மண்ணின் இந்த மறத்தமிழன் அறத்தின் வழி நின்று வென்று காட்டுவார்! இவ்வாறு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.
உலகத்தின் எந்த மூலை முடுக்குக்கு போனாலும் தமிழ் குறித்து பிரதமர் மோடி பெருமையாக பேசி வருகிறார். இந்த நிலையில் ஒடிஸாவில் பாஜக தேர்தல் பிரச்சாரத்தின் போது ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் உதவியாளரும் தமிழருமான வி.கே.பாண்டியனை விமர்சிக்கும் நோக்கில் தமிழர்களை திருடர்கள் என்ற தொனியில் பிரதமர் மோடி பேசியிருந்தார். இவரது பேச்சுக்கு கண்டனங்கள் எழுந்த நிலையில் கூட தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிக்கவில்லை.
மேலும் தமிழக பாஜகவும் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் ஒடிஸா பாஜக தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அதில் தமிழர்களையும் அவர்களின் உணவு பழக்கத்தையும் அவதூறு செய்துள்ளது. அந்த வீடியோவில் தென்னிந்திய கலாச்சார உடையான வேட்டி- சட்டை அணிந்து நபர் ஒருவர் ஹோட்டலுக்கு செல்கிறார்.
அங்கே அவருக்கு பழைய கொடுக்கப்படுகிறது. அதை அவர் பாத்திரத்தில் சாப்பிடாமல் ஹோட்டல் ஊழியரிடம் சண்டையிட்டு இலையில் போட்டு சாப்பிட முயலும் போது சாதமும் அதிலிருந்த தண்ணீரும் வெளியே ஓடுகிறது. இந்த நிலையில் ஹோட்டல் ஊழியர் சப்பாத்தி எடுத்து வரும் போது தோசை என்று அந்த நபர் கேட்பது போன்று வீடியோவில் இடம் பெற்றிருந்தது. இதற்கு தமிழகத்தில் கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன.












Click it and Unblock the Notifications