வட்டிக்கு வட்டி... வசூல்வேட்டையில் இறங்கிய தனியார் வங்கிகள்... கடிவாளம் கோரும் வாடிக்கையாளர்கள்
சென்னை: வங்கிக்கடன் தவணைகளை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடையும் நிலையில் இ.எம்.ஐ. வசூலிப்பில் மும்முரம் காட்டத் தொடங்கியுள்ளன தனியார் வங்கிகள்.
கொரோனா தாக்கத்தால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பலரும் வேலை வாய்ப்பிழந்து தவிக்கும் சூழலில் வங்கிகளின் இந்த நெருக்கடி அவர்களுக்கு பெரும் மன உளைச்சலை கொடுத்திருக்கிறது.
இதனால் பல இடங்களில் வங்கி ஊழியர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் வாக்குவாதத்தில் தொடங்கி கைகலப்பு வரை நீள்கிறது.

ஊரடங்கு அமல்
கடந்த மார்ச் மாதம் இறுதி முதல் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இப்போதும் கூட ஊரடங்கில் தளர்வுகள் தான் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர பொதுமுடக்கம் முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. செப்டம்பர் 30-ம் தேதி வரை பொதுமுடக்கம் நீட்டிக்கப்பட்டு மாவட்டங்களுக்குள் மட்டும் பேருந்துகளை இயக்க அரசு முடிவெடுத்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் வெளிமாவட்டங்களுக்கு வேலைக்கு செல்பவர்களின் நிலை திண்டாட்டமாக இருந்து வருகிறது.

வருமானமின்றி
தனியார் துறை நிறுவனங்களில் பணியாற்றி வந்த பெரும்பாலானோர் வேலையை பறிகொடுத்துவிட்டு நிற்கதியாக நிற்பதையும் சொற்ப ஊதியத்திற்கு புதிய பணிகளில் சேர்வதையும் காண முடிகிறது. மிகப்பெரிய தொழில் நிறுவனங்களே பொதுமுடக்கம் காரணமாக ஆட்டம் கண்டுள்ள நிலையில் சாமானியர்கள் நிலையை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்தளவுக்கு பொருளாதாரத்தை அழிக்கும் சுனாமியாக இந்த கொரோனா ஊரடங்கு அனைவரையும் கபளீகரம் செய்துவிட்டது.

தனியார் வங்கிகள்
இந்நிலையில் ஆகஸ்ட் 31-ம் தேதி வரை அதாவது இன்று வரை வங்கிக்கடன் தவணைகளை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை ரிசர்வ் வங்கி வழங்கியுள்ளது. இருப்பினும் ஆகஸ்ட் 20-ம் தேதி முதலே தனியார் வங்கி கடன் வசூலிப்பு மையங்களில் இருந்து வாடிக்கையாளர்களை தொடர்புகொண்டு இ.எம்.ஐ. தொகை மற்றும் அதற்கான வட்டித்தொகையை செலுத்த கட்டாயப்படுத்தி வருகின்றனர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய விவேக் என்பவர், முன்னணி தனியார் வங்கி ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு அசலுக்கும், வட்டிக்கும் சம்பந்தமில்லாத வகையில் கணக்கு கூறுவதாக வேதனைத் தெரிவித்தார்.

அசாதாரண சூழல்
இதனிடையே தற்போது இருப்பது பேரிடர் காலம் என்பதை மறந்து வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தும் பழக்கம் வாடிக்கையாளர்களுக்கு மறந்து போகும் என்ற இட்டுக் கட்டிய கதைகளை வங்கி நிர்வாகங்கள் பரப்புவது வாடிக்கையாளர்கள் விரோத போக்கின்றி வேறு என்னவாக இருக்க முடியும். தனிநபர் வருமானம் எந்தளவிற்கு பாதிப்படைந்துள்ளது என்பதை சீர்தூக்கி பார்க்காமல் தான்தோன்றிதனமாக குண்டர்கள் மூலம் கடன் வசூலிப்பில் ஈடுபட்டதன் விளைவாக தஞ்சையில் இரண்டு நாட்களுக்கு முன்னர் அப்பாவி ஒருவர் உயிரிழந்துள்ளார். ஒரிரு மாதங்களுக்கு முன்னர் தாராபுரம் அருகே விவசாயி பூச்சி மருந்து அருந்தி உயிரிழந்தார்.

2020 டிசம்பர் வரை
வங்கிக்கடன் தவணைகளை திருப்பிச் செலுத்துவதற்காக கால அவகாசத்தை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என அரசியல் கட்சித் தலைவர்கள் ரிசர்வ் வங்கி ஆளுநருக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 6 மாதங்கள் நீட்டிக்கப்படவில்லை என்றால் கூட மேற்கொண்டு 3 மாதங்கள் அதாவது நவம்பர் இறுதி வரையாவது கால அவகாசம் அளிக்கப்பட்டால் இழந்த வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க பலருக்கும் ஒரு நல் வாய்ப்பாக அமையும்.












Click it and Unblock the Notifications