ED அதிகாரி கைது: தலைமை செயலகத்திலே சோதனை நடத்துறாங்க.. ED அலுவலகத்தில் நடத்தக்கூடாதா? ஜோதிமணி சுளீர்
சென்னை: மதுரை அமலாக்கத்துறை அதிகாரி லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தலைமைச் செயலகத்தில் ED ரெய்டு நடத்தும்போது, ED அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்தக்கூடாதா? என்று ஜோதிமணி விமர்சித்துள்ளார்.
திண்டுக்கல்லைச் சேர்ந்த அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் டாக்டர் சுரேஷ் பாபு மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்திருந்தது. வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிந்தது. இந்த நிலையில் டாக்டர் சுரேஷ் பாபுவிடம் ரூ.3 கோடி லஞ்சம் இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்வதாக மதுரை அமலாக்கத்துறை அதிகாரியான அங்கித் திவாரி கூறியுள்ளார்.

இதன்படி முதல் கட்டமாக ரூ.20 லட்சத்தை சுரேஷ் பாபுவிடம் இருந்து கடந்த மாதம் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பெற்றுக்கொண்டார். ஆனால் மேலும் ரூ.31 லட்சம் தந்தாக வேண்டும் என அங்கித் திவாரி டாக்டர் சுரேஷ் பாபுவை மிரட்டி இருக்கிறார். இதனால் டாக்டர் சுரேஷ் பாபு லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார். புகாரின்பேரில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக பிடிக்க முடிவு செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்; அதன்படி இன்று பணத்தை வாங்க வந்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை அங்கித் திவாரியிடம் கொடுக்க சுரேஷ் பாபுவுக்கு அறுவுறுத்தியுள்ளனர். இதன்படியே ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி கைது செய்யப்பட்டதை அடுத்து மதுரையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த சென்றனர். ஆனால் அங்கு சோதனை நடத்த மறுக்கப்பட்டது. பின்னர் அங்கித் திவாரி அலுவலகத்தில் மட்டும் சோதனை நடத்த அனுமதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆஜர்படுத்தினர்.
சுந்தர்ராஜன் கருத்து: அவரை டிசம்பர் 15 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அமலாக்கத்துறை மீது விமர்சனம் செய்து பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், தமிழ்நாட்டில் அமலாக்க துறைக்கு இடம் இல்லை என்று அறிவிக்க வேண்டும் என்று பூவுலகின் நண்பர் அமைப்பின் தலைவர் சுந்தர்ராஜன் ட்வீட் பதிவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட் பதிவில், "அமலாக்கத்துறையின் அலுவலர் அங்கித் லஞ்சம் வாங்கியதால் கைது செய்துள்ளது தமிழ்நாடு அரசின் லஞ்ச ஒழிப்புதுறை. சிறப்பு. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அமலாக்கதுறை அலுவலகங்களிலும், வருமான வரித்துறை அலுவலகங்களிலும் சோதனை நடைபெற வேண்டும். தமிழ்நாட்டில் அமலாக்க துறைக்கு இடம் இல்லை என்பதையும் அறிவிக்க வேண்டும்" என்று பதிவிட்டுள்ளார்.
ஜோதிமணி ட்வீட்: இதேபோல் காங்கிரஸ் எம்பி ஜோதிமணி தலைமைச் செயலகத்தில் ED ரெய்டு நடத்தும்போது, ED அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை நடத்தக்கூடாதா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தமிழ்நாட்டின் தலைமைச் செயலகத்தில் அனுமதியின்றி நுழைந்து அமலாக்கத்துறை சோதனை செய்யும் பொழுது, லஞ்சம் பெற்று கையும் களவுமாகப் பிடிபட்ட அமலாக்கத்துறை அதிகாரியின் அறையை லஞ்ச ஒழிப்புத்துறை ஏன் சோதனை செய்யக்கூடாது?" என்று பதிவிட்டுள்ளார்.
ஷா நவாஸ் ட்வீட்: இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணை பொதுச்செயலாளர் ஷா நவாஸ் மதுரை அமலாக்கத்துறை அதிகாரி கைது குறித்து கருத்து பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள ட்விட் பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:- தலைமைச் செயலகத்தில் ED ரெய்டு நடத்தும்போது, ED அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்தக்கூடாதா? சந்தேகத்தின் பெயரில் ED எங்கும் நுழையலாம் எனில், சான்றுகளுடன் லஞ்ச ஒழிப்புத் துறை நுழையக்கூடாதா? லஞ்ச ஒழிப்புத்துறையை துணை ராணுவம் தடுக்கும் எனில், ED-யை போலீஸ் தடுத்தால் என்ன? இவ்வாறு ஷா நவாஸ் பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications