கட்டுக்கடங்காமல் பரவும் கொரோனா.. மேலும் ஒரு மாதம் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு... பலன் தருமா?
சென்னை: தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 2,579 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மாநிலத்தில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கையும் 15,879ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
நாட்டில் கொரோனா பரவல் தற்போது மீண்டும் அதிகரித்துள்ளது. மரபணு மாறிய கொரோனா வகை வைரஸ் பரவல் அதிகரித்தற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. தமிழ்நாட்டிலும் வைரஸ் பரவல் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. தமிழ்நாட்டில் தற்போது அமல்படுத்தப்பட்டுள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஏப்ரல் 30ஆம் தேதி வரை தொடரும் மாநில அரசு அறிவித்துள்ளது.
தினசரி கொரோனா பாதிப்பு
இருப்பினும், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு 2000ஐ கடந்திருந்த நிலையில், பல மாதங்களுக்குப் பின் இன்று மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2,500ஐ கடந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் மாநிலத்தில் புதிதாக 2,579 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒட்டுமொத்த கொரோனா பாதிப்பு 8,86,673ஆக அதிகரித்துள்ளது.
ஆக்டிவ் கேஸ்கள்
அதேபோல மாநிலம் முழுவதும் தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கையும் 15 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை நேற்று 14,846ஆக இருந்த நிலையில், இன்று அது 15,879ஆக உயர்ந்துள்ளது. அதேபோல இன்று மட்டும் 1,527 பேர் கொரோனா சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கொரோனா உயிரிழப்பு
இன்று மாநிலம் முழுவதும் 19 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுவரை 12,719 பேர் மாநிலத்தில் கொரோனா காரணமாகப் பலியாகியுள்ளனர். இன்று மட்டும் மாநிலத்தில் 83,713 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதுவரை 1.95 கோடி பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தலைநகரில் அதிகரிக்கும் கொரோனா
தலைநகர் சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 969 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தலைநகரில் 7 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மேலும், கோவையில் 273 பேருக்கும் செங்கல்பட்டில் 250 பேருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல திருவள்ளூர் (130), தஞ்சை (106) ஆகிய மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 100ஐ கடந்துள்ளது.