வடகிழக்குப் பருவமழைக்கு முன்பே நிரம்பிய அணைகள் - மேட்டூர் அணை 101 அடி, முல்லைப்பெரியாறு 137 அடி
வடகிழக்குப் பருவமழை துவங்க உள்ள நிலையில் தமிழகத்தில் மிக முக்கிய அணைகள் நிரம்பி வழிகின்றன. மேட்டூர் அணை 101 அடியை எட்டியுள்ளது. முல்லைப்பெரியாறு அணை 137 அடியாக உயர்ந்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை துவங்குவதற்கான சாதகமான சூழ்நிலை உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்மேற்குப் பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் பல அணைகளில் தண்ணீர் நிரம்பி வழிகிறது. மேட்டூர் அணை 101 அடியாகவும், முல்லைப்பெரியாறு அணை 137 அடியாகவும் உள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
Recommended Video
தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை முடிந்து வடகிழக்குப்பருவமழை தொடங்க உள்ளது. அக்டோபர் முதல் டிசம்பர் வரை வடகிழக்குப் பருவமழைக் காலமாகும். ஆண்டு தோறும் அக்டோபர் இரண்டாவது வாரத்தில் பருவமழை தொடங்கும். கடந்த ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதியன்று பருவமழை தொடங்கியது. இரண்டு புயல்கள் காரணமாக அதிக அளவு மழை கிடைத்தது. இயல்பை விட 6 சதவிகிதம் அதிக மழை தமிழகத்திற்கு கிடைத்ததாக வானிலை மையம் கூறியுள்ளது.
நடப்பாண்டு தென்மேற்குப் பருவமழை இயல்பை விட அதிகமான அளவு பெய்துள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழ்நிலை நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணை உடைய வாய்ப்பு.. 35 லட்சம் பேருக்கு ஆபத்து.. உச்சநீதிமன்றத்தில் ஜாய் ஜோசப் மனு
101 அடியை எட்டிய மேட்டூர் அணை
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த பல வாரங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. அதன் காரணமாக மேட்டூர் அணையின் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வந்தது. இந்த ஆண்டு முதன் முறையாக ஞாயிறன்று காலை 11 மணிக்கு 100 அடியை எட்டியது. அணையின் நீர்மட்டம் 100 அடியை தொடர்ந்து காவிரி டெல்டா விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த ஆண்டு 4 முறை 100 அடியை தொட்டது. ஆனால் இந்த ஆண்டு முதல்முறையாகவும் ஒட்டு மொத்தமாக 67வது முறையாகவும் நீர்மட்டம் 100 அடியை எட்டி உள்ளதாக பொதுப்பணித்துறை அறிவித்து உள்ளது. அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் பாசனத்துக்கான தேவை குறையும். அந்த தருணத்தில் மேட்டூர் அணை நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
137 அடியை எட்டிய அணை நீர் மட்டம்
கேரளாவில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக முல்லைப்பெரியாறு அணை வேகமாக நிரம்பி வருகிறது. முல்லைப்பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழையின் வேகம் அதிகரி்த்து இருப்பதால், அணைக்கு வரும் நீரின் அளவும் அதிகரித்துள்ளது. இடுக்கி மாவட்டத்தின் வண்டிப்பெரியாறு, சப்பாத்து, உப்புத்துறை, கரிங்குள் ஆகிய நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்த மிகக்கனமழையால் அணை நீர்மட்டம் மளமளவென தற்போது உயர்ந்து 137அடியை எட்டியுள்ளது.
தொடரும் கனமழை
முல்லைப் பெரியாறு அணையில் 142 அடி வரை நீர் தேக்கலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை நீடிப்பதால் விரைவில் அணை நிரம்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று காலை முதலே தேனி மற்றும் சுற்றுவட்டப் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தேனி நகர், அல்லிநகரம், பொம்மையகவுண்டன்பட்டி, ரத்தினம் நகர், பங்களாமேடு, கருவேல்நாயக்கன்பட்டி, அன்னஞ்சி, பழனிசெட்டிபட்டி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது.
அணைகளில் நீர் மட்டம்
நீலகிரி மாவட்டத்தில் பெய்த தொடர்மழையால் பில்லூர் அணை நிரம்பி வழிகிறது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை முழு கொள்ளளவை எட்ட உள்ளது. பரம்பிக்குளம்-ஆழியாறு ஆகியவை முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளன. சோலையாறு அணை நிரம்பியுள்ளது. அதே போல கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளும் நிரம்பியுள்ளன.
வெள்ள அபாய எச்சரிக்கை
கர்நாடகா பகுதிகளில் கனமழை தொடர்வதால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூரை அடுத்த கெலவரப்பள்ளி நீர்தேக்க அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் முழு கொள்ளளவான 44.28அடிகளில் 41.33 அடிகள் நீர் சேமிக்கப்பட்டுள்ளது தற்போது அணைக்கு வினாடிக்கு 740 கனஅடியாகவும் அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் வரத்தாக உள்ள 740 கனஅடிநீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நிரம்பும் நிலையில் உள்ளதால் அணை மற்றும் ஆற்றங்கரையோர மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.
பருவமழை சாதகம்
தென்இந்தியாவில் தென்மேற்குப்பருவமழை விலகி வரும் 26ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுக்கோட்டை, டெல்டா மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, திருச்சி, விழுப்புரம், கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்காலிலும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.